Friday 27 September 2019

நற்பண்பு இல்லாத பக்திக்கு பயனில்லை!

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

இனி வாழ வேண்டாம் எனத் தீர்மானித்த அருணகிரிநாதர் திருவண்ணாமலை கோபுரத்திலிருந்து குதித்தார். முருகப் பெருமான் அவரை கைகளால் தாங்கிப் பிடித்து காப்பாற்றினார்.
'சொல்லற சும்மா இரு' என்று உபதேசித்தார். இது அருமையான உபதேசம். வாய் திறந்தால் தானே சொல் பிறக்கிறது. யோசிக்காமல் வார்த்தைகளை விடுவதால் வம்பு வளர்கிறது. ஆபரணங்களை வெளியே வைப்போமா? இல்லையே!
வாயிலிருந்து பிறக்கும் ஒவ்வொரு சொல்லும் நகை போலத் தான்! மதிப்பு மிக்கது. ஆனால் நாம் அதை உணரவில்லை. பேசும் சொல்லுக்கும் நாம் தான் எஜமானன்.
யோசிக்காமல் நாக்கை யாரும் பயன்படுத்தக் கூடாது என்றே வாய் என்கின்ற லாக்கருக்குள் வைத்திருக்கிறார் கடவுள். உதடுகளே பீரோவின் கதவுகள், பல்வரிசை லாக்கர் கதவு, நாக்கு தான் சொற்கள் இருக்கும் பெட்டி. கோபத்தில் பல்வரிசை திறக்க, உதடுகள் பிளக்க வார்த்தைகள் வெளியே வந்து விழுகின்றன. இது கூடாது என்றே தியானம் செய்யும் வழியை கடவுள் கொடுத்திருக்கிறார்.
சொல்லற்ற மவுன நிலையில் நம் சிந்தனையில் கடவுள் மட்டுமே இருப்பார். அதையே அருணகிரிநாதருக்கு ''சொல்லற சும்மா இரு'' என முருகன் உபதேசித்தார். சிறிது காலம் கழித்து அருணகிரிநாதரின் மவுனத்தைக் கலைத்து, நாவில் ஓம் என்னும் பிரணவ மந்திரத்தை வேல் நுனியால் எழுதினார் முருகப் பெருமான். இதன் பின்னரே
''முத்தைத் தரு பத்தித் திருநகை'' என்னும் முதல் திருப்புகழ் பிறந்தது.
முருகனின் திருத்தலங்களைத் தரிசித்து திருப்புகழ் பாடல்களைப் பாடினார். இவரை ஆதரித்த மன்னர் திருவண்ணாமலைப் பகுதியை ஆட்சி செய்த பிரபுடதேவ மகாராஜா.
அருணகிரிநாதர் போல பாட முடியவில்லையே என பொறாமைப்பட்டால் அது நியாயம். ஆனால் அவரது புகழையும், அவரை மன்னர் பிரபுடதேவர் ஆதரிக்கிறாரே என்றும் பொறாமை கொண்டான் காளி உபாசகன் சம்பந்தாண்டான். பொறாமை, கோபம், பேராசை, புறங்கூறல், பொய், வஞ்சகம் என தீயகுணங்கள் அவனிடம் மலிந்து கிடந்தன.
காளி மீது பக்தி ஒருபுறம். தீய எண்ணம் மறுபுறம். பிரபுடதேவ மன்னரிடம் சென்று அருணகிரிநாதரைப் பற்றி இல்லாததையும், பொல்லாததையும் கூறி அவரது மனதைக் கலைத்தான்.
''அருணகிரியிடம் முருகப்பெருமானை நேரில் வரவழைத்துக் காட்டச் சொல்லுங்கள் மன்னா'' எனத் துாண்டி விட்டான்.
திருவண்ணாமலை கோயிலின் முன்மண்டபத்தில் சபை கூடியது. சம்பந்தாண்டான் காளியைத் துதித்தான். அவள் வெளிப்பட்டாள். ''காளிமாதாவே! அருணகிரி திருப்புகழ் பாடும் போது முருகப்பெருமானை இங்கு வரவிடாமல் தடுக்க வேண்டும்'' என்றான்.
அவனுக்கு கட்டுப்பட்டு காளியும் தன் கைகளால் முருகப்பெருமானை வர விடாமல் பிடித்துக் கொண்டாள். அருணகிரிநாதர் அழைத்தும் அன்னையின் பிடியில் விடுபடமுடியாமல் கிடந்தான் முருகப்பெருமான்.
அருணகிரிநாதர் ஞானதிருஷ்டியால் நடந்ததை அறிந்து, ''கங்காளி, காமுண்டி, வாரஹி, இந்திராணி, கவுமாரி'' என்று காளிமாதாவைப் பாடத் தொடங்கினார். ஸ்தோத்திர பிரியை அல்லவா அவள்? மெல்ல கைகளைத் தளர்த்த மயில் மீதேறிப் புறப்பட்டார் முருகப்பெருமான்.
''அதல சேடனாராட'' என்று பாடத் தொடங்கி ''மயிலுமாடி நீயாடி வர வேண்டும்'' என்ற போது துாணைப் பிளந்து கொண்டு மயில் வாகனத்தில் முருகப்பெருமான் காட்சியளித்தார். கம்பத்து இளையனார் சன்னதி என்னும் பெயரில் திருவண்ணாமலை கோயிலில் நுழைந்ததுமே இவருக்கு சன்னதி இருக்கிறது.
முருகனை தடுக்காத காளிமாதா மீது கோபம் கொண்டான் சம்பந்தாண்டான்.
''சம்பந்தாண்டானே! நீ செய்த பூஜையை விட உன் பாவச் செயல்களே அதிகமாகி விட்டது. அதனால் என்னால் உதவ முடியாது'' என்று மறுத்து விட்டாள் காளி.
நற்பண்பு இல்லாத பக்தியால் பயன் கிடைக்காது என்பதை நாம் உணர வேண்டும்.
முருகா சரணம் சரணம்
அண்ணாமலையார் சரணம் சரணம் சரணம்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...