நாடாளும் மன்னன் எவ்வாறு இருக்கவேண்டும் ?
எக்காலத்துக்கும் பொருந்தும் அறிவுரைகள் .....
* அரசன் கொக்கைப்போல ஒரே நினைவாக இருந்து காரியத்தை முடிக்க வேண்டும்.
* சிங்கத்தைப் போல பயமின்றி தன் ஆற்றலை வெளிப்படுத்த வேண்டும்.
* ஓநாய் போல் பதுங்கிப் பாய்ந்து பகையை அழிக்க வேண்டும். அம்பு போல திரும்பாமல் பகைவர் மேல் செலுத்த வேண்டும்.
*குடி, சூது, வேட்டை, பாட்டு, இசை ஆகியவற்றை அளவுடன் அனுபவிக்க வேண்டும்.
* குருடனாக இருக்க வேண்டிய நேரத்தில் குருடனாக இருக்க வேண்டும்.செவிடனாக இருக்க வேண்டிய நேரத்தில் செவிடனாக இருக்க வேண்டும்.
* காலம், இடம் அறிந்து செயல் பட வேண்டும். பகை வலிமையையும், தன் வலிமையையும் இருபக்கமும் துணையாவார் வலிமையையும் சீர் தூக்கிப் பார்த்துச் செயல்பட வேண்டும்.
* எந்த அரசன் பகைவனைத் தண்டத்தால் அடக்க வில்லையோ அந்த அரசன் அச்வத்ரி என்ற விலங்கு தன் கருவினால் அழிவது போல அழிவான். (அச்வத்ரி என்னும் விலங்கின் கரு தாயின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வெளியே வரும்).
* அரசன் நன்றாகப் பூவுள்ளதாக இருந்தும் கனியில்லாத மரம் போல திகழ வேண்டும். கனியுள்ளதாக இருந்தும் ஏற முடியாத மரம் போல இருக்க வேண்டும்.பழுக்காமல் இருந்தும் பழுத்தது போல காட்சி தர வேண்டும்.
* பகை வரும்வரை அஞ்சுவது போல காணப்பட வேண்டும். பகைவர் வந்து விட்டாலோ அஞ்சாமல் போரிட வேண்டும். வரும் துன்பத்தை முன்னதாக தெரிந்து கொண்டு அகற்ற வேண்டும்.
* வந்த நன்மையை இழப்பதும், வராததற்கு ஏங்குவதும் அரசர்க்கு இயல்பு அல்ல.
* பகைவருடன் சமாதானம் செய்து கொண்டோம் என அரசன் நிம்மதியாக இருக்கக் கூடாது அப்படி நிம்மதியாக இருப்பவன், மரத்தின் நுனியில் உறங்குபவது போல் ஆகும். அதாவது மரத்தின் நுனியில் இருப்பவன் எந்நேரத்திலும் கீழே விழக்கூடும். அதுபோலப் பகைவரிடம் அதிக நம்பிக்கைக் கொண்டவனுக்கும் எந்நேரத்திலும் அழிவு ஏற்படக் கூடும்.
* நண்பனிடத்தில் கூட அளவு கடந்த நம்பிக்கை கூடாது. அதிக நம்பிக்கை ஆபத்துக்கு வழி வகுக்கும் என்பதை அரசன் உணர்ந்து கொள்ள வேண்டும்.
* ஆராய்ந்து பார்க்காமல் யாரிடமும் நம்பிக்கை கொள்ளக் கூடாது. பிறப்பினால் யாரும் நண்பனுமில்லை, பகைவனும் இல்லை. செயல்களால்தான் பகையும் நட்பும் ஏற்படுகின்றன.
* ஆணவம் மிக்கவனும் நன்மை தீமை அறியாதவனுமான ஒருவன் உறவினனாய் இருந்தாலும் அரசுக்கு எதிராக நடந்துக் கொள்வானாயின் அவன் தண்டிக்கத் தக்கவன் ஆவான்.
* பகைவன் இனிக்க இனிக்க பேசினாலும் விட்டுவிடக் கூடாது. இனிமையாக பேசியே அவனை அடிக்க வேண்டும்.அடித்த பின்னரும் அன்புடன் பேச வேண்டும்.
* கனிவான பேச்சால், வெகுமதிகளால் பிறரைத் தன்பால் கவர்ந்து கொள்ள வேண்டும்.
* முன்பு பகையாய் இருந்தவனை எப்போதும் நம்பக் கூடாது. பழம்பகை நட்பாவதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
* காரணமின்றி யாரையும் பகைத்துக் கொள்ளக் கூடாது. கைகளால் நீந்திக் கடலை கடந்துவிட முடியாது. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும் என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும்.
* பகையைத் தொலைக்க முற்படுகையில் பூண்டோடு அழிக்க வேண்டும். பகையின் மிச்சமும் கடனின் மிச்சமும் தீயின் மிச்சமும் தீங்கையே தரும்.
* அரசன் கழுகைப் போல நீண்ட பார்வையுடையவனாக இருக்க வேண்டும்.
* கொக்கு போல அசைவற்ற தன்மையுடன் விளங்க வேண்டும்.
* நாயைப் போல எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.
* காக்கையைப் போல பிறரின் இங்கிதத்தை அறியும் தன்மையுடன் திகழ வேண்டும்.
* பாம்பைப் போல செல்லும் வழியைப் பகைவர் உணராதவாறு செயல் பட வேண்டும்.
* தீரனைப் பணிந்தும், பயந்தவனைப் பிரித்தாளும் சூழ்ச்சியைப் பயன்படுத்தியும், உலோபியைப் பொருள் கொடுத்தும்,நிகரானவரைப் போரிட்டும் அடக்கி ஒடுக்க வேண்டும்.
* மன்னன் மென்மையாக இருந்தால் பிறர் அவமதிப்பர். கடுமையாக இருந்தால் மிகவும் அஞ்சுவர். ஆதலால் அதிக மென்மையும், அளவுக்கு மீறிய கடுமையும் இன்றி சமயத்துக்கு ஏற்றபடி நடந்து கொள்ள வேண்டும்.
* அறிஞருடன் விரோதம் கூடாது. ஏனெனில் புத்திசாலிகளின் கைகள் நீண்டிருக்கும்.
* எந்தச் செயல் செய்ய முடியாது என்று தெரிகிறதோ அந்தச் செயலில் இறங்கக் கூடாது.
* ஆபத்துக் காலத்தில் இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு அரசன் ஆட்சி புரிய வேண்டும் என பாரத்துவாஜர் சத்ருந்தபனுக்குக் கூறினார்' எனப் பீஷ்மர் தருமரிடம் உரைத்தார்.
(இதில் அரசன் என வரும் இடங்களில் நாடாளும் தலைவன் என பொருத்திக்கொள்ளலாம்).

No comments:
Post a Comment