வரலாற்றில்
இளநீர்
நீரிழப்பு ஏற்பட்டவர்களுக்கு உடனடியாக ஆற்றலைக் கொடுக்க இளநீரை அக்கால மக்கள் பயன்படுத்தியுள்ளனர். சோழர்கள் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்ட இலவச மருத்துவச் சாலைகளில், நோயாளிகள் அனைவருக்கும் தினமும் இளநீர் வழங்கப்பட்டதற்கான கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன. இளநீரின் மருத்துவச் சிறப்பைப் போற்றும் வகையில் மங்கல நிகழ்ச்சிகளின்போதும், போர், விழாக்களின் போதும் அனைத்து வீடுகளின் முன்பும் செவ்விளநீர்க் குலைகளை நம் மூதாதையர் இடம்பெறச் செய்தனர்.
இளமை தரும்
எப்போதும் இளமையாக இருக்க விரும்புபவர்கள், இளநீரை அதிகம் அருந்தலாம். இதிலுள்ள `கைனெடின்’(kinetin) தோல் சுருக்கங்களைக் குறைப்பதுடன், செல் செயல்பாடுகளைச் சிறப்பாக்கி முதுமையைத் தள்ளிப்போட உதவுகிறது. செல்களில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து, இளமையைத் தக்கவைக்க உதவும் எதிர்-ஆக்ஸிகரண (Anti-oxidants) பொருட்களும் இளநீரில் அதிகம். புற்றுநோயின் ஆதிக்கத்தைக் குறைக்கும் திறன் இளநீருக்கு உண்டு.
எப்போது அருந்துவது?
உணவுக்கு முன்பு இளநீர் அருந்துவதால் வயிற்றில் அமிலத்தன்மை அதிகரிக்கும் என்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. வெறும் வயிற்றில் இளநீரைப் பருகினால், வயிற்றுப் புண் உண்டாவதுடன், பசியும் மந்தப்படும் என்கிறது பல நூற்றாண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட பதார்த்தக் குணச் சிந்தாமணி பாடல் ஒன்று. எனவே, உணவுக்குப் பின் சிறிது நேரம் இடைவெளி விட்டுப் பருகினால், நல்ல பசி உண்டாவதோடு, வாத, பித்தத்தைக் குறைக்கும் பலனும் கிடைக்குமாம். மலம் சிக்கலின்றி வெளியேறி, தேகமும் பொலிவு பெறும். அதனால் உணவுக்குப் பின் இளநீரைப் பருகுவதே நல்லது.
இளநீர் வழுக்கை:
இளநீரைத் தேக்கி வைத்து, இளநீரோடு உறவாடும் வழுக்கைக்கும் குளிர்ச்சியுண்டாக்கும், சிறுநீரை அதிகரிக்கும் குணம் உண்டு. செரிமானப் பாதையில் உள்ள புண்களைக் குணப்படுத்தவும் செய்யும்.
மருந்துகளின் ஆதாரம்:
சித்த, ஆயுர்வேத மருத்துவத்தில் கண் மருந்துகள் மற்றும் வயிற்றுப் புண்ணைக் குறைக்கும் மருந்துகளைச் செய்ய இளநீர் முக்கியப் பொருளாகப் பயன் படுத்தப்படுகிறது. சில மருந்துகளைச் சுத்தி செய்யும் (Purification process) திறனும் இளநீருக்கு உண்டு.

No comments:
Post a Comment