Friday, 10 April 2026

அன்னை வாராஹி பற்றி இதுவரை அறியாத பல ரகசியங்களை


  

அன்னை வாராஹி பற்றி இதுவரை அறியாத பல ரகசியங்களை 
வராக பெருமானின் பெண் வடிவமாக அவதரித்தவள் இந்த அன்னை. பங்குனி மாத தேய்பிறையின் பஞ்சமி திதியோடு கூடிய கேட்டை நட்சத்திரம் அவளுக்கான நாள். இவள் மற்ற சப்த கன்னியரில் இருந்து இவள் கொஞ்சம் வித்தியாசமானவள், அதி உச்ச பலசாலி மிருக பலம் கொண்டவள், அதே நேரம் கனிவும் அன்பும் நிரம்பிய மனம் கொண்டவள். லலிதாம்பிகையின் படைத்தலைவி இவளே. தண்டினி என்ற பெயருடன் சிம்ஹ வாஹினியாய்க் காட்சி கொடுப்பாள். இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள், தீராத பகைகள் தீரும்.
வராகமூர்த்தியின் சக்தி மிக பெரிது, இவள் நீல நிறமானவள் நிறமானவர். பன்றியின் பன்றியின் வராஹ முகத்தினையும் பெரிய வயிற்றினையும் கொண்டிருப்பார். இவளது கரங்களில் சங்கு, சக்கரம், கலப்பை, உலக்கை, பாசம், அங்குசம், தண்டம் என்பன காணப்படும். இரு கரங்கள் அபய, வரத முத்திரையிலிருக்கும்.
புராணம் சொல்லும் பெரிய போர்களிலெல்லாம் இவள் படையோடு வந்து வெற்றிகொடுப்பாள், முருக பெருமானின் போர், அம்பிகைகள் செய்த போர், சிவன் செய்த போர், விஷ்ணு செய்தபோர் என எல்லா போர்களிலும் வந்து எதிரிகளை ஒழித்து கட்டுவாள். லலிதா பரமேஸ்வரியின் ரத, கஜ, துரக, பதாதி எனும் நால்வகைப் படைகளுக்கும் தலைவி [சதுரங்க சேனா நாயிகா] எனும் தண்டினி தான் அன்னை வராஹி.
"தந்திரராஜ தந்த்ரம்" எனும் நூல் வராஹி அம்மனை "லலிதையின் தந்தை" என்கிறது. ஆம், வராஹி அம்மன் பெண் தெய்வமாக இருப்பினும் தம்முடைய காக்கும் திறத்தாலும் ஆற்றல் வளத்தாலும் ஆண் தெய்வமாகவே "தந்திரராஜ தந்த்ரம்" எனும் நூல் வராஹி அம்மனை போற்றுகிறது.
இதே கருத்தை "பாவனோபநிஷத்" எனும் நூல், "வாராஹி பித்ரு ரூபா" என்கிறது. "பஞ்சமி பஞ்சபூதேஸி" என லலிதா ஸஹஸ்ரநாமம் வராஹியை போற்றுவதையும் நாம் உணரவேண்டும்.
வாராஹியை பஞ்சமி, தண்டநாதா, ஸங்கேதா, ஸமயேஸ்வரி, ஸமயஸங்கேதா, வாராஹி,போத்ரிணீ, ஷிவா, வார்த்தாலீ, மஹாஸேனா, ஆக்ஞாசக்ரேஸ்வரி, அரிக்னீ போன்ற நாமாக்களைக் கூறி வழிபடல் பெரும்புண்ணியம். "வாராஹி மாலை" எனும் நூலில் ''சிங்கத்தின் மீது வருவாள் வாராஹி சிவசக்தியே'' என கூறிஉள்ளதிலிருந்து அம்மையப்பன் எனும் சிவசக்தி வடிவமாக வராஹி அம்மன் திகழ்கிறாள் என்பது தெளிவு.
இந்த தேவியினை பற்றி கொஞ்சம் அழமாக காணவேண்டும். இந்த அன்னைக்கு ஏன் வராஹி என வடிவம் கொடுத்தார்கள் என்றால் அவள் சக்தி அப்படியானது, அவளின் ஆற்றல் எப்படியானது என சொல்ல வராஹத்தை காட்டினார்கள். அதை பன்றி என சொல்லகூடாது, பன்றி என்பது வேறு வராஹம் என்பது வேறு. காட்டில் சுத்தமான இடங்களில் இருப்பது வராஹம், சுத்தமான தாவர பட்சி, கிழங்குகளை மட்டும் உண்ணும் வழக்கம் கொண்டது, அபார பலம் கொண்டது. பன்றியும் வராஹமும் ஒன்றல்ல ஒரே சாயல் கொண்டவை அன்றி இரண்டும் வேறு வேறானவை. வராகத்துக்கு எந்த விலங்குக்கும் இல்லா சிறப்பு ஒன்று உண்டு. அது அகழ்ந்தெடுப்பது. பூமியினை தோண்டி சென்று கிழங்கும் இதர வேர்களையும் கண்டறியும் சக்தி வராகத்துக்கு மட்டும்தான் உண்டு. காட்டில் பலமானதும் வெல்ல முடியாதமுமான அந்த வராஹம் ஒன்றே பூமியினை அகழும். இதை கவனித்த ரிஷிகள் மனதின் ஆழம் வரை சென்று ஆசை, அகங்காரம், வன்மம், கோபம், காமம் என எல்லாவற்றையும் வேறோடு கிள்ளி எறியும் சக்திக்கு அந்த வடிவம் கொடுத்தார்கள். பகையோ, படையோ எது என்றாலும் அடியாழம் வரை ஆதிவேர் வரை கருவறுக்கும் சக்திக்கு அந்த உருவை கொடுத்தார்கள். ஒரு செடியின் மரத்தின் கிழங்கு இருக்கும் வரை அது முளைத்து கொண்டே இருக்கும், மண்ணுக்கு மேல் வெட்டினாலும் அது துளிர்த்துகொண்டே இருக்கும், வெட்ட வெட்ட துளிர்க்கும். ஒரு பெரும் பிரச்சினை அல்லது விவகாரம் தீர அதன் அடியாழம் வரை சென்று அகழ்ந்து எடுக்க வேண்டும் அதை செய்யும் சக்தியினை வராஹத்தின் வடிவம் என சொல்லி புரியவைத்தார்கள். படையோ, எதிரியோ, பகையோ, மனமோ எது என்றாலும் அடியாழம் வரை சென்று எல்லாம் எடுத்து வெளியில் பாட்டு அழித்தல் என்பதே பாதுகாப்பு.
அந்த முழு பாதுகாப்பை தரும் சக்தியினை வராஹி என்றார்கள். எளிதில் புரியும்படி சொன்னார்கள்.
இன்னொரு சூட்சுமான விஷயத்தையும் காட்டில் தவமிருந்த ரிஷிகள் உணர்ந்தார்கள். அது நுட்பமானது
அதாவது வராஹத்தின் மூச்சு கிட்டதட்ட பிரணவ மந்திரம் போன்ற ஒலியுடையது. இதை எல்லாம் குறியீடாக வைத்துத்தான் "ஓம்" என மந்திரத்தில் லயித்து மனம் தியானத்தில் இருந்தால் அகத்தின் அடியில் இருக்கும் எல்லா தீய குணங்களையும் இறைசக்தி வராகம் பூமியினை கிளறி எடுப்பது போல் எடுக்கும் என உணர்த்த வராஹத்தை தெய்வ உருவமாக்கினார்கள். அந்த உருவுக்கு இந்த தெய்வம் எதிரியினை அடிவேர் வரை சென்று அகற்றும், எதிரி மீண்டும் தளைக்கமுடியாதபடி ஒழிக்கும் என சொல்லி வழிபட சொன்னார்கள்.
நமது தெய்வங்கெளெல்லாம் விலங்கு முகங்கள் என ஒதுக்க முடியாதவை, ஏதோ ஒரு காலத்தில் செய்த மூடநம்பிக்கை என தள்ளமுடியாதவை. அவை எல்லாம் தத்துவரூபங்கள், ஒரு காலத்தில் மானிடருக்கு புரியும் வகையில் பெரும் சக்தியினை உதாரணமாக வடித்து வைத்த பிரபஞ்ச ரகசியங்கள், இறைசக்தியின் வல்லமையினை சொல்லும் வடிவங்கள்
அந்த இறைசக்தி தியானத்தில் வராஹி என வரசொன்னால் அது அகத்தில் வந்து பொல்லா குணங்களின் கிழங்குவரை வேர் வரை அகழுகின்றது. அதை ஆபத்தில் அழைத்தால் அது எதிரியின் மூலவேர் வரை சென்று ஒழித்து நிர்மூலமாக்கி பக்தனை காக்கின்றது. எது மூழ்கி விட்டதோ, எது புதைந்துவிட்டதோ அதை திரும்ப மீட்டு கொடுப்பது வராஹ தெய்வம், விஷ்ணு வராகமாக வந்து பூமியினை மீட்டது அப்படித்தான்,
(வராகர் பூமாதேவியிடம் பேசும் விதமாக அமைந்த "வராக புராணம்" நமது மதத்தின் சிறப்புமிக்க 18 புராணங்களுள் ஒன்று, மிகபெரும் தத்துவசாரத்தை அந்த புராணம் கொடுக்கின்றது, மறைந்திருக்கும் ரகசியங்களை தோண்டி எடுத்து தருவது போல வராஹமாக வந்து ரகசியங்களை தோண்டி தோண்டி தருகின்றார் பெருமான்)
அன்னை வராஹியாய் வந்து அசுரர்கள் குலத்தை வேர்வரை ஒழித்ததும் அப்படித்தான். புகழ்மிக்கதாக கொண்டாடபட்ட வராஹி தேவி சிறப்பான இடத்தை பெற்றிருக்கின்றாள், அவள் வழிபாடு அவ்வளவு பிரசித்தியானது. அவளை வணங்கினால் தோல்வி வாரா, அவமானங்கள் வாரா, கண்ணீரோ கவலையோ வாரா, அதனாலே அவள் வராஹி எனப்பட்டாள். எங்கெல்லாம் வெற்றி வேண்டுமோ அங்கெல்லாம் அவள் வழிபடபட்டாள், புராணங்களில் இருந்தும் இன்னும் பல மன்னர்களின் சரித்திரத்திலும் அவள் இடம்பெற்றாள்.
ராஜராஜ சோழனுக்கு அவள் தனிபெரும் தெய்வம், தோல்வியே பெறாத அவனுக்கு அவளே வழிகாட்டினாள், அவளை அனுதினமும் தொழுத ராஜராஜன் வெற்றிமேல் வெற்றிபெற்றான். தஞ்சை பெரியகோவிலுக்கு அவன் இடம் தேடியபொழுது அவளே வராக உருவில் இடம் காட்டினாள், அவளுக்கு இன்றும் அக்கோவிலில் சன்னதி உண்டு. பாரதகன்டம் ஆப்கானிய இஸ்லாமியரிடம் சிக்கி தென்னகம் ஆலயங்களின் அழிவில் இருந்த நேரம் அவளே விஜயநகர அரசை எழுப்பினாள், அவர்களின் கொடியாக அமர்ந்தாள். வராஹ கொடியே தென்னகத்தில் சுல்தான் ஆட்சியினை ஒழித்து நமது ஆட்சியினை நிறுத்தி பறந்தது
அப்படிபட்ட வராஹியின் சிறப்புக்கள் ஒன்றல்ல இரண்டல்ல, ஏராளம்.
வராஹிதான் இழந்ததை மீட்டெடுத்து தருவாள், வராஹிதான் ரகசியங்களை சொல்வாள், வராஹிதான் எது செய்யவேண்டும் எதை செய்ய கூடாது, செய்யவேண்டிய காரியத்தை எப்படி செய்யவேண்டும் எனும் முழு ஞானத்தையும் கொடுப்பாள். அதைத்தான் நமது அரசர்களுக்கு அன்று கொடுத்தாள், நாயக்கர்களோ ராஜராஜசோழனோ இதர பலமான அரசர்களோ அதனாலே அவளை கொண்டாடினார்கள்.
இந்த அன்னைதான் எதை செய்ய வேண்டும், எதை செய்யகூடாது, எதை விலக்கவேண்டும், எது பகை, எது நட்பு என எல்லா தெளிவை கொடுப்பாள். மறைந்திருக்கும் ஆபத்துக்களை எல்லாம் அம்பலபடுத்துவாள், அவள்தான் வஞ்சகம் சூது சூழ்ச்சி வெட்டப்பட்ட புதைகுழிகள் என எல்லாமும் காட்டிதருவாள்.
குலபெண்கள் வராஹியினை வழிபட சொன்ன தத்துவம் அதுதான், குடும்பத்திற்கு பலவகையான மறைமுக பிரச்சினைகள் சொந்தபந்தம், அக்கம் பக்கம் என பல வழிகளில் இருந்து வரலாம். அதை முன்னமே அறிந்து அதை அகற்றும் பெரும் அறிவினை அன்னை தருவாள், எல்லா ஆபத்துக்களையும் கடக்கும் அறிவும் தைரியமும் முன் எச்சரிக்கையும் தருவாள். குடும்பம் எதிரிகள் தொல்லையின்றி, வஞ்சகர்கள் தொல்லையின்றி இருக்க, முழு காவலோடு இருக்க அவள் வழிபாடு அவசியம்.
இந்த வராஹிதான் உடலின் தசைக்கு அதிபதி. தசைதான் ஒருவனின் வலிமையினை காட்டும் விஷயம், அழகும் பொலிவும் அதுதான் கொடுக்கின்றது. இதனாலே அன்னையினை தாங்கும் பிருஷ்டம் என அவளை சூசகமாக சொல்கின்றது. புராணம் தசைகள் உடலுக்கு மகா பிராதானம், மானுட உடல் எலும்பு தசை, வரியற்ற தசை, இதயதசை என பல வகை தசைகள் உண்டு. இந்த தசைகள்தான் உடலின் இயக்கத்துக்கு பலம் கொடுக்கின்றன வழி செய்கின்றன, உடலை காக்கின்றன, உடலின் 72 ஆயிரம் நாடி நரம்புகள் இதன் வழியாகவே செயல்படுகின்றன‌. தசைகள்தான் நோய் காக்கும் அம்சம், உடலை எத்தனையோ வழிகளில் இருந்து காக்கும் அம்சம்
அபத்து என்றால் முதலில் தாங்குவது தசைகள்தான், காயமோ எதுவோ நோயோ எது என்றாலும் தசைகள்தான் தாங்கி உடலை மிட்டெடுக்கும். தசைகள் உறுதியாக இருக்கும் உடல் நோயில் வீழ்வதில்லை, தசைகளின் வலிமையே உடலின் வலிமை, தசைகளின தோற்றமே உடலின் பொலிவு. அப்படி நாடி நரம்புகள், முக்கியமான சுரப்பிகள் உடலெல்லாம் காவல் என சூழ்நின்று காப்பவை தசைகள்
இந்த தசைகளின் மூல தெய்வம் அன்னை வராஹி. தசைகள்தான் ஒரு உடலின் பாகங்களை மறைத்து அழகு செய்து உரியன செய்து காவல் செய்யும், பலம் கொடுக்கும் அதுதான் அன்னையின் தன்மை. இதனாலே அவளை தசைகளுக்கு காவல் என்றார்கள் மூலம் என்றார்கள்.
இது மானுட உடலுக்கு மட்டுமல்ல பிரபஞ்சத்தின் எல்லா படைப்புக்கும் எல்லா இயக்கங்களுக்கும் கோள்களுக்கும் பூலோக படைப்புக்களுக்கும் மரத்துக்கும் செடிக்கும், மலைக்கும், கடலுக்கும் கூட இப்படி ஒரு கவசம் உண்டு. அந்த கவசம், அந்த பாதுகாப்பே அன்னை வராஹத்தின் சதைதான் அதன் சக்தி, மிக இறுகிய அந்த தசைகள்தான் அதனை இயக்குகின்றன, அதனால் அன்னையினை அந்த காவல் சக்திக்கு அடையாளமாக சொன்னார்கள். நரம்புகளும் தசைகளும் ஒன்றடோன்று பொருந்தியவை, இந்த நரம்புகள்தான் தகவல்களை கொண்டு செல்லும் உணர்வுகளை கடத்தும், தகவல் தொடர்பு முதல் எல்லாம் கொடுக்கும். படைக்கும் அது அவசியம், குடும்ப வாழ்வுக்கும் மானுட வாழ்வுக்கும் இந்த தொடர்புகள் மிக அவசியம் அதனாலே அன்னையினை அங்கே வராஹி தத்துவமாக நிறுத்தினார்கள்.
உடலின் சக்கரங்களுக்கு இவள் ஐந்தாம் சக்கரமான விசுத்தி சக்கரத்தின் அதிபதி. அனாதகத்துக்கு மேல் கழுத்து பக்கம் அமைந்திருக்கும் ஐந்தாம் சக்கரம் விசுத்தி. இதுபற்றி சித்தர்களும் ஞானியர்களும் நிரம்ப சொல்லியிருக்கின்றார்கள். மிக பொருத்தமாக வராஹத்தின் கழுத்து எப்படி பலமானதோ, அந்த பலமிக்க கழுத்தால் அது எப்படி பூமியினை அகழ்கின்றதோ, எப்படி சண்டையிடுகின்றதோ அதை சொல்லி விசுத்தி எனும் மானுட கழுத்தின் சக்தி அன்னை வராஹி என பொருந்த‌ சொன்னார்கள். வராஹத்தின் பலம் அதன் கழுத்து, அப்படியே மானுட உடலின் முக்கியமான விசுத்தி சக்கரத்தின் தேவதை அன்னை வராஹி. அநாகத தளத்தில் இருந்து மேலே 12 விரல்கடை உயரத்தில் இந்த சக்கரம் அமைந்துள்ளது, கழுத்தின் அடிபாகத்தில் அமைந்துள்ளது. கழுத்தில் அமைந்துள்ள இந்த சக்கரத்தின் தாத்பரியம் முக்கியமானது.
இதுதான் தலைக்கும் உடலுக்குமான இணைப்பினை கொடுக்கும், அதாவது தலை என்பது கட்டுப்பாடு கொண்ட இடம், மூளை உள்ளிட்ட கட்டளைகள் உருவாகும் இடம், முழு கட்டுப்பாடு இருக்கும் இடம் அதுதான்
தலைக்கு ஒன்று என்றால் உடல் இயங்காமல் போவதும் அப்படித்தான், உடல் என்பது செயல்படும் எந்திரம், எல்லா இயக்கமும் இங்கிருந்துதான் நடக்கும். ஆக இயக்கும் இடத்தையும் இயங்கும் சக்தியும் ஒன்றாக சேரும் இடம் கழுத்து, இதுதான் இயக்கு சக்தியினை இயங்கு சக்தியாக மாற்ற எல்லா வேலைகளையும் செய்து இணைக்கின்றது. இந்த இணைப்பை கொடுப்பதுதான் விசுத்தி. இந்த விசுத்தி இருக்குமிடத்தில்தான் குரல்வளை, மூச்சுக் குழாய், தையராய்டு சுரப்பிகள் என பல முக்கிய பாகங்கள் வரும்.
இந்த சக்கரம் சரியாக துலங்கினால் கழுத்து சார்பான உடலியல் நோய் வராது, குரல் சிக்கல் தைராய்டு பிரச்சினை, மூச்சுக் குழாய் சிக்கல், உணவு குழாய் என இன்னும் பல நுணுக்கமான சிக்கலெல்லாம் வராது எல்லா இயக்கமும் சரியாக நடக்கும்.
கலைஞர்கள், பாடகர்கள் இன்னும் ஆன்மீக சொற்பொழிவாளர்கள், இசை அமைப்பாளர்கள் என பெரும் பெரும் கலைஞர்களுக்கெல்லாம் இச்சக்கரம் சரியாக துலங்கியிருக்கும். உண்மையில் ஏழு ஸ்வரங்களும் ஏழு சக்கரங்களை துலக்கும் உத்திகள்.
அவ்வகையில் ஐந்தாம் ஸ்வரம் தாண்டி யாரும் அதிகம் பாடுவதில்லை, ஐந்தாம் ஸ்வரத்துகான பலன் இச்சக்கரம் துலங்குவது, மேற்கொண்டு பாடிக்கொண்டே இருந்தால் அவர்களுக்கு ஏழு சக்கரமும் துலங்கும்.
நாயன்மார் பாடினார்கள், ஆழ்வார்கள் பாடினார்கள், சங்கீத மும்மூர்த்திகள் பாடினார்கள், எல்லோரும் பாடி இறைவனை அடைந்தார்கள் என்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏழு ஸ்வரங்களை பாட பாட ஏழு சக்கரமும் சரியாகும் அந்நிலையில் இறைநிலை எளிதில் வாய்க்கும்.
இசை இறைவனையே வசப்படுத்தும் என்பது இந்த சூட்சுமமே, இந்த சக்கரம் சரியில்லை என்றால் கூச்சம், படைப்புத் திறன் முடங்கியிருத்தல், பிறருடன் பேச, பழக அச்சப்படுதல் அல்லது அளவுக்கு அதிகமாகப் பேசுதல், கேலிக்கு ஆளாவோம் என்ற பயத்தில் மனதில் இருப்பதைப் பேசாதிருத்தல், உபயோகமற்ற பேச்சு பேசுதல், பிறர் பேசுவதை சரியாக கவனிக்காதிருத்தல்
பொது மேடைகளில் பேசத் தயங்குதல், சமூக தொடர்புகளைத் தவிர்த்தல், நினைப்பதை வெளிப்படுத்த இயலாமை, பொய் பேசுதல், பதட்டம், பிடிவாதம், பாதுகாப்பற்று இருப்பதாக உணர்தல், கவனக் குறைபாடு ஆகிய குறைகள் வரும் இது ஒரு மனிதனை முழுக்க முடக்கும்.
ஒரு மனிதன் எவ்வளவு பெரும் திறமையானவனாக அறிவாளியாக பெரும் ஞானம் கொண்டவனாக இருந்தாலும் சரியாக அதை வெளிபடுத்தாவிட்டால் பலனில்லை, அந்த வெளிப்படுத்தும் கலை, அது பேச்சு, பாடல், எழுத்து, ஓவியம் என எவ்வகையிலாவது ஒருவன் தன்னை வெளிப்படுத்தும் அந்த நல்ல தன்மையினை இந்த சக்கரம் தரும்.
விசுத்தி என்றால் சுத்தமான என பொருள், யாரால் தன்னை அச்சமின்றி கொஞ்சமும் தயக்கமுமின்றி வெளிப்படுத்தமுடியும் என்றால் தன்னிடம் உண்மையும் சத்தியமும் இருப்பவன் அதனை வெளிபடுத்துவான். யார் தன்னை வெளிபடுத்த முடியும் என்றால் மனம் முழுக்க நல்ல விஷயம் கொண்டவன், யாரும் குற்றம் சொல்லமுடியாதவன் தன்னை வெளிபடுத்துவான். அந்த நல்லமுறையில் ஒருவன் தன்னை உலகுக்கு காட்டி பல நல்ல விஷயங்களை சொல்ல இந்த சக்கரம் துலங்குதல் அவசியம். இந்த சக்கரம்தான் ஒருவனுக்கும் உலகுக்கும் தொடர்பை கொடுக்கும், உலகுக்கு அவனால் பல நல்ல விஷயங்களை கொடுக்கும்
அது பேச்சு, எழுத்து, போதனை, பாடல் என ஏதோ ஒருவழியில் அவனை இயங்க வைக்கும். இந்த சக்கரத்தால்தான் நமக்கு வேதங்கள், உபநிதங்கள், புராணம், கீதை, அழியா நூல்கள், பாடல்கள், இசைகோர்வைகள் என எல்லாமும் கிடைத்தன‌. இந்த சக்கரமே ஒருவனுக்கு அடையாளமும் அங்கீகாரமும் கொடுக்கும், அழியா புகழ்பெற்றவர்கள் பெரும் அடையாளம் பெற்றவர்களெல்லாம் இச்சக்கரம் துலங்கியவர்களே, யாரின் குரலுக்கு ஒரு மதிப்பு உன்டோ, யார் குரலுக்கு உலகம் செவிமடுக்குமோ, எந்த குரல் சமூகத்தை உலுக்குமோ, யார் குரலுக்கு சமூகம் மகுடிக்குட்பட்ட பாம்பாக மயங்கி கிடக்குமோ அவர்களெல்லாம் இச்சக்கரம் தூண்டபெற்றவர்கள். அச்சக்கரமில்லாமல் தலையும் உடலும் இணையாது என்பது போல பிரபஞ்சத்தினை ஆளும் ஈர்க்கும் ஒரு சக்தி ஒருவனுக்கு கிடைக்கும் அது அவன் திறனை ஆற்றலை பிறர் வசீகரிக்கும் அளவில் வெளிப்படுத்தும்.
வியாபாரம் மட்டுமல்ல ஒவ்வொருவனின் வார்த்தையிலும் உணர்வுகளை வெளிப்படுத்தும். விஷயத்திலும் அழகுணர்ச்சி வசீகர தன்மை உண்மை அழகு என எல்லாமே அவசியம். ஒரு ஈர்ப்பினை அது கொடுத்தல் வேண்டும். எல்லோரும் பேசுவார்கள், எழுதுவார்கள், பாடுவார்கள். ஆனால் எல்லோரும் உச்சம் தொடமுடியுமா பெரும் மக்களை ஈர்க்கமுடியுமா என்றால் முடியாது.
அதற்கு ஒரு பிரபஞ்ச சக்தி அவனில் இயங்கவேண்டும். அதுதான் அவனை இந்த உலகில் தனித்து காட்டும் சக்திவாய்ந்தவனாக காட்டும், பெரும் பெரும் ஆற்றலை அழியா இடத்தை அவனுக்கு கொடுக்கும். வியாசர் முதல் தேவாரம் பாடியவர்கள் வரை, சங்கீத மும்மூர்த்திகள் வரை, காஞ்சி மகாபெரியவர் வரை இப்படித்தான் பெரும் இடம் பெற்றார்கள். அந்த பலத்தை அந்த வரத்தை அச்சக்கரம் தரும், அந்த சக்கரம் துலங்கும் வரத்தை இந்த ஆலயம் தரும். இங்கு வந்து வணங்குவோர்க்கு அந்த விசுத்தி சக்கரம் துலங்கும், அப்போது இருந்து அவர்கள் சொல்லுக்கு ஒரு தனி செல்வாக்கு கிடைக்கும். இந்த வரத்தை தருபவள் அன்னை வராஹி.
இந்த வரத்தை முழுமையாக பெற்றவர்கள் யாராயினும் அரசியலில் வெல்வார்கள். அது மன்னராட்சி என்றாலும் ஜனநாயக ஆட்சி என்றாலும் இந்த சக்கரம் துலங்கியிருத்தல் அவசியம். அதை அருள்பவள் அன்னை வராஹி. மன்னராட்சியில் எல்லா மன்னரும் நிலைத்ததில்லை, யாருக்கு எதிரியின் பலம் தன் பலம் தெரிந்ததோ, யாருக்கு ரகசியங்கள் பிடிபட்டதோ, தன் வசீகரத்தாலும் வீரத்தாலும் தந்திரத்தாலும் வார்த்தை செல்வாக்காலும் யாரால் எல்லோரையும் வசபடுத்த முடியுமோ அவனே பெரும் மன்னன் என்றானான்.
அப்படிஉருவானவன் ராஜராஜ சோழன், அதனாலே அவன் வராஹியினை தன் பெரியகோவிலில் வைத்து வணங்கினான், அவளின் அருள் அவனுக்கு இருந்தது. ஜனநாயக ஆட்சியில் கவனியுங்கள், யார் நல்ல பேச்சும் சொல்வாக்கும் செல்வாக்கும் கொண்டவர்களோ, யார் தெளிந்த தோற்றம் நடை உடை பாவனையால், பேசும் கலையால் மக்களை நெருங்கினார்களோ அவர்கள்தான் உச்சம் தொட்டிருப்பார்கள். அவர்களுக்கு விசுத்தி சக்கரம் துலங்கியிருக்கும், ஒரு வசீகரம் இருக்கும், அந்த அருளைத்தான் வராஹியின் அருள் என்றார்கள்.
நாட்டுக்கு நலம் தரும் வராஹி, வீட்டுக்கும் அதே வரம் தருகின்றாள். குலபெண்கள் அவளை வணங்கும் போது வீட்டை ஆளும், வீட்டை பாதுகாக்கும் எல்லா வரத்தையும் சக்தியினையும் பலத்தையும் அவளிடம் இருந்து பெறுவார்கள். அதனாலே சப்த கன்னியரில் இவளை வழிபட சொன்னார்கள்.
ஆஷாட நவராத்திரி எனும் ஆடிமாத நவராத்திரி இவளுக்காகவே உருவாக்கபட்டது, கிராமங்களில் பைரவி என வழிபடும் தெய்வம் இவள்தான். அன்னைக்கு காசியில் ஆலயம் உண்டு, காசியில் அவள் பிரதான போர் தெய்வம், கால பைரவரை போல அவளுக்கு பிரசித்தியான ஆலயம் உண்டு, தனி தெய்வமாக அங்கே அவள் உண்டு.
காஞ்சிபுரம் காமாட்சி அன்னையின் இடது புறத்தில் வராஹி தேவி அருள்பாலிக்கிறாள். பள்ளூர் வராஹி தனி சக்தி மிக்கவள். தமிழகத்தின் மிக பழமையான ஏன் உலகிலே மிக பழமையான ஆலயங்களில் ஒன்று உத்திரகோசமங்கை.
அந்த கோவிலின் அருகே மங்கள மகா காளி என்ற பெயரில் மிகப்புராதனமான சுயம்பு மகா வராஹி அம்மன் கோயில் உள்ளது. இது மிக புராதனமனது, இந்த வராஹியின் தீர்த்தமே அங்கு அபிஷேகத்துக்கு பயன்படும்
இது வராஹி வழிபாட்டின் பழமையினை சொல்வது.
இன்னும் வேலூர் அருகில் உள்ள கீழ்மின்னல் வராஹி அம்மன் திருக்கோயில், இன்னும் சதுரங்க பட்டினத்திலிருக்கும் வராஹி அம்மன் என எத்தனையோ உண்டு. மன்னர்கள் வழிபட்ட தெய்வம் வராஹி என்பதால் சிவகங்கை பக்கம் அவளுக்கு பெரும் ஆலயம் உண்டு, சிங்கம்புணரி முத்துவடுகநாத சித்தர் வராஹி பக்தர், அவரின் சமாதியில் அவள் சிலையும் வழிபாடும் உண்டு. சித்தர் முத்துவடுக நாதர் இன்றளவும் அன்னை வராஹி அருளால் தன் பக்தர்களை அரவணைத்து காத்து நிற்கிறார்.இவரை ''வராஹி சித்தர்'' என்றே அன்பர்கள் அழைக்கிறார்கள். வராஹி சித்தர் சமாதி என அழைக்கபடும் அந்த சமாதியில் எல்லா வினைகளும் தீர்கின்றன, எல்லா வரமும் கிடைத்து எதிரிகளின் பில்லி சூனியம் முதல் எல்லா ஆபத்துக்களும் அகற்றபடுகின்றன‌ தேடிவரும் பக்தர்கள் ஏராளம்.
நாகர்கோவில் அருகே அகஸ்தீஸ்வரம் முத்தாரம்மன் திருத்தலத்தில் முத்தாரம்மனுடன் வீற்றிருக்கும் வராஹி அன்னை சிறப்பானவள். செங்கல்பட்டு அருகில் உள்ள ஆத்தூர், சிவபுரம் (வாலாஜாபாத்) அண்ணாமலை கோவில் வராஹி என பல தலங்கள் உண்டு. கடலூர், மயிலாடுதுறை என பண்ருட்டி என பல இடங்களில் அவளுக்கு ஆலய சன்னதி உண்டு, திருவதிகை ஆலயத்திலும் அவள் வீற்றிருப்பாள். மதுரை பக்கம் பல ஆலயங்களில் அவள் உண்டு, சோழிங்க நல்லூர் பிரத்யங்கரா திருக்கோயிலிலும் வராஹி அம்மன் சிறப்பாக எழுந்தருளி அருள்கிறாள்.
மதுரை உள்ளிட்ட பல ஆலயங்களில் அம்மன் வராஹி வடிவம் கொண்டு பவனிவருவது இயல்பு, அந்த வழமை
இன்னும் ஏகபட்ட இடங்களில் அவள் உண்டு. அரசர்கள் வாழ்வு, பெரிய செல்வாக்கான குடும்பத்தின் ரகசிய வழிபாட்டுகளில், பரம ரகசிய வழிபாடுகளில் முக்கியமானதும் முதன்மையானதுமாக இருப்பது வராகி உபாசனை.
இதனாலே அவளுக்கு தனி சன்னதி உண்டு. பைரவரின் சக்தியாக இருப்பவளும் வராஹியே, வாராகி வழிபாடு செய்பவர்களுக்கு எதிராக எந்த பில்லி சூன்யமோ வஞ்சனையோ வெல்லாது. அதானாலேதான் "வாராஹி காரனிடம் வாதாடாதே'' என்பார்கள். வாக் சக்தி அருளும் அதிதேவதை வராஹி அம்மன்.
இதனால்தான் சொற்பொழிவாளர்கள், பேச்சாளர்கள், வாதிடுவோர், வழக்கறிஞர்கள் வழிபட வேண்டிய தெய்வம் வராகி அம்மன் என்பது போதனை. அரசர்களும் ஆள்வோரும் தலைவர்களும் வழிபடவேண்டிய தெய்வம் அவளே, யாரெல்லாம் தலைமை பதவியில் குடும்பத்தி, நிறுவனங்களில் இன்னும் ராணுவத்தில் என எல்லா இடத்திலும் இருப்பார்களோ அவர்கள் அவளை வழிபடுதல் நன்று.
மாதுளை முத்துக்களை தேனில் சிறிது ஊறவைத்து அதனை வராஹி அம்மனுக்கு நெய்வேத்தியம் செய்து வழிபடுவார்கள். சர்க்கரை வள்ளி கிழங்கு வைத்து அவளை வழிபடுவோரும் உண்டு.
நெய் தீபம் அல்லது நல்எண்ணெய் தீபம் ஏற்றி, வராஹி அம்மனுக்கு செம்பருத்தி, சிகப்பு அரளி, மரிக்கொழுந்து சாற்றி வழிபாடு செய்து, கூடவே ''அபிராமி அந்தாதி'' ,''லலிதா நவரத்தின மாலை'' மற்றும் ''வராஹி மாலை''பாராயணம் செய்து, இப்படி தொடர்ந்து 8 பஞ்சமி நாட்களில் வழிபாடு செய்து வர வேண்டும் வரம் கிட்டும் என்பது சத்தியம்m
பகை, வறுமை, பிணி, பில்லி, சூன்யம், மாந்திரீகம், பகைவர்கள், தீயோர் என எல்லா பிரச்சினைகளையும் அவள் முடித்து தருவாள். எவ்வளவோ ஆலயங்களும் சன்னதியும் அன்னைக்கு உண்டு என்றாலும் காசியில் இருக்கும் வராஹி போல தஞ்சை பெரியகோவிலில் ராஜராஜன் வணங்கிய வராஹி தனி சிறப்பானவள். அப்படியே சப்த கன்னியர் தலங்களில் பசுமங்கை எனும் ஆலயம் அவளுக்கானது, அதை கோச்செங்கெண்ண சோழன் எனும் நாயனார் கட்டி ஸ்தாபித்தார். அதிலிருந்துதான் சோழர்களின் பெரும் தெய்வமாக அவள் எழுந்து ராஜராஜசோழனுக்கு பெரும் காவலாய் இருந்தாள், அவனை அழியா வீர காவியமாக்கினாள்.
ஆம், வராஹிவழிபாடு அவ்வளவு முக்கியமானது. இந்த சப்தமங்கையின் பசுமங்கை, ராஜராஜசோழனின் வராஹி, காசி வராஹி போன்ற தலங்களில் வழிபட்டால் தசைகள் சம்பந்தமான நோய்கள் தீரும். தலைமை பண்புக்கான குணமும் வீரமும் தைரியமும் வரும், விசுத்தி சக்கரம் துலங்கி அவர்களுக்கான செல்வாக்கு கூடும். குலபெண்கள் கண்டிப்பாக வணங்கவேண்டிய தெய்வம் அவள், ஆப்படியே ஒவ்வொருவரும் வணங்கி ந்லம்பெற வேண்டிய அன்னை அவள்.
அவளின் காயத்ரி மந்திரம் இதோ;
"ஓம் ச்யாமளாயை வித்மஹே
ஹல ஹஸ்தாயை தீமஹி
தன்னோ வாராஹி ப்ரசோதயாத்"
அவளின் தியான மந்திரம்...
அன்னையினை வணங்கினால் எல்லா பகைவரும் ஒழிவர், அவள் ரகசியங்களை புலபடுத்துவாள், எதிரிகளின் வேர்வரை அழிப்பாள், மறைந்திருக்கும் ஆபத்தையெல்லாம் அகற்றி வாழவைப்பாள். முழு உடல்நலமும் உள்ள நலமும், தடைகளற்ற எதிரிகளற்ற வாழ்வும் வளமும் காவலும் அவள் தருவாள், தனி செல்வாக்கும் சொல்வாக்கும் கொண்ட பெரும் ஞானத்தை வீர ஞானத்தை அவள் வழங்குவாள் அது நித்ய சத்தியம்.
"எது எல்லாம் இழக்கபட்டதோ; எதெல்லாம் மறைக்கபட்டதோ; அதையெல்லாம் மீட்டு தந்து காவல் இருந்து வாழவைப்பவள் அவள் அது சர்வ சத்தியம்"
"வஜ்ர கோசம்"
"வஜ்ர கோசம்"
"வஜ்ர கோசம்"

No comments:

Post a Comment

#வேங்கைபால்மை

 * #வேங்கைபால்மை* வேங்கை மரம் நவ கிரகங்களில் செவ்வாய் கிரகத்தின் சக்தியை பூரணமாக உடையது.. இம்மரத்தை வெட்டினால் சிவப்பு நிறத்தில் பால் வடியு...