Saturday 20 May 2017

விநாயகர் அகவல்


                                           விநாயகர் அகவல்


சீதக் களபச் செந்தா மரைபூம்
பாதச் சிலம்பு பலஇசை பாடப் 
பொன் அரை ஞாணும் பூந்துகி லாடையும் 
வன்ன மருங்கில் வளர்ந்தழ கெறிப்பப் 
பேழை வயிறும் பெரும்பாரக் கோடும்
வேழ முகமும் விளங்குசிந் தூரமும் 
அஞ்சு கரமும் அங்குச பாசமும் 
நெஞ்சிற் குடிகொண்ட நீலமேனியும்
நான்ற வாயும் நாலிரு புயமும்
மூன்று கண்ணும் மும்மதச் சுவடும்


இரண்டு செவியும் இலங்கு பொன் முடியும் 
திரண்டமுப்புரி நூல் திகழொளி மார்பும் 
சொற்பதங் கடந்த துரியமெய் ஞான 
அற்புதன் ஈன்ற கற்பகக் களிறே
முப்பழம் நுகரும் மூஷிக வாகன 
இப்பொழு தென்னை யாட்கொள வேண்டித் 
தாயாய் எனக்குத் தானெழுந் தருளி 
மாயாப் பிறவி மயக்க மறுத்தே 
திருந்திய முதலைந் தெழுத்துந் தெளிவாய் 
பொருந்தவே வந்தேன் உளந்தனிற் புகுந்து 


குருவடி வாகிக் குவலயந் தன்னில் 
திருவடி வைத்துத் திறமிது பொருளென 
வாடா வகைதான் மகிழ்தெனக் கருளிக் 
கோடா யுதத்தாற் கொடுவினை களைந்தே
உவட்டா உபதேசம் புகட்டி என் செவியில் 
தெவிட்டாத ஞானத் தெளிவையுங் காட்டி 
ஐம்புலன் றன்னை அடக்கு முபாயம் 
இன்புறு கருணையின் இனிதெனக் கருளிக்
கருவிக ளொடுக்குங் கருத்தினை யறிவித்து 
இருவினை தன்னை அறுத் திருள் கடிந்து 


தலமொரு நான்குந் தந்தெனக்கருளி 
மலமொரு மூன்றின் மயக்கம் அறுத்தே 
ஒன்பது வாயில் ஒருமந்திரத்தால்
ஐம்புலக் கதவை அடைப்பதுங் காட்டி 
ஆறா தாரத் தங்கிசை நிலையும்
பேறா நிறுத்திப் பேச்சுரை யறுத்தே 
இடைபிங் கலையின் எழுத்தறி வித்துக் 
கடையிற் சுழுமுனை கபாலமுங் காட்டி 
மூன்று மண்டலத்தின் முட்டிய தூணின் 
நான்றெழ பாம்பின் நாவில் உணர்த்திக் 


குண்டலி யதனிற் கூடிய அசபை 
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து 
மூலா தாரத்தின் மூண்டெழு கனலைக் 
காலால் எழுப்புங் கருத்தறி வித்தே
அமுத நிலையும் ஆதித்தன் இயக்கமும் 
குமுத சகாயன் குணத்தையுங் கூறி 
இடைச்சக்கரத்தின் ஈரெட்டு நிலையும்
உடற்சக் சக்கரத்தின் உறுப்பையுங் காட்டிச் 
சண்முக தூலமும் சதுர்முகச் சூக்ஷமும் 
எண்முக மாக இனிதெனக் கருளிப் 


புரியட்ட காயம் புலப்பட எனக்குத் 
தெரியட்டு நிலையும் தரிசனப் படுத்தி
கருத்தினிற் கபால வாயில் காட்டி 
இருத்தி முத்தி இனிதெனக் கருளி
என்னை அறிவித் தெனக்கருள் செய்து 
முன்னை வினையின் முதலைக் களைந்தே 
வாக்கும் மனமும் இல்லா மனோலயம் 
தேக்கியே என்றான் சிந்தை தெளிவித்து 
இருள்வெளி யிரண்டிற் கொன்றிட மென்ன 
அருள் தரும் ஆனந்த மளித்து என்செவியில் 


எல்லை இல்லா ஆனந்தமளித்து 
அல்லல் களைந்தே அருள்வழி காட்டிச் 
சத்தத்தின் னுள்ளே சதாசிவம் காட்டிச் 
சித்தத்தின் னுள்ளே சிவலிங்கங் காட்டிச் 
அணுவிற் கணுவாய் அப்பாலுங் கப்பாலாய்க் 
கணுமுற்றி நின்ற கரும்புள்ளே காட்டி
வேடமும் நீறும் விளங்க நிறுத்திக் 
கூடுமெய்த் தொண்டர் குழாத்துடன் கூட்டி
அஞ்சக் கரத்தின் அரும்பொருள் தன்னை 
நெஞ்சக் கருத்தின் நிலையறிவித்துத் 
தத்துவ நிலையைத் தந்தெனை ஆண்ட 
வித்தக விநாயக விரைகழல் சரணே

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...