அசுர குருவான சுக்கிரன் சுகபோகங்களின் அதிபதி. திருமண பாக்யத்துக்கு அதிகாரம் வகிப்பவர். களத்திரகாரகன், இன்பங்களின் ஊற்றாக இருப்பவர். ஒருவருக்கு பொன், பொருள், அழகமைந்த மனைவி, சுகமான வாழ்க்கை, உயர் பதவி, கலை, வாகன் யோகம் போன்றவைகளை சிறப்புடன் வாழும் யோகத்தை தருவது சுக்கிரன்தான்
சொந்த அழகான வீடு வண்டி வாகனங்கள் ஆடை ஆபரணங்கள் எப்போதும் இளமை யான தோற்றம் சிரித்த முகம். சகல செல்வங்களும் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும்
சுக்கிரன் காமத்துக்காரன் அதிகாலையில் விடி வெள்ளியாக உதித்து மனிதனுக்கு காமக் கிளர்ச்சியை ஏற்படுத்துவதும் இவர் தான். தாம்பத்ய வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதும் இவரது அனுக்கிரகத்தால் நடக்கக்கூடியதே. எல்லா வகையிலும் இன்பங்களை வாரி வழங்குவதாலேயே சுக்கிர பகவான் சுகபோகம் அருளக்கூடியவர் என்றும் போற்றப்படுகிறார்.
ரிஷபம், துலாம் ராசியில் சுக்கிரன் ஆட்சி பெறுகிறார். மீனம் ராசியில் உச்சமும், கன்னி ராசியில் நீசமடைகிறார் சுக்கிரன். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெற்றிருந்தால் கலாரசனை என்கின்ற அற்புத உணர்வு அளிப்பவர், காதல் கொண்டு சுகமடையும் தகுதி, சிற்றின்பம், திருமணம் முதலான நன்மைகளை ஆணுக்கு அளிப்பவர். பெண்களுக்கு நளினத் தன்மையையும் அழகான தோற்றம், கவர்ச்சி, வீரியசக்தி, அறிவாற்றல், அழகான கணவனையும் சுக போகங்களில் திளைக்கும் ஆற்றலையும் வழங்குவார்.
சுக்கிரன் நமது ஜாதக கட்டத்தில் நல்ல யோக அம்சத்துடன் இருப்பது அவசியம். லக்னத்துக்கு 1, 2, 4, 5, 7, 9, 10, 11 ஆகிய இடங்களில் பலம் பெற்று இருந்தால் நல்ல பலன்களை வாரி வழங்குவார். இவருடைய தசா காலமான 20 வருடங்களில் மிகப்பெரிய ராஜ யோக பலன்கள் உண்டாகும்.
நீசம் - என்றால் கெட்டு நிற்பது என்று பொருள். சுக்கிரன் கன்னி ராசியில் நீசம் அல்லது 6, 8, 12 போன்ற கிரக சேர்க்கை பெற்று பலம் குறைந்து இருந்தால் எதிர்மறையான பலன்கள் ஏற்படலாம். பெண்களால் அவமானம், திடீர் இழப்புகள், செலவுகள், பணம் செலவு கவுரவ குறைவு, அவமரியாதை, மர்ம ஸ்தானங்களில் வியாதி என்று கெடுபலன்கள் ஏற்படலாம்.

No comments:
Post a Comment