Saturday, 10 January 2026

நாம் பிறரைப் பார்த்து அங்கலாய்ப்பதால் வரும் தீமைகள்


 நாம் பிறரைப் பார்த்து அங்கலாய்ப்பதால் வரும் தீமைகள்

கோபப்படுவோரின் உணர்வை சுவாசித்தால் நம்மிடத்தில் அது “காளி” ஆகின்றது. அதிகமானால் இரத்தக் கொதிப்பாகின்றது.
இரத்தக் கொதிப்பு வந்துவிட்டால் மனிதரின் கை கால் அங்கங்கள் சுருங்குகின்றன… கோபத்தின் தணலும் அதிகமாகின்றது. இதைப் போன்ற உணர்வுகள் வரப்படும் பொழுது உடலுக்குள் அணுக்களாகி… வேதனையின் உணர்வுகளே அதிகமாகும்.
ஆகையால்
1.யாரைப் பார்த்தாலும் கோபிக்கும் தன்மையும்
2.தான் எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றால் உணர்ச்சி வசப்பட்டு அழுவதும்
3.அவர்களைக் கோபிப்பதுமான உணர்வுகளைத் தூண்டிவிடும்.
இவர் யார் மீது அதிகப் பற்று கொண்டு பார்க்கின்றாரோ அல்லது இவர் மீது யார் பற்று கொண்டு பார்க்கின்றனரோ அவருடைய உணர்வுகளில் இது பதிவாகி அந்த உணர்வின் தன்மை அதிகமாகி விட்டால் இவருடைய உயிரான்மா அவருடைய உடலுக்குள் செல்கின்றது.
பின்… உடலில் இருந்த பொழுது தனக்குள் விளைய வைத்த உணர்வுகளை அவரிடத்திலும் உருவாக்குகின்றது.
இவருடைய உடலில் அதை உருவாக்கி அதே உணர்வினைத் தனது உணவாக ஈர்க்கின்றது. இவருடைய உடலில் இந்த ஆன்மா புகுந்து விட்டதால்
1.இவருக்கும் கோபம் அடிக்கடி வரும்
2.ஏன் கோபம் வருகிறது…? என்றே இவருக்குத் தெரியாது.
3.பின் இவருடைய உடலையும் வீழ்த்திவிட்டு வெளியே சென்றபின் மனிதனல்லாத பிறவியைத்தான் அடைகின்றது.
இதில் எத்தகைய உணர்வின் வலுவைச் சேர்த்துக் கொண்டதோ… பரிணாம வளர்ச்சியில் வந்த பொழுது எந்தெந்த குணங்கள் கொண்ட உடலின் உருவங்கள் பெற்றதோ… அதற்குத்தக்க உருவத்திற்கு உயிர் அழைத்துச் சென்று… எங்கே அதனின் உணர்வின் வலு இருக்கின்றதோ அங்கே அழைத்துச் செல்கின்றது.
உதாரணமாக இன்று விஞ்ஞான அறிவு கொண்டு, ஒரு TV நிலையத்தில் ஒரு அலைவரிசையில் நிகழ்ச்சிகளை ஒளிபரப்பப்படும் பொழுது மறுமுனையில் அதே அலைவரிசையில் நமது TV.யைத் திருப்பி வைக்கப்படும் பொழுது அந்த நிகழ்ச்சிகளைக் காண்கின்றோம்.
இதைப் போன்று
1.நமக்குள் எவருடைய உணர்வுகளைப் பதிவாக்கிக் கொள்கின்றோமோ அதனின் உணர்வுகள் உந்தப்படும் பொழுது
2.அதே நினைவின் உணர்வுகளை நாம் சுவாசித்து அதன் வழிகளில் பெருக்கப்படும் பொழுது
3.இந்த உடலை விட்டுச் சென்றபின் அவருடைய உடலுக்குள் நாம் புகுந்து கொள்கின்றோம்.
இயற்கையின் நியதிகளைத் தெளிவாகக் கூறுகின்றது நமது சாஸ்திரங்கள்.
ஒருவர் தொழிலில் முன்னேற்றமடைந்து அவருடைய மகிழ்ச்சியின் நிலைகளைப் பார்த்து… நாம் தமது தொழில் முன்னேற்றம் அடையவில்லை என்று சோர்வடைந்து அங்கலாய்த்துக் கொள்கிறோம்.
1.பார்…! நான் இத்தனை தொழில் செய்கின்றேன் எனக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.
2.ஆனால் ஆண்டவன் அவர்களுக்குக் கொடுத்துக் கொண்டே இருக்கின்றான்…! என்று
3.அவர்பால் உயர்வைக் காட்டி தன்பால் அங்கலாய்த்துக் கொள்ளப்படும் பொழுது… “அந்த எண்ணம்”
4.நமக்குள் இருக்கும் நல்ல அணுக்களுக்கு உணவு கொடுப்பதில்லை… நல்லதை வளர்க்கும் சக்தியை இழக்கின்றது.
அங்காளேஸ்வரி என்ன செய்கின்றது…? தன் குழந்தையையே பிளக்கின்றது. குடலை உருவுகின்றது. அதனுடைய வாழ்க்கையை அழிக்கின்றது.
இதைப் போன்றுதான் நாம் வேதனையை நுகர்வதனால் நமது உடலினுள் நம்மை மனிதனாக உருவாக்கிய நல்ல குணங்களை நாம் பிளந்து விடுகின்றோம்.
இதைத் தான் அவ்வாறு உருவமாகக் காட்டினார்கள் ஞானிகள். அதாவது,,,
1.அருவ நிலையில் செயல்படுவதை உருவமாகக் காண்பித்து
2.அங்கே மடி மீது குழந்தையை வைத்துக் குடலை உருவுவதாகக் காண்பித்துள்ளார்கள் ஞானிகள்.
யாரையோ பார்த்து அங்கலாய்த்து அதனின் உணர்வின் சக்தியை நமக்குள் அதிகரிக்கப்படும் பொழுது… நமக்குள் வளர்ந்து வரும் நல்ல குழந்தைகளுக்கு உணவு கொடுக்காது அதாவது… “நம்மிடத்தில் உள்ள நல்ல அணுக்களைப் பிளந்து விடுகின்றது…” என்பதனைத் தெளிவாகக் காண்பித்தார்கள் ஞானியர்கள்.
ஆனால் நாம் இப்பொழுது என்ன செய்கிறோம்…?
அங்காளேஸ்வரிக்கு ஆட்டையும் கோழியும் கொடுத்தால் அவள் நம்மைக் காப்பாற்றுவாள் என்று நமது நல்ல குணங்களைக் கொன்றிடும் நிலையாக அவளுக்கு இன்னொரு ஜீவனைப் பலி கொடுக்கின்றோம்.
பலி கொடுத்தால் அவள் நமக்குச் செய்வாள் என்று அந்த அகங்கார உணர்வுகளை எடுத்துப் பலியிட்டு அதன் உணர்வினை நுகர்ந்து விட்டால் இந்த உணர்வின் தன்மையே நமது உடலில் விளைகின்றது.
பின்… எதிலும் நம் காரியம் சித்தி ஆகவில்லை என்றால் என்ன செய்கிறோம்…?
தன் சொந்தமோ நண்பர்களோ அவர்களுடைய உயர்வின் தன்மையைக் கண்டு அங்கலாய்ப்பதும்… வெறி கொண்ட உணர்வுகளைப் பெறுவதும்… ஆக இந்த உணர்வின் தன்மையினைக் கொண்டு வரப்படும் பொழுது…
1.எவர் மேல் இந்த உணர்வின் சக்தி கொண்டாரோ அவருடைய உடலுக்குள்
2.இவர் இறந்தபின்… இவருடைய உயிரான்மா புகுந்து கொள்ளும்.
அதாவது… இந்த ஆன்மா வெளி வந்தபின் “தன் மேல் வெறுப்பு கொண்டோர் உணர்விலேயோ… அல்லது இவர் மேல் பாசம் கொண்டோர் உடல்களிலோ…” இது ஈர்க்கப்படுகின்றது.
நோய்வாய்ப்பட்டு இவர்கள் மரணமடையப்படும் பொழுது… அவர் நண்பர்கள் உற்றுப் பார்த்து இதைக் கேட்டறிந்தால் இதே உணர்வுகள் கொண்டு அந்த ஆன்மா அங்கே “அங்காளேஸ்வரி போன்று…” காட்சி தரும்.
அந்த உணர்வின் தன்மை இங்கே பயமுறுத்தும். நல்லதை எண்ண முடியாதபடி “ஐயோ என்னை விரட்டுகின்றது… ஏதோ என்னைத் துரத்துகின்றது…” என்ற நிலை வரும்.
வாழ்க்கையில் வெறுப்படைந்தோர் உணர்வுகள் அதிகரித்து விட்டால் அவர் உடலுக்குள் சென்றால் இப்படித் தான் செய்யும்.
எதனின் உணர்வை இதற்குள் வளர்த்துக் கொண்டதோ அதன் ரூபமாகக் காட்சி கொடுத்து
1.“இது வருகிறது” என்றும்
2.சோர்வடையும் நேரங்கள் எல்லாம் “என்னைத் துரத்துகின்றது தூங்க விடுவதில்லை…” என்றும் சொல்வார்கள்.
அது மட்டுமல்ல…!
1.எந்தச் சிலையைப் பார்த்து அந்த உணர்வின் தன்மையைத் தனக்குள் எடுத்துக் கொண்டதோ
2.இன்னொரு உடலுக்குள் சென்றபின் “எனக்கு ஏன் ஆடு கொடுக்கவில்லை…?
3.எனக்குக் கொடுத்தது ஏன் சரியாகக் கொடுக்கவில்லை…” என்றும்
4.இந்த உணர்வு கொண்டு அந்த உடலிலே இயங்குகின்றது.
5.அசுர உணர்வின் செயல்களையே அங்கே செயல்படுத்தும்.
ஆகவே இந்த உணர்வுகள் சிறுகச் சிறுக அந்த உடலில் வளர்ந்து அந்த உடலில் இருக்கும் நல்ல அணுக்களைக் கொன்று புசித்துக் கொண்டேயிருக்கும்.
இவ்வழியில்தான் மரணங்கள் நேரிடுகின்றது. இதை எல்லாம் மாற்றியமைக்க என்ன செய்ய வேண்டும்…?
எத்தனையோ கோடிச் சரீரங்களில் பலவற்றிற்கு இரையாகி அதிலிருந்து மீண்டிடும் உணர்வை வளர்த்து மனிதனாக உருவாகி… பகைமை உணர்வுகள் இருந்தாலும் அதை அடக்கிப் பகைமையற்ற நிலையாக மாற்றி… உணர்வின் தன்மையை ஒளியாக மாற்றி அதன் செயலாக்கமாக…
1.தமது ஆறாவது அறிவைப் பயன்படுத்திய அனைவருமே இன்று சப்தரிஷி மண்டலங்களாகவும்
2.துருவ நட்சத்திரமாகவும் வாழ்ந்து வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
3.அந்தத் துருவ நட்சத்திரத்தின் அருள் சக்தியை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் எடுத்து
4.நம்மிடத்தில் உள்ள பகைமை உணர்வுகளையும் வெறுப்பான உணர்வுகளையும் மாய்த்துப் பழக வேண்டும்.
துருவ நட்சத்திரத்தின் உணர்வுகளை நம்முள் வளர்த்து உடலில் உள்ள அணுக்களில் அதை விளையச் செய்து… சப்தரிஷி மண்டலங்களின் அருள் வட்டத்தில் இணைந்திடும் உணர்வாக வாழ்ந்திடல் வேண்டும்
அவ்வாறு வாழ்ந்து வரும் அனைவரும் பொருள் கண்டுணர்ந்து செயல்படும் சக்தியையும் மலரைப் போன்ற மணத்தையும் மகிழ்ந்து வாழ்ந்திடும் சக்தியையும் பெறுவதற்கு எமது அருளாசிகள்.

No comments:

Post a Comment

தினமும் ஒரு துன்பத்தை வரமாக கேட்ட குந்திதேவி.......ஏன்?...

 தினமும் ஒரு துன்பத்தை வரமாக கேட்ட குந்திதேவி.......ஏன்?... குருஷேத்திரப் போர் முடிந்து விட்டது. தர்மத்துக்கும், அதர்மத்துக்கும் இடையிலான யு...