Sunday 20 May 2018

படித்ததில் பிடித்தது.

படித்ததில் பிடித்தது.

இளம் வயது பெண் ஒருத்தி ஒரு பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தார். அடுத்த நிறுத்தத்தில் பருமனான பெண் ஒருவர் பல பைகளுடன் அந்தப் பேருந்தில் ஏறி அந்த இளம் வயது பெண்ணின் பக்கத்தில் அமர்ந்தார். அவரது பருத்த உடலும் பைகளும் அந்த இளம் பெண்ணை நெருக்கிக்கொண்டிருந்தன.
அந்த இளம் பெண்ணிற்கு அடுத்தப்பக்கத்தில் அமர்ந்திருந்த பயணி ஒருவர் இதனைப் பார்த்து அதிருப்தி அடைந்தார். உடனே அந்த இளம் பெண்ணிடம், "ஏன் எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கவில்லை. பேசாமல் இருக்கிறீர்," என ஆதங்கப்பட்டார்.
அப்பெண்ணோ புன்னகைத்தவாறு கூறினார்:
"நாம் சேர்ந்து பயணிக்கப்போவது மிகக் குறுகிய நேரம்தான். எனவே, அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதை குறைவாகப் பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நான் அடுத்த நிறுத்தத்தில் இறங்கத்தானே போகிறேன்," என்றார்.
அப்பெண்ணின் இந்தப் பதில் பொன்னெழுத்துகளில் பதிக்கப்பட வேண்டியவை!
*"அற்பமானதொரு விஷயத்திற்காக மரியாதைக் குறைவாக பேசுவதோ வாதிடுவதோ தேவையற்றது. நாம் சேர்ந்து பயணிக்கப் போவது ஒரு குறுகிய காலமே"*
இங்கு நாம் வாழப்போகும் காலம் மிகவும் குறைந்தது என்பதை உணர்வோமாயின், வாய்ச்சண்டை போடுவது, வீண் வாதத்தில் ஈடுபடுவது, பிறரை மன்னிக்க மறுப்பது, எதிலுமே அதிருப்தியும் குற்றமும் காணும்
போக்கினைக் கொண்டிருப்பது நம் நேரத்தையும் சக்தியையும் வீணடிக்கும் செயல் என்பது புரிந்திடும்.
இப்பயணம் எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது ஒருவருக்கும் தெரியாது. அவர்கள் இறங்க வேண்டிய இடம் எப்பொழுது என்பதும் ஒருவருக்கும் தெரியாது.

உறவையும் நட்பையும் போற்றுவோம். ஒருவரை ஒருவர் மதித்து வாழ்வோம், ஒருவருக்கொருவர் அன்பு செலுத்துவோம், மன்னிப்போம் மறப்போம். நன்றி பாராட்டி மகிழ்ச்சியாக வாழும் வழியைப் பார்ப்போம்.


Thursday 17 May 2018

ஒரு கிராமத்தில்

ஒரு கிராமத்தில்

ஒரு கிராமத்தில் கொல்லன் ஒருவன் வாழ்ந்து வந்தான்,
இரும்பு சாமான்கள் செய்து விற்று பிழைப்பு நடத்தி வந்தான்,
அவனுக்கு அன்பும் அழகும் நிறைந்த மனைவி இருந்தாள்,
அவன் வாழ்க்கை உழைப்பும், காதலும், ஊடலுமாக மகிழ்ச்சி வெள்ளமாய் ஒடிக் கொண்டிருந்தது.
எல்லாக் கதைகளிலும் வழக்கமாக வருவது போல் நம்ம கொல்லன் வாழ்க்கையிலும் சோதனை காலம் வந்தது,,,
நவநாகரீக காலத்தின் துவக்கமாய் இருந்த நேரம் அது,
கொல்லப் பட்டறை தொழில் நலிவுற்றது,
வருமானம் நாளுக்குநாள் குறைந்து கொண்டே வந்து அன்றாட உணவுக்கே வறுமை என்ற நிலை வந்துவிட்டது,,,
கொல்லனுக்கோ ஊடலிலும், காதலிலுங்கூட நாட்டம் இல்லாமல் விரக்தி மனதில் குடிகொண்டது,,,
சோகமே உருவாகி விட்டான்,,,
ஒருநாள் மாலை வேளையில் மனைவியின் மடியில் தலைசாய்த்து வானத்து நட்சத்திரங்களை பார்த்துக் கொண்டிருந் தான்,
மனதில் எதிர்காலம் குறித்த கவலைகள் எழுந்து கண்ணீர் துளிகளாய் கரைந்தோடியது,
அதைக் கண்ட மனைவி தழுதழுத்து ஆறுதலாய் பேசினாள்,
"ஐயா எஞ்சாமி எதுக்கு கலங்குதீக,
இந்த தொழில் இல்லைன்னா என்ன, பக்கத்து காட்டுல போய் விறகு வெட்டி அதை அக்கம் பக்கத்து கிராமத்துல வித்தா நாலு காசு கிடைக்குமே,
அதை வெச்சு ராசாவாட்டம் வாழலாமே" என்றாள்,,,
புது நம்பிக்கை புது உற்சாகம் உள்ளத்தில், கொல்லன் விறகுவெட்டி ஆனான்,
அந்தத் தொழிலில் ஓரளவு வருமானம் கிடைத்தது.
வீட்டில் தினமும் சோளக்கஞ்சி, கொள்ளுத் துவையல் கூடவே மனைவியின் சிரித்த முகமும் கனிவான கொஞ்சலும் அவனுக்கு ஒரளவு மகிழ்ச்சியை தந்தாலும், சற்றே சோகமும் இழையோடி இருந்தது,
ஒருநாள் ஊடலும் சரசமுமாய் இருந்த வேளையில் மனைவி கேட்டாள்,
"மாமோய்,,, இன்னும் ஒங்க மனசுல ஏதோ சோகமிருக்காப்ல தெரியுதே,
என்ன அது?"
விறகு வெட்டியான நம்ம கொல்லன் சொன்னான்
"பட்டறைத் தொழில் நல்லாயிருந்த காலத்தில் நம்ம வீட்டில் தெனந்தெனம் நெல்லுச்சோறும் கறிக் கொழம்புமாய் இருக்கும்,
இப்போ இப்படி வயித்தக்கட்டி வாழுறோமே, அதுதான்டி குட்டிம்மா மனசுக்கு என்னவோ போல இருக்கு,
இப்படி விறகு சுமந்துகிட்டு ஊர் ஊரா சுத்தினால் கிடைக்கிற வருமானம் நமக்கு நல்லபடியா வாழ பத்தலையே"
என்றவனுக்கு கண்கலங்கவும் தவித்துப் போனாள் அவள்,
"வேணாஞ்சாமி வேணாம், நீங்க ஏங் குலசாமி, கண்ணு கலங்காதீக,
என்னோட நகை நட்ட வித்தா கொஞ்சம் காசு கிடைக்குமே,,,
அதை மூலதனமா போட்டு நாம ஒரு விறகு கடை வச்சிரலாம்,
காட்டுல விறகு வெட்டுற ஜனங்களுக்கு கூலி கொடுத்து விறகு வாங்கிப் போடுவோம்,
கடைன்னு ஆயிட்டா எந்த நேரமும் ஜனங்க விறகு வாங்க வருவாக, நமக்கு நல்லபடியா வருமானம் கிடைக்கும் என்றாள்.
மீண்டும் புத்துணர்ச்சி நமது கொல்லனின் உள்ளத்தில், விறகு வெட்டியானவன் விறகுக்கடை முதலாளியா னான்,
வருமானம் பெருகியது, அப்புறமென்ன வீட்டில் கறிசோறுதான்,,,
ஆனால் வாழ்க்கை அடுத்தடுத்த சோதனைகளை ஏற்படுத்தாமல் விட்டுவிடுமா என்ன,
வந்தது கெட்ட நேரம், விறகு கடையில் தீ விபத்து!...
அத்தனை முலதனமும் கரிக்கட்டையாகி விட்டது,,,
தலையில் அடித்துக் கொண்டு அழுதான் விறகு கடை முதலாளி,,,
நண்பர்கள் பலரும் வந்து ஆறுதல் சொன்னார்கள், கலங்காதே நண்பா மறுபடியும் விறகுவெட்டி வாழ்க்கை நடத்து,
எதிர்காலத்தில் எதாவது நல்லது நடக்கும் என்றார்கள்.
மனைவி வந்தாள்,,,
கண்ணீரை துடைத்தாள்,,,
அவன் தலைசேர்த்து நெஞ்சோடு கட்டியனைத்தாள்,
கண்ணீர் மல்க சொன்னாள்;
"இப்போ என்ன ஆயிடுச்சுனு எஞ்சாமி அழுதீக,
விறகு எரிஞ்சு வீணாவா போய்ட்டு,
கரியாத்தானே ஆகியிருக்கு,
நாளைலயிருந்து கரி யாவாரம் பண்ணுவோம்"
தன் தலை நிமிர்த்தி அவளின் முகம் பார்த்தவனுக்கு மீண்டும் வாழ்வில் ஒளி தெரிந்தது.
ஊக்குவிக்கவும் உற்சாகப் படுத்தவும் ஆட்களிருந்தால் கோமா ஸ்டேஜ்ல இருக்கவன் கூட ஒலிம்பிக் ஓட்டபந்தயத்தில் ஜெயிப்பான்.
ஊக்குவிக்கற வனை ஊக்குவிக்க ஆளிருந்தால் தேக்கு விப்பான். - கவிஞர் வாலி
சதா உதாசினப்படுத்திகொண்டிருந்தால்
ஆரோக்கியமா இருக்கறவனுக்கு குளுகோஸ் தான் போடனும்.
ஆற்றில் வெள்ளம் வந்து தண்ணீர் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் போது கரையை கடக்க எதிர் நீச்சல் அடிக்க கூடாது.
ஆற்றோட வேகத்துக்கு தகுந்த மாதிரி கரையை அதோட போக்குல போய் கடந்து தான் கரையேறனும்.
நன்றி;நம் தாயகம் தமிழ்.

#சிறந்த_புண்ணியம்.!

#சிறந்த_புண்ணியம்.!

 விஸ்வாமித்திரரின் ஆஸ்ரமத்திற்கு வசிஷ்டர் வந்திருந்தார். இருவரும் பல விஷயங்களைப் பேசினர். வசிஷ்டர் விடை பெறும் போது, விஸ்வாமித்திரர் அவருக்கு மறக்க முடியாத அன்பளிப்பு ஒன்றை வழங்க விரும்பி, ஆயிரம் ஆண்டு தவத்தால் தனக்கு கிடைத்த சக்தியை கொடுத்தார். மகிழ்ச்சியுடன் பெற்றுக் கொண்ட வசிஷ்டரும் நன்றி சொல்லி புறப்பட்டார்.
இன்னொரு சமயத்தில் வசிஷ்டரின் ஆஸ்ரமத்திற்கு விஸ்வாமித்திரர் வர நேர்ந்தது. வசிஷ்டரும் அவரை அன்புடன் உபசரித்தார். புண்ணியம் தரும் ஆன்மிக விஷயங்களை மட்டுமே பேசினார். விடை பெறும் நேரத்தில், வசிஷ்டரும் விஸ்வாமித்திரருக்கு அன்பளிப்பு வழங்க விரும்பினார். "இவ்வளவு நேரம் நல்ல விஷயங்களை பேசியதற்குகிடைத்த புண்ணிய பலனைஉமக்கு அளிக்கிறேன்'' என்றார். இதைக் கேட்ட விஸ்வாமித்திரரின் முகம் சுருங்கியது.
"நீங்கள் எனக்கு அளித்த ஆயிரம் ஆண்டு தவப்பயனும், இந்த அரை நாள் நல்ல விஷயங்கள் பற்றி பேசிய புண்ணியமும் எப்படி சமமாகும் என்றுதானே யோசிக்கிறீர்கள்?'' என்று கேட்டார். விஸ்வாமித்திரரும் தலையாட்டினார். எது உயர்ந்தது என்பதை நாம் பிரம்மாவிடமே கேட்டு தெரிந்து கொள்வோம் என்று முடிவு செய்து பிரம்மலோகம் சென்றனர். பிரம்மாவிடம் நடந்ததை விளக்கினர்.
"இது விஷயத்தில் தீர்ப்பு சொல்ல என்னால் முடியவில்லை. விஷ்ணுவிடம் முறையிடுங்கள்'' என்றார் பிரம்மா. அவர்களும் விஷ்ணுவிடம் சென்று கேட்டனர். "தவ வாழ்வில் என்னை விட சிவனுக்குத் தான் நிறைய அனுபவம் உண்டு. அவரிடம் விசாரித்தால் உண்மை விளங்கும்'' என்றார் விஷ்ணு. கைலாயம் சென்று சிவனிடம் விளக்கம் தரவேண்டினர்.
சிவனும், "உங்களுக்கு தெளிவு வேண்டுமானால் பாதாள லோகத்திலுள்ள ஆதிசேஷனின் உதவியை நாடுங்கள்'' என்றார். விஸ்வாமித்திரரும், வசிஷ்டரும் பாதாளலோகம் வந்தனர். தங்கள் சந்தேகத்தை எடுத்துக் கூறினர் "இதற்கு யோசித்தே பதில் சொல்ல வேண்டும். அதுவரை இந்த பூலோகத்தை தாங்கும் பணியை நீங்கள் செய்யுங்கள். தலையில் சுமக்க கடினமாக இருக்கும். எனவே, ஆகாயத்தில் இதை நிலை நிறுத்தி வையுங்கள்'' என்றார். உடனே விஸ்வாமித்திரர் "நான் இப்போதே ஆயிரம் ஆண்டுகள் செய்த தவத்தின் சக்தியை கொடுக்கிறேன். அதன் பயனாக பூமி ஆகாயத்தில் நிலைபெற்று நிற்கட்டும்'' என்றார். ஆனால், பூமியில் எந்த மாற்றமும் உண்டாகவில்லை. அது ஆதிசேஷனின் தலையிலேயே நின்று கொண்டிருந்தது. வசிஷ்டர் தன் பங்குக்கு, " அரை மணி நேரம் நல்ல விஷயங்கள் பேசியதால் உண்டாகும் புண்ணியத்தை கொடுக்கிறேன். இந்த பூமி அந்தரத்தில் நிற்கட்டும்'' என்றார்.
இதைச் சொன்னதும் ஆதிசேஷனின் தலையில் இருந்த பூமி கிளம்பி அந்தரத்தில் நின்றது. ஆதிசேஷன் பூமியை எடுத்து தன் தலையில் மீண்டும் வைத்துக் கொண்டு, "நல்லது....நீங்கள் இருவரும் வந்த வேலை முடிந்து விட்டது... போய் வரலாம்''என்றார்.
"கேட்ட விஷயத்திற்கு தீர்ப்பு
சொல்லாமல் வழியனுப்பினால்
எப்படி?''என்றனர் ரிஷிகள் இருவரும்
ஒருமித்த குரலில். "உண்மையை நேரில் பார்த்த பிறகு தீர்ப்பு சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆயிரம் ஆண்டு தவசக்தியால் அசையாத பூமி, அரைமணி நேர நல்ல விஷயங்கள் பேசிய பலனுக்கு அசைந்து விட்டது பார்த்தீர்களா!.
*நல்லவர் உறவால் கிடைக்கும் புண்ணியமே, தவத்தால் கிடைக்கும் புண்ணியத்தை விட சிறந்தது'' என்றார் ஆதிசேஷன்..!*

#கலியின்_ஆரம்பம்.

#கலியின்_ஆரம்பம்.

🐴 பஞ்சபாண்டவர்களில் ஒருவரான சஹாதேவன் சந்தைக்குள் நுழைந்தான். அழகான குதிரையை அவனும் பார்த்தான். உடனே குதிரையின் உரிமையாளரை நெருங்கி, "குதிரை என்ன விலை? என்று கேட்டான்.
#குதிரையின்_உரிமையாளரோ,
🐴 "ஐயா! இந்த குதிரை விற்பனைக்கு அல்ல. நான் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொன்னால், குதிரையை இலவசமாகவே கொடுப்பேன்" என்றார்.
சகாதேவன் உடனே, "சரி கேள்வியைச் சொல்லுங்கள்" என்றான்.
🐴 குதிரையின் உரிமையாளர், "நன்றாகக் கவனியுங்கள்! பிறகு பதில் சொல்லுங்கள்!
🐴 ஒரு பெரிய கிணறு. அதில் உள்ள தண்ணீரைக் கொண்டு ஏழு சிறிய கிணறுகளை நிரப்பலாம். ஆனால், அந்த ஏழு கிணறுகளில் இருக்கும் தண்ணீரை எடுத்து, மறுபடியும் அந்த பெரிய கிணற்றில் ஊற்றினால், பெரிய கிணறு நிரம்பவில்லை.
🐴 இது ஏன்? நன்றாக யோசித்து பதில் சொல்லுங்கள்" என்றார். சஹாதேவனால் பதில் சொல்ல முடியவில்லை. அங்கேயே சந்தையில் உட்கார்ந்துவிட்டான்.
🐴 சற்று நேரத்தில்.... சகாதேவனை தேடிக்கொண்டு நகுலனும் சந்தைக்கு வந்து விட்டான். அவனும் குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான்.
🐴 குதிரையின் உரிமையாளர், நகுலனிடம் ஒரு கேள்வி கேட்டார். "ஐயா! நான் ஒரு கேள்வி கேட்கிறேன். பதில் சொல்லிவிட்டு, குதிரையை இலவசமாகவே பெற்றுக்கொள்ளுங்கள்.
🐴 துணி தைக்கும் ஊசி இருக்கிறது அல்லவா? அதன் ஓட்டையின் வழியாக ஒரு யானை புகுந்து, அடுத்த பக்கம் போய்விட்டது. ஆனால் யானையின் வால் மட்டும் அந்த ஓட்டையின் வழியாகப் போக முடியவில்லை. ஏன்?" என்றார்.
🐴 நகுலனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் சந்தையில் உட்கார்ந்திருந்த சஹாதேவனுடன் சேர்ந்து உட்கார்ந்துவிட்டான்.
🐴 அதன் பிறகு ஒரு சில நிமிடங்களில், அர்ஜுனனும் அங்கு வந்தான். அவனும், குதிரையைப் பார்த்து, அதன் அழகில் மயங்கிப் போய் விலை கேட்டான். குதிரையின் உரிமையாளர், அர்ஜுனனிடமும் கேள்வி கேட்டார்.
🐴 "ஐயா! ஒரு வயல் காட்டில் நன்றாக விளைந்து இருந்தது. அதற்கு வேலியெல்லாம் போட்டு பாதுகாப்பாக வைத்து இருந்தார்கள். ஆனால் அறுவடை காலத்தில், அந்த வயல் காட்டில் எதுவுமே இல்லை. வேலியெல்லாம் அப்படியே இருந்தது. அப்படி இருந்தும் விளைந்த தானியங்களை எல்லாம் யார் எடுத்தார்கள்?
🐴 பதில் சொல்லிவிட்டு, குதிரையை கொண்டு செல்லுங்கள்" என்றார். அர்ஜுனனால் பதில் சொல்ல முடியவில்லை. அவனும் ஆலோசனை செய்தபடி அங்கேயே உட்கார்ந்து விட்டான்.
🐴 சகோதரர்கள் மூவரும் இப்படியே உட்கார்ந்திருக்க, அரண்மனையில் அவர்களைக் காணாமல், தர்மர் திகைத்தார். பீமனைக் கூப்பிட்டு, "தம்பி! நம் தம்பிகள் மூவரையும் நீண்ட நேரமாக காணவில்லை. நீ போய், அவர்கள் எங்கு இருந்தாலும் தேடி அழைத்து வா!" என்றார்.
🐴 பீமனும் போய் தேடிப்பிடித்து, அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் மூவரையும் அழைத்து வந்தான். பாஞ்சாலியோடு அரியணையில் அமர்ந்திருந்த தர்மர், அவர்களைப் பார்த்ததும், "அர்ஜுனா! நீண்ட நேரமாக நீயும் உன் தம்பிகளும் இங்கு இல்லை. எங்கே போய் இருந்தீர்கள்?" எனக் கேட்டார்.
🐴 அதற்குப் பதிலாக அர்ஜுனன், நடந்ததை எல்லாம் சொல்லி, குதிரை உரிமையாளர் கேட்ட மூன்று கேள்விகளையும் சொன்னான்.
🐴 அதைக் கேட்டதும் தர்மர் நடுங்கினார். அதைப் பார்த்த தம்பிகள் எல்லாரும் திகைத்தார்கள்.
🐴 "அண்ணா! நீங்கள் நடுங்கும்படியாக என்ன நடந்தது?" எனக் கேட்டார்கள்.
#தர்மர்_பதில்_சொல்லத்_தொடங்கினார்..
"தம்பிகளே! எதிர்காலத்தில் நடக்கப் போகும் விபரீதங்களை, அந்த மூன்று கேள்விகளும் சொல்கின்றன."
அதை நினைத்துத்தான் நடுங்கினேன். "ஒவ்வொன்றாகச் சொல்கிறேன் கேளுங்கள்" என்று விரிவாகக் கூறினார்.
"உங்களிடம் கேள்வி கேட்டவன்
#கலி_புருஷன். அவன் கேட்ட முதல் கேள்வியில்
பெரிய கிணறு என்பது பெற்றோர்கள்.
ஏழு சிறிய கிணறு என்பது அவர்களது பிள்ளைகள்.
பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை, அவர்கள் எவ்வளவு பேர்களாக இருந்தாலும் சரி! அவ்வளவு பிள்ளைகளையும் காப்பாற்றுவார்கள். இதைத்தான் பெரிய கிணற்றின் தண்ணீரைக் கொண்டு சிறிய கிணற்றை நிரப்பினார்கள் என்பது குறிக்கிறது.
ஆனால், அந்த பிள்ளைகளோ, அவ்வளவு பேர்களும் சேர்ந்தால் கூட, தங்கள் பெற்றோரை காப்பாற்ற மாட்டார்கள். இதைத்தான் ஏழு சிறிய கிணறுகளில் உள்ள தண்ணீரைக் கொண்டு, பெரிய கிணற்றை நிரப்ப முடியவில்லை என்பது குறித்தது.
அடுத்து இரண்டாவது கேள்விப்படி, இனி வருங்காலங்களில் அக்கிரமங்கள், முறைகேடான செயல்கள் ஏராளமாக நடைபெறும்.
ஆனால், நல்ல செயல்கள் நடைபெறுவது மிகவும் கடினமாக இருக்கும். இதைத்தான் யானையே போன வழியில், அதன் வால் போக முடியவில்லை என்று சொல்லி இருக்கிறார்.
அடுத்து மூன்றாவது கேள்வியில்,
பயிர்கள் என்பது மக்களைக் குறிக்கும், பாதுகாக்கும் வேலி என்பது அதிகாரிகளைக் குறிக்கும்.
அதாவது மக்களைப் பாதுகாக்க வேண்டிய அதிகாரிகளே அவர்களை அழித்து விடுவார்கள்.ஆனால் அவர்கள் செழிப்புடன் இருப்பார்கள்.
இதைத்தான் வேலி அப்படியே இருக்க பயிர்கள் நாசம் ஆனது என்பதை குறிக்கிறது என்றார்.
கலியுகம் இப்படித்தான் இருக்கும் என்பதை அந்த காலத்துலயே மகாபாரதம் தெளிவாக எடுத்துரைக்கிறது.
நன்றி :

Friday 11 May 2018

பழமொழியும் அதன் அர்த்தங்களும்

பழமொழியும் அதன் அர்த்தங்களும்


1. ஊரோடு ஒத்து வாழ்
ஊரோது ஒத்து வாழ் என்றால், நீ எந்த ஊரில் இருந்தாலும், அது சொந்த ஊராக இருந்தாலும் சரி, வேறு ஊராக இருந்தாலும் சரி . அக்கம் பக்கம் உள்ளவர்களிம் அன்புடனும் ஆதரவுடனும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். என்பதே இத‌ன் உ‌ண்மையான பொருளாகும்.
2. எறும்பு ஊற ஊற கல்லும் தேயும்
அதாவது பெரிய பணக்காரன், அவரிடம் 7 தலைமுறைக்கு எக்கச்சக்கமான பணம், அவரது வாரிசுகளோ வேலை செய்யமால் அப்பா சம்பாதித்ததை கொஞ்சம் கொஞ்சமாக செலவு செய்தாலும் ஒரு நாள் அது கரைந்து, ஓட்டாண்டியாக வேண்டும்.

அப்புறம் விடாமுயற்சிக்கும் இந்த பழமொழியை சொல்லலாம்.
இதனை செட்டிநாட்டில் [குந்தி தின்றால் குன்றும் மாளும்] என்று பேச்சு வழக்கில் கூறுவார்கள்  
3. நொறுங்கத் தின்றால் நூறு வயது!
கொஞ்சம் உணவே சாப்பிட்டாலும் நன்கு மென்று அரைத்து பின்னர் உள் விழுங்குவதுதான் சிறந்து. அப்போதுதான் வயிற்றுக்கு அதிகம் வேலை கொடுக்காமல் உடனே செரிமானம் ஆகும். நன்கு மெல்லாமல் நீங்கள் நிறையத் தின்றாலும் நொதித்தல் மூலம் கொஞ்சம் சத்தினை உடல் எடுத்துக் கொண்டு மீதியை பின்பக்கமாக வெளியேற்றிவிடும். எனவே கொஞ்சமாகத் தின்றாலும் நன்கு அரைத்து மென்று திங்க வேண்டும். அவ்வாறு தின்றால் நூறு வயது வாழலாம் என்கிறது இந்த பழமொழி.

ஆடு, மாடுகள் மேய்ந்த பலமணி நேரம் கழித்தும்கூட அசைபோடுவதை நீங்கள் கண்டிருக்கலாம்.
4. காக்கைக்கு தன் குஞ்சு பொன் குஞ்சு
காகம் தனது குஞ்சு கருப்பாகவே இருந்தாலும் அதன்மீது அன்பு காட்டி, இரைதேடி வந்து தன் அலகால் உணவூட்டும். ஆனால் மற்ற பறவையினங்கள் காகம் கருப்பாக இருப்பதால் சற்று அஞ்சி ஒதுங்கியே இருக்கும். அதனால் காகம் தனது குஞ்சை வெறுக்குமா? வெறுக்காது! அது தனது குழந்தை அல்லவா? அதைப்போல தனது பிள்ளைகள் என்னதான் அழகாக இல்லாவிட்டாலும் கூன்,குருடு,செவிடாகவே இருந்தாலும் ஒரு தாயானவள் அரவணைத்துப் பாதுகாப்பாள்!

 

நல்ல நேரம் பார்த்து சிசேரியன் செய்வது சரியா?


நல்ல நேரம் பார்த்து சிசேரியன் செய்வது சரியா?

கேள்வி ஜோசியம் பார்த்து நல்ல நாள் மற்றும் நேரம் தெரிந்து கொண்டுஅதன்படி குழந்தையை சிசேரியன் செய்து வெளியே எடுக்கிறார்கள். இப்படி நல்லநேரம் பார்த்து குழந்தையை வெளியில் எடுப்பது பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்

சரியில்லை. பிறப்பையும்இறப்பையும் நிர்ணயிக்கும் சக்தி மனிதனுக்கு இல்லை. ஜனனமும்மரணமும் இறைவனின் செயல். அதனை சரியாக கணிக்க எவராலும் இயலாது சரியாக அந்த நிமிடத்தில் குழந்தையை பிறக்க வைக்க எவராலும் இயலாது. ஏதோ ஒரு காரணத்தால் நேரம் தப்பிப்போகும். மயக்க மருந்து கொடுக்கும் மருத்துவர் போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருவதற்கு தாமதம் ஆகலாம்;. மின்சாரம் தடைபடலாம்பிரசவம் பார்க்க வேண்டிய மருத்துவருக்கேகூட உடல்நிலை சரியில்லாமல் போகலாம். இதுபோன்ற காரணங்களை நாமும் அன்றாடம் கேள்விப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறோம்
:

குழந்தை பிறக்கின்ற அந்த நேரம் மிகவும் முக்கியமானதுதான். ஆனால் சிலர் தாங்கள் வாழும்போதே உட்காருவதற்குநிற்பதற்குக் கூட ஜோசியம் பார்த்துதான் செய்வார்கள். நேரம் நன்றாக இல்லையென்றால்வேறெங்கும் நகராமல்எங்கே இருக்கிறார்களோ அங்கேயே உட்கார்ந்து கொள்வார்கள்.


 எவ்வளவு முக்கியமான வேலையாக இருந்தாலும் வீட்டிலிருந்து ஒரு அடி கூட வெளியே எடுத்து வைக்க மாட்டார்கள்.

கூட்டிற்குள் இருந்து வெளியே வரப் போராடும் பட்டாம்பூச்சியால் மட்டுமே பறக்க முடியும்அந்த போராட்டத்தில்தான் அதற்கு சக்தி வரும். பறந்தால்தானே அது பட்டாம்பூச்சி

! ஓர் உதாரணத்திற்கு சொல்ல வேண்டும் என்றால் தனக்கேற்ற பருவம் வருகிறபோது மரங்கள் பூ பூக்கின்றன. அவை நேரம் பார்த்து மலர்வதில்லை. அதைப் போலத்தான் நாமும். ஏதோ ஒரு செயல் செய்ய வேண்டும் என்று முடிவு செய்கிறோம்அதை சூழ்நிலை சரியாக அமையும்போது செய்துகொள்ள வேண்டும்

. அவ்வளவு பக்குவம் போதாதவர்களுக்கு எந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நம் கலாச்சாரத்தில் வகுத்துக் கொடுத்தார்கள். எந்த நேரத்தில் தூங்கி எழவேண்டும் என்பதையெல்லாம் நமக்குச் சொல்லிக் கொடுத்தார்கள்.

 சந்தியா காலத்தில் எழ வேண்டும் என்றார்கள்இல்லையென்றால் மதியம் வரை எழுந்திருக்கவே மாட்டீர்கள்அப்படித்தானேஇதையெல்லாம் உங்களுக்கு சாஸ்திரமாக எழுத வேண்டும்வேதமாக சொல்ல வேண்டும்அப்போதுதான் செய்வீர்கள்!

 அதனால்தான் அப்படிச் செய்தார்கள். நீங்கள் கொஞ்சம் புத்திசாலியாக இருந்தால் நம் வாழ்க்கை நன்றாக செல்வதற்கு எத்தனை மணிக்கு எழுந்திருக்க வேண்டும் என்பதை நீங்களே புரிந்துகொள்ள முடியும்தானேதற்போது பிறப்பதற்குக்கூட ஜோசியம் பார்த்து நேரம் குறிக்கத் தொடங்கி விட்டீர்கள். நாளை 11.20 மிகவும் நல்ல நேரம்இறப்பதற்கு… அப்பொழுது இறந்தால் நேராக சொர்க்கம்தான். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வீர்களா?

ஆனால் அப்படிச் செய்யமாட்டீர்கள். ஒருவர் வீட்டில் பட்டாம்பூச்சி வளர்த்தார். பட்டாம்பூச்சி முதலில் புழுவாக இருக்கும்அதன்பின் அது தன்னை சுற்றி கூடு கட்டிக் கொள்ளும்அதற்கு இறக்கை முளைத்தபின் கூட்டை விட்டு வெளிவரப் போராடும் என்பதெல்லாம் நீங்கள் அறிந்ததே… நான் சிறுவயதில் பட்டாம்பூச்சி வளர்த்ததால்இதனை மிகவும் நெருக்கமாக இருந்து கவனித்திருக்கிறேன். இப்படி பட்டாம்பூச்சியை வளர்த்த ஒருவர்இந்த பட்டாம்பூச்சி இவ்வளவு சிரமப்படுகிறதே என்று பரிதாபப்பட்டு அதன் கூட்டை கீறிக் கிழித்து திறந்து விட்டார். அதுவும் வெளியே வந்துவிட்டது. ஆனால் மற்ற பட்டாம்பூச்சிகள் எல்லாம் பறக்கும்போது இதனால் மட்டும் பறக்க முடியவில்லை. கூட்டிற்குள் இருந்து வெளியே வரப் போராடும் பட்டாம்பூச்சியால் மட்டுமே பறக்க முடியும்,

அந்த போராட்டத்தில்தான் அதற்கு சக்தி வரும். பறந்தால்தானே அது பட்டாம்பூச்சி! இதைபோலதான் ஒரு குழந்தையும். தன் தாயின் கருவில் அதற்கு எவ்வளவோ போராட்டங்கள் உள்ளன. அந்த போராட்டங்களை எல்லாம் அக்குழந்தை எதிர்கொள்ள வேண்டும்.

 அப்போதுதான் அதற்கு தேவையான பரிபூரணமான வளர்ச்சி ஏற்படும். தாய்க்கோ அல்லது சேய்க்கோ ஏதோ ஒரு காரணத்தால் பிரச்சனை ஏற்படும்போது சிசேரியன் செய்வது முற்றிலும் வேறு விஷயம். 

ஆனால் தற்போது சிசேரியன் என்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. இப்படி சிசேரியன் செய்து குழந்தை பெற்றுக் கொள்வதால் அந்தக் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படவே செய்யும்.



1. நாள் செய்வதை நல்லவர்கள் செய்ய மாட்டார்கள்

1. நாள் செய்வதை நல்லவர்கள் செய்ய மாட்டார்கள்


கவர்னர் நம்மூருக்கு வந்து மக்கள் குறைகளை நேரில் கேட்கும் நேரம், Lions club eye camp கண் வைத்திய முகாம் நம் கிராமத்திற்கு வரும் சமயம், அதனால் பரிகாரம் தேடுபவர்களுக்குப் பொன்னான நேரம். அந்த நேரத்தைத் தவற விட்டுவிட்டால், அவர்களுக்கு பெரிய நஷ்டம்.
முதலாளியிடம் கோள் சொல்லியே பிழைத்து வருபவன் உன் எதிரில் உட்கார்ந்து இருக்கும்வரை, முதலாளி சம்பந்தப் பட்ட விஷயத்தைப் பேசாதே என்றால் அது புத்திசாலித்தனம். அவன் எழுந்து போன பிறகு பேசினால் நல்லது. அவன் இருக்கும்போது பேசினால் ஆபத்து.
நல்ல நேரம் என்பது கவர்னர் வரும் சமயம் போன்றது. கெட்ட நேரம் என்பது முதலாளியின் ஆள் இருக்கும் நேரம் போன்றது. நல்ல நேரத்தில் ஒரு காரியத்தைச் செய்வதால் மட்டுமே அது பூர்த்தியாக முடியும் என்ற உண்மையையும், கெட்ட நேரத்தில் செய்வதால் மட்டுமே அது கெட்டுப்போகும் என்ற உண்மையையும் கண்டுகொண்ட முன்னோர்கள் ஒவ்வொரு நாளையும், நாழிகையையும், நட்சத்திரம், திதி, அமிர்தவேளை, விஷநேரம் என்று பாகுபாடு செய்திருக்கின்றார்கள். இவையெல்லாம் சக்திவாய்ந்தவை என்பது உண்மை. நான் நேரம், காலம் பார்க்காமல் வேலைசெய்து பெரிய செல்வம் சம்பாதித்திருக்கிறேன், என்னை நேரம் என்ன செய்யும் என்பவர் தன் நினைவுக்கு எட்டிய வரை தனக்கு முக்கியமான செயல்களை ஆரம்பித்த நாளையும் வேளையையும் குறித்து இன்று பழைய பஞ்சாங்கத்தில் பார்த்தால், அவை அவரை அறியாமல் நல்ல நேரமாக அமைந்திருக்கும்.
"நல்ல நேரம், கிரகபலன், எல்லாம் தானே கூடிவருகிறது'' என்பார்கள். அதேபோல் நான் தொட்டதெல்லாம் வீணாகப்போயிற்று, நானும் நேரம் காலம் பார்ப்பதில்லை என்பவரும் தன் பழைய செயல்களை ஆரம்பித்த நேரங்களை இப்பொழுது ஆராய்ந்து பார்த்தால் அவை கெட்ட நேரங்களாக இருக்கும்.
"நான் ஸ்ரீ அரவிந்தரை ஏற்றுக்கொண்டேன், அதற்கு முன்பும், அதன் பின்பும் இதிலெல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை'' என்றவரிடம் ஜோஸ்யத்தில் அதிக நம்பிக்கையுள்ளவர் ஒருவர், உங்கள் வாழ்க்கையில் உயர்ந்த நல்லதாகக் கருதுவது எது என்றார்? உங்களுக்கு ஞாயிறும், வியாழனும் வாரத்தில் நல்ல நாட்கள், சொல்லுங்கள் ஆராய்வோம் என்றார். ஸ்ரீ அரவிந்த ஆஸ்ரமம் வந்து அன்னையை முதல் பால்கனி தரிசனத்தில் பார்த்ததே என் வாழ்நாளில் உயர்ந்த நல்லது என்றார். அந்தத் தேதி நினைவிருந்தால் அது நிச்சயமாக ஞாயிறு அல்லது வியாழனாகத்தானிருக்கும் என்று ஜோசியர் அடித்துச் சொன்னார். அது Aug. 15, அன்று ஞாயிற்றுக்கிழமை என்பது எனக்கு நன்றாக நினைவிருக்கிறது என்றார் பக்தர். நல்லவை நல்ல நேரத்தில் நடக்கின்றன. கெட்டவை கெட்ட நேரத்தில் நடக்கின்றன என்பது உண்மை.
இந்த உண்மைக்கும் ஒரு வரையறையுண்டு. இது நம் நாட்டிற்கு மட்டும் உண்மை. நாம் அனைவரும் நம்புவதால் இதிலுள்ள வித்தான உண்மை, வளர்ந்து பலம் பெற்றுள்ளது. நம் நாட்டிலேயே வட நாட்டில் இதே நம்பிக்கையிருந்தாலும் இந்த நேரங்கள் இடத்திற்கு இடம் மாறும். நம் இராகு காலம், பீகார் வழக்கப்படி (சில சமயங்களில்) நல்ல நேரமாக இருக்கின்றது.
வெளி நாட்டாருக்கு இந்த நம்பிக்கையில்லை. அவர்கள் நம் நாட்டில் வந்து செயல்படும் பொழுது நம்மைப் பாதிக்கும் கெட்ட நேரம் அவர்களைப் பாதிப்பதில்லை. நமக்குதவும் நல்ல முகூர்த்தம் அவர்களுக்குத் துணை செய்வதில்லை. இரு உண்மைகளை நாம் மறுக்க முடியாது. 1) நேரங்களுக்கு குண விசேஷம் உண்டு 2) இது நம்புபவர்களை மட்டுமே பாதிக்கும்.
அன்னை பக்தர்களுடைய நிலை என்ன? இந்த நல்ல வேளைகளை நாடுவதா? கெட்ட வேளைகளை விலக்குவதா என்ற கேள்விக்குரிய பதிலாக இக்கட்டுரையை எழுதுகிறேன். அன்னையை நினைத்தவுடன் அந்த நேரம் நல்ல நேரமாக மாறி விடுவதால் அன்னை பக்தர்களுக்கு நல்ல வேளை, கெட்ட வேளை என்பதில்லை. அவர்களுக்கும் மனத்தில் நம்பிக்கை இருந்தால், நம்பிக்கை பலிக்கும். இது கெட்ட நேரம், என்ன செய்யுமோ என்ற பயமிருந்தால் பயத்திற்குண்டான பலன் கிடைக்கும்.
40 ஆண்டுகளுக்கு முன் மனை' என்ற சொல் பிரபலமாவதற்கு முன் தன் 1½ ஏக்கர் நிலத்தை 17 மனைகளாகப் பிரித்து விற்க ஒருவர் ஆசைப்பட்டார். அதற்கு ஓராண்டு முன் இந்த இடத்திற்கு அடுத்தாற்போலுள்ள 4 ஏக்கர் நிலத்தை வெளியூரிலிருந்து வந்த செல்வந்தர் பங்களா கட்டுவதற்கு ஏக்கர் ஐயாயிரம் வீதம் வாங்கியது அந்த ஊருக்கே பெரிய செய்தி. அதனால் அதே விலைக்கு இந்த 1½ ஏக்கரையும் விற்கும் நினைவு ஏற்பட்டது இவருக்கு. இவர் எல்லா நாள் நட்சத்திரமும் பார்ப்பவர். தேவையில்லாத நேரத்தில் அதில் எல்லாம் எனக்கு நம்பிக்கையில்லை என்று பேசுபவர். பெரிய செல்வந்தர் பங்களாவுக்கு அடுத்துள்ள மனை என்பதால் விற்கலாம் என்று ஆசை, பலிக்கும் என்ற நிலையில்லை. பலிக்குமோ என்ற ஆசையில் முயற்சியை ஆரம்பித்தார். அடுத்த ஊர் எம்.எல்.ஏ. வந்து இரண்டு மனைகள் வேண்டும், அட்வான்ஸுடன் வந்திருக்கிறேன் என்றவுடன் மனை விலை ரூ.2,500 என்றார். அட்வான்ஸ் கொடுத்தார் M.L.A. ஒரு ஏக்கர் விலை இரண்டு மனையில் வந்தவுடன் அவருக்கு நிலை தடுமாறியது. இந்தச் செய்தி பரவியவுடன், பல செல்வந்தர்கள் அவரை அணுகி, தலைக்கு இரண்டு மனை கேட்டார்கள். சொற்ப நாட்களில் அத்தனை மனைகளுக்கும் கிராக்கி படிந்துவிட்டது.அவர் தாயாருக்குக் கவலை. முதல் அட்வான்ஸ் வாங்கிய நேரம் இராகு காலம். பையனை, அந்த அட்வான்ஸைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, மீண்டும் நல்ல வேளையில் அதைத் திரும்பப் பெற்றுக்கொள் என்றார். கையில் வந்த பணத்தை அவரைத் தேடிப் போய் திரும்பக் கொடுக்கப் பையனுக்கு இஷ்டமில்லை. இராகு காலத்தில் நம்பிக்கையுண்டு என்று சொல்ல வெட்கம். தாயார் பேச்சைத் தட்டினார். மற்ற மனைகளை விலை கேட்ட அனைவரும் மனை தேவையில்லை என்றனர். M.L.A. வந்து அட்வான்ஸைக் கேட்டு வாங்கிக்கொண்டு போய்விட்டார். மனதிலுள்ள நம்பிக்கை, மறுத்தும் பேசும் வாய்ச் சொல்லை மீறி செயல்படுகிறது.
நாளை சூரியன் உதயமாகும் என்பது eternal truth எக்காலத்திலும் உண்மை, எல்லா நாட்டிலும் உண்மை. ஆனால் பகல் 12 மணி நேரம், இரவு 12 மணி நேரம் என்பது எல்லா நாட்டிற்கும் உள்ள உண்மையல்ல. பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நாடுகளுக்கே அது உண்மை. வடக்கே அதிக தூரம் சென்றால் பகல் 20 மணி இரவு 4 மணி எனவும், பகல் 6 மணி, இரவு 18 மணி எனவும் பருவத்திற்குத் தகுந்தாற்போல் மாறும், தெற்கே அதிக தூரம் சென்றாலும் அப்படியே.
வெளியூர் போன இடத்தில் ஹோட்டலில் சாப்பிடும் பொழுது. மோர்சாதம் சாப்பிடும் நேரத்தில் சாம்பாரில் உள்ள உருளைக்கிழங்கை ஒருவர் பறிமாறும்படிக் கேட்டார். சர்வர் மறுத்தான். கசக்கும் என்றான். அவருக்குப் புரியவில்லை வலியுறுத்திக் கேட்டார். உருளைக்கிழங்கு மோருடன் சாப்பிடும் பொழுது கசந்தது. அந்த ஊர் தண்ணீரின் குணம் அது. எல்லா ஊருக்கும் உள்ள சட்டமல்ல அது. ஊரைப் பொறுத்த நிலை, அது.
நிலத்தை மனையாக மாற்றினால், நஞ்சை நிலம் என்பதால் மனைக்கு அதிக விலையில்லை. மனையுள்ள இடத்தைப் பொருத்து மனைக்கு விலை அமையும். நஞ்சையா, புஞ்சையா என்பதால் வரும் விலை பழைய நிலவரத்தைப் பொருத்தது. பயிரிடுபவனுக்குரிய விலை அது. நிலவரம் மாறிய பிறகு நிலத்தின் தரத்தை நிர்ணயிப்பது இன்றைய சூழ்நிலை. பழைய சூழ்நிலை, இன்றைய தரத்தை நிர்ணயிக்காது.
சூதாடிகள் குடியிருந்த இடத்தில் புதிய காலனி வந்த பின், புதிய மனிதர்கள் குடியேறிய பின், ஏற்கனவே அங்கிருந்த திருடர்கள் சூதாடியதனால் இப்பொழுது குடியுள்ளவர்க்கு ஆபத்தில்லை. இது முற்றும் புதிய நிலை. இந்நிலைக்கேற்றவர்களே இப்பொழுது இங்கிருக்கிறார்கள். பழைய பயம் கிடையாது. புதிய காலனியில் வேலை செய்யும் பழைய திருடனை நீ அடையாளம் கண்டும், அவனுடன் தொடர்பும் கொண்டிருந்தால், அவனால் உனக்குக் கெடுதல் நேரும். இடம் மாறிவிட்டது. அதனால் பழைய நிலைமை மாறிவிட்டது. அதையே நினைத்துக் கொண்டு பயப்படவேண்டிய அவசியம் இன்று புதியதாக குடி வந்தவர்களுக்கில்லை.
கொலைகாரனுடைய குடும்பம் அடுத்த தலை முறையில் தொழிலதிபராகிய பின் அவன் வீட்டு மனிதர்களைக் கண்டு நாம் பயப்பட வேண்டியதில்லை. அவர்களுடைய சமூகச் சூழ்நிலை இன்று வேறு. அதனால் பழைய பயம் மற்றவருக்கில்லை.
விதை விதைக்க தகுந்த நேரத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். எப்பொழுது வேண்டுமானாலும் விதைத்தால் பயிர் பலன் தராது. ஆடி மாதத்தில் விதைத்தால் அப்பொழுதிருந்து கார்த்திகை வரை தொடர்ந்து மழையிருக்கும். விதை, முளைக்கும், முளைத்த பயிரை மழை தொடுவதால் பலன் தரும் என்பதை பல நூறு ஆண்டுகள் சோதனை செய்து விவசாயி கண்டு கொண்டான். அதனால் ஆடிப்பட்டம் தேடி விதை' என்றான். அது பொன்னான வாக்கியம். அதில் உள்ள உண்மை பெரியது.
ஆனால் இன்று கிணற்றிலிருந்து 12 மாதமும் நீர் இறைக்க பம்ப்செட் இருப்பதால் விவசாயி பட்டத்தை எதிர்பார்க்காமல் அறுவடை முடிந்தவுடன் விதைக்கின்றான். காலம் மாறிவிட்டது. நிலைமை மாறிவிட்டது. பொன்னான சொல் ஆனாலும் இன்று அதற்கு அர்த்தமில்லை.
நந்தனாரும், திருப்பாணாழ்வாரும் பிறந்த இடம் தாழ்ந்த நிலை. அவர்கள் சித்தி பெற்ற புருஷர்கள் என்பதால், பிறந்த தாழ்ந்த நிலை இடைமறிக்காது.
1947க்கு முன் I.C.S. அதிகாரியை இந்தியாவின் எதிரி என்று மேடையில் பேசுவார்கள். சுதந்திரம் வந்த பின் காங்கிரஸ் மந்திரிகள் கீழே அவர்கள் வேலை செய்யும் பொழுது பழைய காங்கிரஸ்காரர்கள் அவர்களை குரோத மனப்பான்மையுடன் நினைப்பதுண்டு. அவர்கள் இன்று காங்கிரஸ் சர்க்காரின் ஊழியர்கள். காங்கிரஸ் மந்திரிகளின் உத்தரவை நிறைவேற்றும் சர்க்கார் அதிகாரிகள். 1947-க்கு முன் அவர்கள் நாட்டுக்கு எதிரிகள். இன்று அவர்கள் நாட்டுக்குச் சேவை செய்பவர்கள் அவர்களை நாம் வெறுக்கக் கூடாது என்று அன்று தலைவர்கள் கேட்டுக் கொண்டார்கள். நிலைமை மாறியதால் I.C.S. அதிகாரிகளின் நிலைமையும் மாறிவிட்டது. தலைகீழாக மாறி விட்டது. சில I.C.S. அதிகாரிகளை மந்திரிகளாகவும் நியமித்தார்கள். பலரை கவர்னர்களாகவும் நியமித்தார்கள்.
சில வியாதிகளுக்கு விஷத்தை மருந்தாகக் கொடுப்பார்கள். சாதாரண மனிதனுக்கு எது விஷமோ, இந்த வியாதியைப் பொருத்தவரை அது மருந்து.
ஒரு பெரிய அதிகாரி ரிடையரான பின் தன் அதிகாரத்தை இழந்து விடுகிறார். மாற்றலான பிறகு அந்த ஊரில் அதிகாரம் இருக்காது. இதுவரை நல்ல வேளை என்பதற்குரிய காலம் இருந்தது. ஒருவர் அன்னையை ஏற்றுக்கொண்டபின் நல்லவேளை என்பது ஓய்வு பெற்ற அதிகாரியைப் போல அல்லது கலைக்கப்பட்ட சட்டசபையைப் போல, அதன் அதிகாரம் இனி இல்லை.
பெட்ரோல் பங்க், புதியதாக வந்த எலக்ட்ரிக் மோட்டாருக்குப் பயன்படாது. பழைய டீசல் என்ஜினுக்கும் பயன்படாது. ரிஸர்வ் பேங்க் ஆயிரம் ரூபாய் நோட்டு செல்லாது என்று அறிவித்த அன்று ஒருவர் தன்னிடமிருந்த ஆயிரம் ரூபாய் நோட்டை பாக்கு மடிக்கப் பயன்படுத்தினார். கரன்ஸிக்கு உள்ள மதிப்பு நாம் கொடுத்தது. அதை ரிஸர்வ் பேங்க் ரத்து செய்யமுடியும்.
குங்குமப் பொட்டு லக்ஷ்மிகரம் பொருந்தியதானாலும், ஷேக்ஸ்பியர் நாடகத்திற்குப் பயன்படாது, நூறாண்டுகளாக மார்ஸ்கோட் morse code உலக நாடுகளில் தந்தியை ஆண்டு வந்தாலும், டெலக்ஸ் மெஷினுக்குப் பயன்படாது.
டெலக்ஸ் மெஷினை மார்ஸ் தந்தி முறை ஆட்சி செலுத்த முடியாது. பார்க்கர் பேனா உலகப் பிரசித்தி பெற்றது. Quink குவிங்க் அதில் உபயோகப்படுத்துவது. என்றாலும் ball point பால் பாயிண்ட் பேனாவில் அதைப் பயன்படுத்த முடியாது. xerox ஜெராக்ஸ் மெஷினில் கார்பன் பேப்பரை பயன்படுத்த முடியாது. தங்கக் கிரீடம் உயர்ந்தது. உயர்ந்ததைக் கீரிடம் என்கிறோம். நேருவையோ, கென்னடியையோ கிரீடம் வைத்துக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது, இனி கிரீடம் மியூசியத்தில் இடம் பெறும். நாட்டுத் தலைவர்கன் முடியில் அமையாது.
கோர்ட் வந்த பின் உள்ளூர் பஞ்சாயத்தின் தீர்ப்புக்கு அதிகாரமில்லை. நாமே அதை நாடி அதற்கு நம்மை உட்படுத்திக் கொண்டால் அது நம் குறை. உள்ளூர் நாட்டாண்மைக்காரர் எவ்வளவு பெரிய அதிகாரத்தை உள்ளூரில் செலுத்தினாலும், கோர்ட்டில் மற்ற சாட்சிகள் போலவே அவரை எடுத்துக் கொள்வார்கள். அவருடைய உள்ளூர் அந்தஸ்திற்கு கோர்ட்டில் இடம் இல்லை.
வீடு கட்டும் காலனியின் கணக்குப்படி நஞ்சையும், புஞ்சையும் ஒன்றே. மார்க்கட் விலையும் சமமாகிறது. சில இடங்களில் புஞ்சையில் மூன்று போகம் பயிரிட முடியும். பணப்பயிர் பயிரிட முடியும் என்பதால், புஞ்சைக்கு நஞ்சையை விட விலை அதிகம். பழைய நினைவு பழைய நிலை, புதிய சூழ்நிலையில் நிற்காது. புதிய சூழ்நிலையில் புதியனவற்றையே மக்கள் கருதுவார்கள்.
முடியாட்சி போய் மக்களாட்சி வந்த பின் ராஜாவுக்கு அதிகாரமில்லை. கட்டை வண்டி போய் கார் வந்த பின் காங்கேயம் மாட்டை கவனிப்பாரில்லை. நிலத்து வேலை போய், ஆபீஸ் வேலை வந்த பின், நிலத்தைப் போய் கவனிப்பாரில்லை. பதினாறும் பெற்று பெரு வாழ்வு வாழ வேண்டி வாழ்த்தியது போய் சிறு குடும்பம் வந்த பின் பத்து பிள்ளை பெற்றவளை மகராசி என்று வர்ணிப்பதில்லை. சம்பளத்திற்குரிய வேலை போய் சொந்தத் தொழில் ஏற்பட்ட பின் சர்க்கார் உத்தியோகத்திற்கு அவர்கடையே இருந்த செல்வாக்கில்லை.
பண்பு மாறினாலும், நாட்டு வழக்கம் மாறினாலும், புதிய டெக்னாலஜியை சமூகம் ஏற்றுக் கொண்டாலும், நமது இலட்சியம் மாறினாலும், நாம் முக்கியமாகப் போற்றும் பண்புகள் மாறினாலும், நடைமுறை மாறினாலும், சமூகத்தின் அமைப்பு மாறினாலும், பழைய பழக்க வழக்கங்களுக்கு அதிகாரமில்லை, அர்த்தமில்லை, அவசியமில்லை என்பது சமூகம் மாறும் கால கட்டங்களில் மனிதன் கண்கூடாகக் காண்பது.
சிறிய வயதில் போலீஸ்காரனிடம் பிடித்துக் கொடுத்து விடுவேன் என்று மிரட்டி வளர்ந்த பிள்ளை பட்டம் பெற்றபின் பெரிய ஆபீசராகி விட்டான். இன்றும் போலீஸ்காரனை கண்டால் பயம். பொங்கல் இனாம் வாங்கவந்த போலீஸ் காரர்களைக் கண்டு பயந்து உள்ளே போய் அவர்கள் கேட்பதைக் கொடுத்தனுப்பு, அங்கு நிற்கவேண்டாம் அவர்கள் என்றான்.
காலம் என்பதை சிருஷ்டியின் அமைப்பில் உற்பத்தி செய்தது மனம். எனவே மனத்தின் அபிப்பிராயங்கள் காலப் போக்கை நிர்ணயிக்கும், மனம் மாறினால் காலம் அதற்கு கட்டுப்படும். மனம், தான் உற்பத்தி செய்த காலத்தின் நிலைகளுக்கு தன்னை உட்படுத்திக் கொண்டால், காலம் மனத்தை ஆளும்.
அன்னை காலத்தைக் கடந்தவர். அன்னையை ஏற்றுக் கொண்டவரை காலம் கட்டுப்படுத்தாது. காலத்தின் பழைய நிலைகள் அவரைக் கட்டுப்படுத்த முடியாது. இராகுகாலம், எமகண்டம், நல்ல வேளை, கெட்ட நேரம் என்பவற்றுக்கு பக்தர்களிடம் வேலையில்லை. தமிழ்க் காலண்டருக்கு ஆபீஸில் வேலையில்லை. அதைப்பார்த்து அதன்படி நடப்பேன் என்று பிடிவாதம் செய்தால் செய்யும் வேலையில் கோளாறு வரும்.
மனிதன் வாழ்வுக்குட்பட்டவன். என்றுமே மனிதனால் சமூகத்தை எதிர்க்க முடியாது. அது சிரமம். சமூகத்தையே எதிர்க்க முடியாத மனிதனால் வாழ்வை நிச்சயமாக எதிர்க்க முடியாது. வாழ்வை ஒட்டியே அவன் போக வேண்டும், வாழ்வு காலனுக்குட்பட்டது. காலனை எதிர்ப்பது மனிதனுக்கில்லை. எனவே காலத்தின் குணத்திற்கு மனிதன் கட்டுப்படவேண்டும் என்பது உண்மை.
அன்னையை ஏற்றுக்கொண்டபின் மனிதன் வாழ்வுக்கும், வாழ்வைக் கட்டுப்படுத்தும் காலத்திற்கும் அடிமையில்லை. அதனால் காலத்தின் குணவிசேஷம் அவனை பாதிப்பதில்லை. அத்துடன் உலகத்தின் குணவிசேஷங்கள் அன்னையிடம் தலைகீழாகவும் செயல்படுவதுண்டு. கருமி என்று பெயர் வாங்கியவர்கள் அன்னையைப் பார்த்தபின் இதுவரை அவர்கள் வாழ்நாளிலில்லாதது போல் தாராள மனப்பான்மையுடன் நடந்து கொண்டதுண்டு. அதுபோல் கெட்ட வேளைகள் அன்னை பக்தர்கள் வாழ்வில் நல்ல காரியங்களைச் செய்வதும் உண்டு. 7,8 வருஷமாக ஒரு தொழிலை உற்பத்தி செய்து முதல் காரியம் ஒன்றை முடித்த வேளை, பொங்கல் போனபின் கரிநாளாக இருந்தது. ஒரு குறிப்பிட்ட project ஆக (திட்டம்) இருந்தாலும் பரவாயில்லை. 7 வருஷமாக தயார் செய்த தொழில், கரிநாள் அன்று ரிப்போர்ட்டைக் கொடுத்தால், தொழிலே வீணாகிவிடும். எந்த சாதாரண காரியமும் நாம் கரிநாளில் செய்வதில்லை. வருஷத்திற்கே மோசமான நாள். நாளின் குணத்தைப் புறக்கணித்து ரிப்போர்ட்டை அன்றே கொடுத்தார். பக்தர். தொழில் விருத்தியாயிற்று. உள்நாட்டை விட்டு அயல் நாட்டிற்கும் போயிற்று. பல திசைகளிலும் தொழில் வளர்ந்தது. எதிர்பார்த்ததைவிட அதிகமாகவும் வளர்ந்தது.
கெட்ட வேளையைக் கண்டு பயப்படுபவர்களை கெட்ட வேளை பாதிக்கும். அன்னை பக்தர்களைப் பாதிக்காது நம்பிக்கையில்லாவிட்டால் (வேளையின் குணத்தை நம்பாவிட்டால்) நிச்சயமாகப் பாதிக்காது. அத்துடன் அன்னை மீதுள்ள நம்பிக்கை சாஸ்திரத்தின் மீதுள்ள நம்பிக்கையைவிட அதிகமானால், கெட்டவேளையும் நல்லது செய்யும்.நாள் செய்வதை நல்லவர்களால் கூட செய்ய முடியாது என்று ஆரம்பித்தேன். நல்லவர்கள் உலகில் குறைவு. ஒரு நல்லவரால் உலகுக்கு மழை அருளாகப் பெய்கிறது. அவர்களை விட நல்ல நாள் பலன்தரும் என்பது உண்மை.
அன்னை நல்லதை மட்டும் செய்வார். அனைத்தையும் நமக்கு நல்லதை மட்டும் செய்யச் சொல்வார். எவராலும் செய்ய முடியாத நல்லதை, அன்னையை நினைத்துச் செய்யும் காரியங்கள் செய்யும். அன்னையை நினைப்பதால் நேரம் அமிர்த நேரமாகிறது. அன்னை நினைவு நேரத்தின் தன்மையை நிர்ணயிக்கிறது. அன்னையை ஏற்றுக்கொண்டபின், நல்வாழ்வை நிர்ணயிக்கும் திறன் நேரத்திற்கு உள்பட அனைத்துக்கும் போய்விடும்.

Tuesday 8 May 2018

அகிலாண்டேஸ் வரியின் 51 சக்தி பீடங்கள் :

அகிலாண்டேஸ்
வரியின் 51 சக்தி
பீடங்கள்


 தேவீ தாட்சாயணியின் அங்கங்களை மஹாவிஷ்ணுவானவர் தமது சுதர்சன சக்கரத்தால் 51 துண்டுகளாக வெட்டி அவைகள் விழுந்த இடங்களாக கருதப்படும் 51 சக்திபீடங்களின் பெயர்களும் அங்குள்ள தேவியின் பெயர்களும் பைரவமூர்த்திகளின் பெயர்களும் கீழே அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளது 51 சக்தி பீடங்களை பற்றி பலவிதமான மாறுபட்ட கருத்துக்கள் உண்டு இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அட்டவணை திருவாவடுதுறை ஆய்வுமையத்தில் கூறப்பட்டவாறு காட்டப்பட்டுள்ளது.
1) முதல் சக்திபீடம் : அட்டஹாஸம்
விழுந்த அங்கம் - கீழ்உதடு
விழுந்தஇடம் - அட்டஹாஸம் அஹ்மத்பூர் - காட்வா பாதையருகில் - லாப்பூர்
தேவியின் பெயர் - புல்லரா
பைரவர் பெயர் - விஸ்வேஸ பைரவர்
2) இரண்டாம் சக்திபீடம் : உத்கலம்
விழுந்த அங்கம் - தொப்புள்
விழுந்த இடம் - உத்கலபீடம் ஹவுரா - வால்டேர் வழியில் குர்தா ரோடு வழியே பூரி
தேவியின் பெயர் - விமலா
பைரவர் பெயர் - ஜகந்நாத பைரவர்
3),மூன்றாம் சக்திபீடம் : உஜ்ஜையின்
விழுந்த அங்கம் - இடது முழங்கை
விழுந்த இடம் - உஜ்ஜையின் ஹரஸித்தி தேவி ஆலயம் - சிப்பரா நதிக்கரை - ( மத்தியப்பிரதேசம் )
தேவியின் பெயர் - மாங்கல்ய சண்டிகா
பைரவர் பெயர் - கபிலாம்ப பைரவர்
4) நான்காம் சக்திபீடம் : முக்திநாத்
விழுந்த அங்கம் - வலது கன்னம்
விழுந்த இடம் - கண்டகீ நதிக்கரை - முக்திநாத் - ( நேபாளம் )
தேவியின் பெயர் - கண்டகீ சண்டீ
பைரவர் பெயர் - சக்ரபாணி பைரவர்
5) ஐந்தாம் சக்திபீடம் : கன்னியாகுமரி
விழுந்த அங்கம் - முதுகு
விழுந்த இடம் - கன்யாகுமரி ( தமிழ்நாடு )
தேவியின் பெயர் - சர்வாணீ
பைரவர் பெயர் - நிமிஷ பைரவர்
6) ஆறாம் சக்திபீடம் : பவானிபூர்
விழுந்த அங்கம் - வலதுகால் பெருவிரல்
விழுந்த இடம் - பவானிபூர் பூதாத்ரீ ஆலயம் ( பங்களாதேஷ் )
தேவியின் பெயர் - அபர்ணா
பைரவர் பெயர் - க்ஷீரகண்ட பைரவர்
7) ஏழாம் சக்திபீடம் : கர்ணாட்
விழுந்த அங்கம் - காதுகள்
விழுந்த இடம் - கர்ணாட்
தேவியின் பெயர் - ஜயதுர்க்கா
பைரவர் பெயர் - அபீரு பைரவர்
8) எட்டாம் சக்திபீடம் : காஷ்மீர்
விழுந்த அங்கம் - கழுத்தின் மேல்பகுதி
விழுந்த இடம் - அமர்நாத் குகை ( உள்ளே பனியிலான சக்திபீடம் ) காஷ்மீர்
தேவியின் பெயர் - மஹாமாயா
பைரவர் பெயர் - த்ரிஸந்த்யேஸ்வர பைரவர்
9) ஒன்பதாம் சக்திபீடம் : அஸ்ஸாம்
விழுந்த அங்கம் - யோனி
விழுந்த இடம் - காமாக்யா ( பிரம்மபுத்ரா நதிக்கரை ) கௌஹாத்தி - அஸ்ஸாம்
தேவியின் பெயர் - காமா
பைரவர் பெயர் - உமாநந்த பைரவர்
10) பத்தாம் சக்திபீடம் : கல்கத்தா
விழுந்த அங்கம் - வலதுகால் விரல்கள் ( கட்டை விரலைத் தவிர )
விழுந்த இடம் - கல்கத்தா காலீ கோவில் ( மேற்கு வங்காளம் )
தேவியின் பெயர் - காலிகா தேவீ
பைரவர் பெயர் - நகுலீச பைரவர்
11) பதினோராம் சக்திபீடம் : காஞ்சிபுரம்
விழுந்த அங்கம் - எலும்புகள்
விழுந்த இடம் - காமாக்ஷி கோவிலுக்கும் கந்தக்கோட்டத்திற்கும் இடையேயுள்ள மகாகாலீ கோவில் - காஞ்சிபுரம் - தமிழ்நாடு
12) பனிரெண்டாம் சக்திபீடம் : பூரி
விழுந்த அங்கம் - இடுப்பின் வலதுபக்கம்
விழுந்த இடம் - நீலமாதவன் கோவில் ( பூரி ஜகந்நாதர் கோவில் அருகில் ) பூரி - ஒரிஸா
தேவியின் பெயர் - காலீ
பைரவர் பெயர் - அஸிதாங்க பைரவர்
13) பதிமூன்றாம் சக்திபீடம் : ஹவுரா
விழுந்த அங்கம் - அன்னையின் கிரீடம்
விழுந்த இடம் - ஹவுரா - பர்ஹர்வா பாதையில் அஜீம்கஞ்ச் என்ற இடத்திலிருந்து 2 கிமீ தொலைவில் உள்ள பட்நகர் என்ற சிற்றூரில் கங்கைநதிக்கரை தேவி ஆலயம்
தேவியின் பெயர் - விமலா
பைரவர் பெயர் - சம்வர்த்த பைரவர்
14) பதினான்காம் சக்திபீடம் : குருக்ஷேத்ரம்
விழுந்த அங்கம் - வலது கணுக்கால்
விழுந்த இடம் - குருக்ஷேத்ரம் ஸ்தாணு சிவன் ஆலயம் அருகிலுள்ள பத்ரகாலீ கோவில்
தேவியின் பெயர் - சாவித்ரீ
பைரவர் பெயர் - ஸ்தாணுநாத பைரவர்
15) பதினைந்தாம் சக்திபீடம் : குவ்வூர்
விழுந்த அங்கம் - இடது கன்னம்
விழுந்த இடம் - ராஜமுந்திரி அருகேயுள்ள குவ்வூர் கோதாவரிக்கரை - ஆந்திரா
தேவியின் பெயர் - விஸ்வேஸீ
பைரவர் பெயர் - தண்டபாணி பைரவர்
16) பதினாறாம் சக்திபீடம் : கோலாப்பூர்
விழுந்த அங்கம் - முக்கண்கள்
விழுந்த இடம் - கோலாப்பூர் - மஹாராஷ்ட்ரா
தேவியின் பெயர் - மஹாலக்ஷ்மீ
பைரவர் பெயர் - க்ரோதீச பைரவர்
17) பதினேழாம் சக்திபீடம் : சட்காவ்
விழுந்த அங்கம் - வலது முழங்கை
விழுந்த இடம் - பங்களாதேஷில் ஸீதாகுண்டம் அருகேயுள்ள சட்காவ் என்ற இடத்திலுள்ள சந்திரநாத் மலையிலுள்ள சந்திரசேகரர் ஆலயத்தில்
தேவியின் பெயர் - பவாநீ
பைரவர் பெயர் - சந்திரசேகர பைரவர்
18) பதினெட்டாம் சக்திபீடம் : ஸுநந்தா
விழுந்த அங்கம் - மூக்கு
விழுந்த இடம் ஸுநந்தா நதிக்கரையில் உள்ள உக்ரதாரா தேவீ ஆலயம் - சிகார்பூ கிராமம் - பங்களாதேஷ்
தேவியின் பெயர் - ஸுநந்தா
பைரவர் பெயர் - த்ரியம்பக பைரவர்
19) பத்தொன்பதாம் சக்திபீடம் : ஸுஸீந்த்ரம்
விழுந்த அங்கம் - மேல் பல்வரிசை
விழுந்த இடம் - தாணுமாலயன் கோவில் - சுசீந்தரம் - தமிழ்நாடு
தேவியின் பெயர் - நாராயணீ
பைரவர் பெயர் - ஸம்ஹார பைரவர்
20) இருபதாம் சக்திபீடம் : ஹவரா
விழுந்த அங்கம் - அன்னையின் ஹாரம்
விழுந்த இடம் - ஹவரா - க்யூல் வழியில் நல்ஹாடி இரயில் நிலையத்திலிருந்து 3 கிமீ தொலைவிலுள்ள ஆலயம்
தேவியின் பெயர் - காலீகா
பைரவர் பெயர் - யோகேச பைரவர்
21) இருபத்தோராம் சக்திபீடம் : அமர்கண்ட்
விழுந்த அங்கம் - இடுப்பின் இடதுப் பக்கம்
விழுந்த இடம் - அமர்கண்ட் ( ம.பி ) நர்மதை உற்பத்தியாகும் குண்டம்
தேவியின் பெயர் - சோணா
பைரவர் பெயர் - சோணபத்ர பைரவர்
22) இருபத்திரெண்டாம் சக்திபீடம் : நந்திபூர்
விழுந்த அங்கம் - குடல்
விழுந்த இடம் - நந்திபூர் கிராமம் ஆலமரத்தடி கோவில் ( அவுரா - க்யூல் வழியில் சந்தியா இரயில் நிலையம் அருகில் )
தேவியின் பெயர் - காலீகா
பைரவர் பெயர் - யோகேச பைரவர்
23) இருபத்திமூன்றாம் சக்திபீடம் : பசுபதிநாத்
விழுந்த அங்கம் - முழங்கால்
விழுந்த இடம் - பசுபதிநாத் பாக்மதீ நதிக்கரையில் உள்ள குஹ்யேஸ்வரீ ஆலயம் - நேபாளம்
24) இருபத்திநான்காம் சக்திபீடம் : திரிபுரா
விழுந்த அங்கம் - வலது கால்
விழுந்த இடம் - திரிபுராவிலுள்ள ராதாக்ருஷ்ணபூர் கிராமத்தில் 2 கிமீ தொலைவிலுள்ள மலையில் - அஸ்ஸாம்
தேவியின் பெயர் - திரிபுரசுந்தரி
பைரவர் பெயர் - திரிபுரேச பைரவர்
25) இருபத்தைந்தாம் சக்திபீடம் - த்ரிஸ்ரோதா
விழுந்த அங்கம் - இடது கால்
விழுந்த இடம் - வங்காளம் ஜல்பாகுரி ஜில்லா சால்வாடீ கிராமத்தில் உள்ள த்ரிஸ்ரோதா நதியின் கரையில்
தேவியின் பெயர் - ப்ராம்ஹீ
பைரவர் பெயர் - அம்பர பைரவர்
26) இருபத்தாறாம் சக்திபீடம் : பஞ்ச சாகரம்
விழுந்த அங்கம் - கீழ் பல்வரிசை
விழுந்த இடம் - பஞ்ச ஸாகரம்
தேவியின் பெயர் - வராஹீ
பைரவர் பெயர் - மஹாருத்ர பைரவர்
27) இருபத்தேழாம் சக்திபீடம் : கேது ப்ரஹ்மம்
விழுந்த அங்கம் - இடது கை
விழுந்த இடம் - வங்காளம் அஹ்மத்பூர் கட்வா செல்லும் வழியில் கேதுப்ரஹ்மம் கிராமம்
தேவியின் பெயர் - மஹீலா
பைரவர் பெயர் - பீருக பைரவர்
28) இருப்பத்தெட்டாம் சக்திபீடம் : அலோப்தேவீ
விழுந்த அங்கம் - கை விரல்கள்
விழுந்த இடம் - அலோப் தேவீ - ஆலயப் பிரயாகை
தேவியின் பெயர் - லலிதா
பைரவர் பெயர் - பவ பைரவர்
29) இருபத்தொன்பதாம் சக்திபீடம் : சோம்நாத்
விழுந்த அங்கம் - வயிறு
விழுந்த இடம் - ஸோம்நாத் - குஜராத்
தேவியின் பெயர் - ஸந்த்ரபாஹா
பைரவர் பெயர் - வக்ரதுண்ட பைரவர்
30) முப்பதாம் சக்திபீடம் - மதுரா
விழுந்த அங்கம் - கேசம்
விழுந்த இடம் - மதுரா - பிருந்தாவன ரோட்டில் பூதேஸ்வர மஹாதேவர் ஆலயம் ( ப்ருந்தாவனத்தில் இருந்து 3 கிமீ )
தேவியின் பெயர் - உமா
பைரவர் பெயர் - உமேச பைரவர்
31) முப்பத்தோராம் சக்திபீடம் : உஜ்ஜையினி
விழுந்த அங்கம் - மேல் உதடு
விழுந்த இடம் - சிப்ரா நதிக்கரை - உஜ்ஜையின் - மத்தியபிரதேசம்
தேவியின் பெயர் - அவநதீ
பைரவர் பெயர் - லம்பகர்ண பைரவர்
32) முப்பத்திரெண்டாம் சக்திபீடம் : புஷ்கர்
விழுந்த அங்கம் - மணிக்கட்டு
விழுந்த இடம் - புஷ்கர் ( ராஜஸ்தான் )
தேவியின் பெயர் - காயத்ரீ
பைரவர் பெயர் - சர்வானந்த பைரவர்
33) முப்பத்துமூன்றாம் சக்திபீடம் : பாட்னா
விழுந்த அங்கம் - இடது கணுக்கால்
விழுந்த இடம் - படீபடனேஸ்வரீ கோவில் - மகராஜ் கஞ்சி - பாட்னா
தேவியின் பெயர் - ஸர்வானந்தகிரீ
பைரவர் பெயர் - வ்யாமகேச பைரவர்
34) முப்பத்திநான்காம் சக்திபீடம் : மானசரோவர்
விழுந்த அங்கம் - வலது முன் கை
விழுந்த இடம் - மானஸரோவர் ஏரி - கைலாஷ் - திபெத்
தேவியின் பெயர் - தாக்ஷாயணீ தேவீ
பைரவர் பெயர் - அமர பைரவர்
35) முப்பத்தைந்தாம் சக்திபீடம் : உச்சைட்
விழுந்த அங்கம் - இடது தோள்
விழுந்த இடம் - நேபாள எல்லையிலுள்ள ஜனக்புரியிலிருந்து 50 கிமீ தொலைவிலுள்ள உச்சைட் ஊரிலுள்ள துர்க்கையின் ஆலயத்திலிருந்து 14 கிமீ தொலைவிலுள்ள வனதுர்க்கா ஆலயம்
தேவியின் பெயர் - உமா
பைரவர் பெயர் - மஹோதர பைரவர்
36) முப்பத்தாறாம் சக்திபீடம் : ஜெய்ஷோர்
விழுந்த அங்கம் - இடது முன் கை
விழுந்த இடம் - ஜெய்ஷோர் - பங்களாதேஷ்
தேவியின் பெயர் - யசோரேஸ்வரீ
பைரவர் பெயர் - சண்ட பைரவர்
37) முப்பத்தேழாம் சக்திபீடம் : குளித்தலை
விழுந்த அங்கம் - வலது தோள்
விழுந்த இடம் - குளித்தலை ( அராளகேசி அம்மன் திருக்கோவில் )
தேவியின் பெயர் - குமாரீ
பைரவர் பெயர் - சிவா பைரவர்
38) முப்பத்தெட்டாம் சக்திபீடம் : சித்ரகூடம்
விழுந்த அங்கம் - வலது மார்பு
விழுந்த இடம் - சித்ரகூடம் அருகிலுள்ள மைஹர்
தேவியின் பெயர் - ஷிவானி
பைரவர் பெயர் - சண்ட பைரவர்
39) முப்பத்தொன்பதாம் சக்திபீடம் : இலங்கை
விழுந்த அங்கம் - அன்னையின் கால் சலங்கை
விழுந்த இடம் - இலங்கை
தேவியின் பெயர் - இந்த்ராக்ஷீ
பைரவர் பெயர் - ராக்ஷேஸேஸ்வர பைரவர்
40) நாற்பதாம் சக்திபீடம் : ஒண்டால் சந்தியா
விழுந்த அங்கம் - நெஞ்சு
விழுந்த இடம் - ஒண்டால் சந்தியா வழியில் துப்ராஜ்பூரிலிருந்து 10 கிமீ வடக்கே பாபஹரா என்ற இடத்திலுள்ள வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகேயுள்ள மயானம்
தேவியின் பெயர் - மஹிஷாஸுர மர்த்தினி
பைரவர் பெயர் - வக்ரநாத பைரவர்
41) நாற்பத்தோராம் சக்திபீடம் : மணிகர்ணிகா
விழுந்த அங்கம் - அன்னையின் குண்டலங்கள்
விழுந்த இடம் - காசி மணிகர்ணிகா கட்டிடத்தின் அருகேயுள்ள ஆலயத்தில்
தேவியின் பெயர் - விசாலாக்ஷி
பைரவர் பெயர் - கால பைரவர்
42) நாற்பத்திரெண்டாம் சக்திபீடம் : பஞ்சகுரா
விழுந்த அங்கம் - இடது கணுக்கால்
விழுந்த இடம் - வங்காளம் மிட்னாபூர் மாவட்டம் பஞ்சகுரா இரயில் நிலையத்திற்கருகே உள்ள விபாசநதிக் கரையிலுள்ள ஆலயம்
தேவியின் பெயர் - கபாலினி
பைரவர் பெயர் - பீம பைரவர்
43) நாற்பத்திமூன்றாம் சக்திபீடம் : வைராட்
விழுந்த அங்கம் - இடது கால் பெருவிரல்
விழுந்த இடம் - வைராட் - ஜெய்ப்பூர் அருகேயுள்ள கிராமம்
தேவியின் பெயர் - அம்பிகா
பைரவர் பெயர் - அம்ருதாக்ஷ பைரவர்
44) நாற்பத்திநான்காம் சக்திபீடம் : ஹவுரா
விழுந்த அங்கம் - இருதயம்
விழுந்த இடம் - ஹவுரா - பாட்னா வழியில் ஜஸடீஹ் வழியிலுள்ள வைத்யநாதர் ஆலயம்
தேவியின் பெயர் - ஜய துர்க்கா
பைரவர் பெயர் - வைத்யநாத பைரவர்
45) நாற்பத்தைந்தாம் சக்திபீடம் : பாஉர்பாக்
விழுந்த அங்கம் - இடது கணுக்கால்
விழுந்த இடம் - அஸ்ஸாமிலுள்ள ஷில்லாங்கிலிருந்து 52 கிமீ தொலைவிலுள்ள ஜயந்தியா மலையிலுள்ள பாஉர்பாக் என்ற கிராமம்
தேவியின் பெயர் - ஜெயந்தீ
பைரவர் பெயர் - க்ரமதீஸ்வர பைரவர்
46) நாற்பத்தாறாம் சக்திபீடம் - திருவானைக்காவல்
விழுந்த அங்கம் - முகவாய்க் கட்டை
விழுந்த இடம் - திருவானைக்காவல் - தமிழ்நாடு
தேவியின் பெயர் - அகிலாண்டேஸ்வரீ
பைரவர் பெயர் - விக்ருதாக்ஷ பைரவர்
47) நாற்பத்தேழாம் சக்திபீடம் : ஜலந்தர்
விழுந்த அங்கம் - இடது மார்பு
விழுந்த இடம் - ஜலந்தர் - பஞ்சாப்
தேவியின் பெயர் - திரிபுர மாலினி
பைரவர் பெயர் - பீக்ஷண பைரவர்
48) நாற்பத்தெட்டாம் சக்திபீடம் : ஜ்வாலாமுகீ
விழுந்த அங்கம் - நாக்கு
விழுந்த இடம் - ஜ்வாலாமுகீ ரோட்டிலிருந்து 21 கிமீ - பஞ்சாப்
தேவியின் பெயர் - ஸித்திதா ( ஜ்வாலை வடிவில் )
பைரவர் பெயர் - உன்மத்த பைரவர்
49) நாற்பத்தொன்பதாம் சக்திபீடம் : ஸ்ரீசைலம்
விழுந்த அங்கம் - கழுத்தின் கீழ்பகுதி
விழுந்த இடம் - மல்லிகார்ஜூனம் - ஸ்ரீசைலம் - ஆந்திரப் பிரதேசம்
தேவியின் பெயர் - பிரம்மராம்பிகாம்பாள்
பைரவர் பெயர் - சம்பராநந்த பைரவர்
50) ஐம்பதாவது சக்திபீடம் : ஸ்ரீ பர்வதம்
விழுந்த அங்கம் - வலது புட்டச்சதை
விழுந்த இடம் - காஷ்மீர் - லடாக் இடையேயுள்ள ஸ்ரீ பர்வதம்
தேவியின் பெயர் - சுந்தரி
பைரவர் பெயர் - சுந்தரானந்த பைரவர்
51) ஐம்பத்தொன்றாம் சக்திபீடம் : ஹிஸ்கோஸ்
விழுந்த அங்கம் - தலையின் உச்சிக்குழி
விழுந்த இடம் - பாகிஸ்தான் கராச்சியிலிருந்து வடமேற்கில் ஹிஸ்கோஸ் நதிக்கரையில் பலுசிஸ்தான் லாஸ்பேஸ்தானிலுள்ள ஹிங்க்லாஜ் என்னுமிடத்தில் ஜ்வாலை ( தீப்பிழம்பு ) வடிவில் உள்ளாள்
தேவியின் பெயர் - கோடரீ
பைரவரின் பெயர் - பீமலோசன பைரவர்
சொல்லுக்கடங்காளே - பராசக்தி
சூரத்தனங்கள் எல்லாம்
வல்லமை தந்திடுவாள் - பராசக்தி
வாழி என்றே துதிப்போம்.


தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க

 தீய சக்திகளால் ஏற்படும் பாதிப்புகள் நீங்க அடிக்கடி பயந்து அல்லது கெட்ட கனவு கண்டு திடுக்கிட்டு எழுதல், உறக்கத்தில் ஏதோ ஒன்று அமுக்குவது போல...