Monday 23 September 2019

கே.பி சுந்தராம்பாள் தமிழகம் மறக்க முடியாத பெயர்.

  கொடுமுடி பாலம்மாள் சுந்தராம்பாள் என்பவர் அவர், மிக சிறிய வயதிலே நாடகதுறைக்கு வந்தவர். அந்த வயதிலே பெரும் பணமும், புகழும் குவித்தவர்
20 வயதிற்குள் ஏராளமான நாடுகளில் நாடகம் நடத்தி அவர் பெறாத புகழ் இல்லை, குவிக்காத செல்வமில்லை.
இசை இலக்கணம் தெரிந்தவர்தான் அதை ரசிக்க முடியும் என்பதை மாற்றி, இலக்கணம் தெரியாதவர் களையும் இசையைச் சுவைக்க வழிசெய்தவர் முதலில் கே.பி.எஸ
எடுத்த எடுப்பிலே உச்சஸ்தானியில் 4 கட்டை தாண்டி பாடும் அபூர்வ திறமை அவரிடம் இயல்பாய் இருந்தது.
பின் கிட்டப்பாவுடன் திருமணம் என்றாலும் குழந்தையும் நிலைக்கவில்லை, கணவனும் நினைக்கவில்லை. 25 வயதில் விதவையானார் சுந்தராம்பாள்.
உண்மையில் அவர் அழகு, ஜொலிக்கும் அழகு. அந்த சுந்தராம்பாள் சாயல்தான் கிட்டதட்ட காவிய தலைவன் படத்தில் "வடிவு" பாத்திரத்தையொட்டி அமைக்கபட்டிருந்தது.
ஆனால் கணவனை இழந்தபின் தன்னை அவர் அலங்கரிக்கவில்லை, வெள்ளை உடையினை அணிந்தார் ஆன்மீகவாதியாக மாறினார். இனி எந்த ஆண்மகனுடனும் நடிக்கமாட்டேன், இப்படித்தான் நடிப்பேன் என சில கொள்கைகளையும் வகுத்தார்
இத்தனைக்கும் பல காரணத்தால் பிரிந்துவாழும் பொழுதுதான் கிட்டப்பா இறந்தார், ஆனால் கிட்டப்பா மீது சுந்தராம்பாள் கொண்ட பாசம் அப்படி உறுதியாயிருந்தது.
கடைசிவரை அதில் நின்றும் காட்டினார்.
கிட்டப்பாவின் திடீர் மரணமே நாம் கண்ட சன்னியாசி கோல சுந்தராம்பாளை நமக்கு நிறுத்திற்று, அந்த கொடும் மரணம் நடக்காமல் இருந்திருந்தால் முதல் அழகான கதாநாயகியாக வரலாறு சுந்தரம்பாளைத்தான் பதிவு செய்திருக்கும்.
25 வயதில் இனி சினிமாவேண்டாம் என உதறினாலும், சினிமாக்காரர்கள் விடுவதாக இல்லை. அக்கால கட்டம் பக்தி படங்களும், குரல்வளம் மிக்கவர்கள் தேவைபடும் காலமாயிருந்தது.
நந்தனார் நாடகத்தில் நடித்த சுந்தரம்பாளை, 1 லட்சம் சம்பளம் என தன் படத்தில் நடிக்க வைத்தார் வடநாட்டு அசன் தாஸ், அன்று படத்தின் மொத்த பட்ஜெட் 3 லட்சம்.
அன்று 1 சவரன் தங்கம் 13 ரூபாய்.
அப்படியானால் சுந்தரம்பாளின் மார்கெட்டை நீங்களே ஊகித்துகொள்ளுங்கள், இவ்வளவிற்கும் சாமியார் வேடம்.
பின் அவ்வையார் படத்தில் அவரை அப்படியே ஓளவையாராக நம் கண்முன் நிறுத்தினார் வாசன்.
பெரும் வரவேற்பு அவருக்கு இருந்தது, மக்களால் பெரும் உற்சாகத்தோடு கொண்டாடபட்டார், அவரின் கச்சேரிகள் 7 மணிநேரம் தொடர்ந்து நடந்தாலும் கூட்டம் அப்படியே அவரின் குரலால் கட்டபட்டு இருந்தது.
அவருக்கு நாட்டுபற்றும் இருந்தது, பல காரியங்களை செய்தார். இதனால் மகாத்மா காந்தியே நேரில் வந்து வாழ்த்தி அவர் சேவை தொடரவேண்டும் என்று கேட்டுகொண்டார்
தமிழகத்தில் மகாத்மா அப்படி கேட்டுகொண்ட ஒரே கலையுலக நபர் சுந்தரம்பாளே.
தன் கொள்கைக்கு பிணக்கு வராதபடி, அவ்வை காவுந்தியடிகள், மணிமேகலை, காரைக்காலமையார் என பல காவியங்களை நம் கண்முன்னால் நின்ற அந்த சுந்தராம்பாளை மறக்க முடியாது.
"பழம் நீயப்பா" போன்ற முருகன் பாடல்களாகட்டும், "விநாயகனே " போன்ற விநாயகர் பாடல்களாகட்டும், "மகாகவி காளிதாஸ்" படத்து காளி தேவியின் பாடலாகட்டும், ஏன் கலைஞரின் பூம்புகாரில் "வாழ்க்கை எனும் ஓடம்." பாடலாகட்டும்
அந்த கணீர் குரல் சுந்தாராம்பாளை மறக்க முடியாது.
அவ்வையார் இப்படித்தான் இருந்திருப்பார் என நம் கண்முன்னே தத்ரூபமாக நிறுத்தியவர் அவர். அவரின் சேவைக்காக தமிழக அரசின் மேலவையிலும் கவுரவிக்கபட்டார்.
அவர் சுதந்திர போரட்ட நாடகங்களை நடத்தியதாலும், கதர் ஆடை காந்தி வழி என கலந்து பெரும் தொண்டு ஆற்றியதாலும் காமராஜர் அவரை மேலவை உறுப்பினராக்கியிருந்தார்.
அவ்வையாரை மட்டுமா காட்டினார்? சிலப்பதிகார காவுந்தியடிகள் உஜ்ஜைனி மகா காளியின் சாந்த வடிவம் என அவர் எத்தனையோ தெய்வீக வடிவங்களை காட்டினார்
முருகபெருமானின் பாடல்களை பாடியதில் சவுந்திர ராஜன் , சீர்காழி கோவிந்தராஜன் ஆகியோரின் குரலில் ஆண்மை இருந்தது என்றால் , சுந்தராம்பாளில் குரலில் அந்த பராசக்தியே குடியிருந்தாள்
பக்தி வடிவில் அவரை மிஞ்சமுடியாது ,விபூதியும் பட்டையுமாக கடைசிவரை அந்த பக்தி வந்தது
பூம்புகார் படத்தில் , தன் சொந்தபடத்தில் "நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது?" என கடவுள் இல்லை என கலைஞர் எழுதிய பாடலை பாட மறுத்தார் சுந்தராம்பாள்
கலைஞருக்கு காசு விவகாரமென்றால் பகுத்தறிவு வேலை செய்யாது அல்லவா? உடனே சிரித்து கொண்டு "நின்று கொல்லும் தெய்வம் எங்கே சென்று விட்டது" அது சாட்சாத் நீங்கள்தான் என சுந்தரம்பாளிடம் தோற்று ஒதுங்கி கொண்டார்
அப்படிபட்டவர் சுந்தராம்பாள்
தமிழிசை, நாடகம், அரசியல், திரைப்படம், ஆன்மிகம் என எல்லா பக்கமும் ஜொலித்த கலைத்தாயின் மூத்த மகளுக்கு ஆழந்த அஞ்சலிகள்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...