தலையெழுத்தை மாற்றும் பரிகாரம் :
தலையெழுத்தை படைப்புக்கடவுளான பிரம்மாவே தன் கையால் நம் தலையில் எழுதுவதாக ஐதீகம். அதனால் இதற்கு பிரம்ம லிபி என்றும் பெயருண்டு. இதன்படி நவக்கிரகங்களும் மனித வாழ்வில் நன்மையோ, தீமையோ ஏற்படுத்துகின்றன.
இறைபக்தியால் மட்டுமே பிரம்மலிபியை மாற்ற முடியும். அருணகிரிநாதர் முருகப்பெருமானைப் போற்றும்போது, நின் கால்பட்டு அழிந்தது அயன்(பிரம்மா) கையெழுத்தே என்று குறிப்பிடுகிறார். இதனால் தான், "பக்திக்கு மிஞ்சிய பரிகாரம் இல்லை" என்று சொல்லுவர்.
சேல்பட் டழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின்
மால்பட் டழிந்தது பூங்கொடி யார்மனம் மாமயிலோன்
வேல்பட் டழிந்தது வேலையுஞ் சூரனும் வெற்புமவன்
கால்பட் டழிந்ததிங் கென்றலை மேலயன் கையெழுத்தே.
பதவுரை .........
சேல் என்னும் மீன்கள் குதித்துத் திரிவதனால் திருச்செந்தூரில் உள்ள
வயல்கள் அழிந்துபோயின; மலர்க்கொடி போன்ற பெண்களின் மனமானது
சோலையிலுள்ள இனிமையான கடப்ப மலர்மாலையை விரும்பியதால்
அழிந்துபோயிற்று. பெருமைதங்கிய மயில்வாகனத்தையுடைய
திருமுருகப்பெருமானது வேலாயுதம் பட்டதால் கடலும் சூரபன்மனும்
கிரௌஞ்சமலையும் அழிந்துபோயின. இவ்வுலகில் கந்தவேளின்
திருவடிகள் அடியேனின் தலைமீது பட்டதால் பிரம்மதேவனால்
எழுதப்பட்டிருந்த ['விதி' என்னும்] கையெழுத்தும் அழிந்துபோயிற்று.
நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே
...... பதவுரை .........
நாட்கள் அடியேனை என்ன செய்யும்? வினைதான் என்ன செய்யும்?
அடியேனைத் தேடிவந்த கோள் தான் என்ன செய்யும்? கொடிய
இயமனால்தான் என்ன செய்யமுடியும்? குமரக்கடவுளின் இரண்டு
திருவடிகளும் சிலம்புகளும் சதங்கையும், தண்டைகளும் ஆறு
திருமுகங்களும் பன்னிருதோள்களும் கடப்ப மலர் மாலையும்
அடியேனுக்கு முன்வந்து தோன்றிடுமே.

No comments:
Post a Comment