Friday 26 May 2017

இறைவனைத் தாங்கும் விஜயன்..!

                                                  இறைவனைத் தாங்கும் விஜயன்..!

ஸ்ரீமந் நாராயணன் அனைத்துயிர்களிலும் உறைபவனாகவும், அனைத்துயிர்களிடத்தும் அருளுடையவனாகவும் விளங்குகின்றான். அத்தகைய பெருமாளின் பெருமைக்குரிய வாகனமாகத் திகழ்பவன் கருடன்.

கருடாழ்வானுக்கு கொற்றப்புள், தெய்வப்புள், வேதஸ்வரூபன், காய்சினப்புள், ஓடும்புள், புள்ளரையன், பட்சிராசன், சுபர்ணன், விஜயன், பெரிய திருவடி, வைனதேயன், உவணன், வினதைச் சிறுவன் எனப் பலப்பெயர்கள் உண்டு.

கச்யபர்- விநதை தம்பதிக்கு ஆடி மாத சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தான் கருடன். இவனுடைய அண்ணன் அருணன் ஆவான். இரண்டாவதாகப் பிறந்த கருடாழ்வான் மகாபலமும், சர்ப்பங்களை விழுங்கும் சக்தியும், அழகான முகமும், குவிந்த இறகுகளையும், உறுதியான நகங்களையும், சிறந்த கூர்மையான கண்களையும், பருத்த கழுத்தையும், குட்டையான கால்களையும், பெரிய தலையையும் உடையவன். எல்லா திசைகளிலும் வேகமாகப் பறக்கும் ஆற்றலைப் பெற்றவன். கருடனுக்கு ருத்ரை, சுகீர்த்தி என இரு மனைவிகள் உண்டு.

மாற்றாந்தாயான கத்ருவிடம் அடிமைப்பட்டிருந்த தன் தாய் விநதையின் அடிமைத்தளையை, இந்திரலோகம் சென்று அமிர்தத்தைக் கொண்டுவந்து போக்கினான் கருடன்.

கருட வாகனமும் கருடக் கொடியும்

ஒருசமயம் கருடன் இந்திரனுடன் போரிட்ட போது, திருமால் உபேந்திரனாக இருந்து இந்திரனுக்காக கருடனுடன் போரிட்டார். திருமால் கருடனின் கர்வத்தை அடக்கி, தனக்கு வாகனமாகவும் கொடியாகவும் இருக்க வரமளித்தார்.

அன்றுமுதல் கருட வாகனமாகவும் கருடக் கொடியாகவும் விளங்கி வருகின்றான்.

கருட தரிசனப்பலன்

கருடன் வானத்தில் பறக்கும்போது தரிசனம் செய்வதும், கருடனின் குரலைக்கேட்பதும் நன்மையைத் தரும்; கீழ்க்கண்ட பலன்களும் கிடைக்கும்.

ஞாயிறு- பிணி (நோய்) நீங்கும்.

திங்கள், செவ்வாய்- அழகு சேர்ந்து துன்பம் நீங்கும்.

புதன், வியாழன்- பகைவர்கள் வைத்த சூன்யம் நீங்கும்.

வெள்ளி, சனி- ஆயுள் நீண்டு செல்வம் பெருகும்.

அனைத்து திருக்கோவில்களிலும் பிரம் மோற்சவத்தின்போது பெருமாள் கருடவாகனத்தில் எழுந்தருளும்போது, மேலே கருடன் பறப்பதைக் காணலாம்.

கருடதரிசனம் கிடைக்கும்போது கைகூப்பி வணங்காமல், மனதால் நினைத்து வணங்க வேண்டுமென்று கூறப்படுகிறது. கீழ்க்கண்ட மந்திரங்களைச் சொல்ல வேண்டும் என்பர்.

"கருடாய நமஸ்துப்யம் சர்வ சர்பேந்த்ர சத்ரவே
வாகனாய மகாவிஷ்ணு க்ஷாய அமித தேஜசே.'

கருட சேவை

பக்தர்களைக் காப்பதற்காக திருமால் கருட வாகனத்தில் எழுந்தருளுவார். கஜேந்திரனைக் காக்க கருட வாகனத்தில் அதிவேகமாக வந்த நிகழ்வுமூலம் இதை அறியலாம். இதனை, "ஆனையின் துயரம் தீரப் புள்ளூர்ந்து சென்று நின்றாழி தொட்டானை'என்கிறார் திருமங்கையாழ்வார்.

கருடசேவையின்போது, "காக்க நீ வருவாயே கருடனேறி' என்று பக்தர்கள் பாடுவர். "அசித்' எனப்படும் சப்பரத்தின்மேல் "சித்' எனப் படும் கருடன் வீற்றிருந்து, ஈஸ்வரனாகிய எம்பெருமாளைச் சுமந்துவந்து பக்தர்களுக்கு தரிசனமளித்து, சச்சிதானந்தத்தை வழங்குவதே கருடசேவையாகும்.

கருடசேவையைப் பெரிய திருவடி சேவை

என்றும் கூறுவர். காஞ்சி, திருமலை, திருநாங்கூர், திருவரங்கம், நாச்சியார் கோவில், நவதிருப்பதிகள், திருநாராயணபுரம் போன்ற தலங்களின் கருடசேவைகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

கருட வியூகம்

கருடன் பறக்கின்ற நிலையில் படைகளை நிறுத்திப் போரிட்டால் எதிரியின் படைகளைப் பாழ்படுத்தி வெற்றி பெறலாமென்று போர் முறை கூறுகின்றது. இதனை அறிந்த பாண்டவர்கள் ஒருநாள் கருட வியூகம் அமைத்துப் போரிட்டு கௌரவர்களை வென்றனர் என்று மகாபாரதம் கூறுகின்றது.

"குங்குமாங்கித வர்ணாய குந்தேந்து தவளாயச
விஷ்ணு வாகன நமஸ்துப்யம் பட்சி ராஜாயதே நம'

என்னும் கருடமந்திரம் விஷத்தைப் போக்கும் மந்திரங்களுள் தலை சிறந்ததாகும். இம்மந்திரத்தை ஓதி சௌனகர், பிருகஸ்பதி, நாரதர், கச்யபர், தேசிகன் ஆகியோர் சித்தி பெற்றனர் என்று புராணங்கள் கூறுகின்றன.

கருடாழ்வானின் பகவத் தொண்டு

ஸ்ரீவைகுண்டத்தில் எம்பெருமானுக்கு பகவத் தொண்டு செய்யும் நித்திய சூரிகளான மூவரில் (அனந்தன், விஷ்வக்சேனர்களுடன்) கருடாழ்வானும் ஒருவன்.

திருநாராயணபுரம் (மேல்கோட்டை) எம்பெருமான் சம்பத் குமாரருக்கு வைரமுடி எனும் வைணவ தேவ முடியைச் சமர்ப்பித்தான்.

ஸ்ரீவைகுண்டத்திலிருந்து கிரிடாசலம் என்ற விமானத்தை திருமலைக்குக் கொண்டுவந்து, அதில் திருவேங்கடவனை எழுந்தருளச் செய்தான்.

திருக்கோவில் பிரம்மோற்சவத்தில் கருட சேவையன்று எம்பெருமாளைத் தன்மேல் எழுந்தருளச் செய்து சேவை செய்கிறான்.

கஜேந்திராழ்வார் போன்ற பக்தர்களைக் காக்க எம்பெருமாள் விரைவாகச் செல்ல உதவுகிறான்.

எம்பெருமாள் திருக்கோவில்களில், கருவறைக்கு எதிரே கைகூப்பி எம்பெருமாளைச் சேவித்த வண்ணம் இருக்கும் கருடபகவானை முதலில் சேவித்து, துவாரபாலகர்களை வணங்கி விடை பெற்று பின்னரே பெருமாளைச் சேவிக்க வேண்டும் என்பது நெறிமுறையாகும். கருடன் எக்காலத்திலும் திருமாலுக்கு விசிறியாகவும், வெற்றிமாலையாகவும், தாசனாகவும், தோழனாகவும், பரம பக்தனாகவும், துணைவனாக வும் இருந்து வருகிறான்.

கருடனும் அஹோபிலமும்

கருடன் அஹோபிலத்தில் கடுந்தவம் புரிந்து, பிரகலாதனுக்கு காட்சியளித்ததைப்போல் தனக்கும் காட்சியளிக்க வேண்டுமென்று ஸ்ரீ நரசிம்மரை வேண்டினான். நரசிம்மரும், கருடன் வேண்டுகோளுக்கிணங்கி ஜ்வாலா நரசிம்மராகக் காட்சி கொடுத்தருளினார். அஹோபிலம் கருடன் காட்சிபெற்ற தலமாதலால் கருடாத்திரி, கருட சைலம் (மலை) என்று வழங்கப்படுகிறது.

கருடனும் வேதாந்த தேசிகனும்

திருவயிந்திரபுரத்தில் வேதாந்த தேசிகன் கருட மந்திரத்தைச் சொல்லி தவமிருந்து கருடனின் அருளைப் பெற்றார். கருடனின் பெருமையை "கருட பஞ்சாசத்', "கருட தண்டகம்' எனும் இரு வடமொழி நூல்களில் விளக்கியுள்ளார். பாம்பாட்டி ஒருவன் கடும் விஷம் கொண்ட சங்கபாலன் என்ற பாம்பினை தேசிகர்மீது ஏவினான்.

அதைத் தடுக்க கருட மந்திரத்தைச் சொன்னார் தேசிகர். உடனே பறந்து வந்த கருடன், அப்பாம்பைத் தன் கால்களால் எடுத்துச்சென்று தேசிகனைக் காத்தான்.

கருட புராணம்

ஸ்ரீமந் நாராயணன் கருடபகவானுக்கு உபதேசம் செய்ததால் இது கருடபுராணம் என்று வழங்கப்பட்டது. உலக மக்கள் முதலான அனைத்து உயிர்களும் தாங்கள் செய்யும் தீவினைகளுக்குரிய பலனை உயிர் பிரிந்தபின் அனுபவிப்பர். எந்த பாவங்களுக்கு என்னென்ன தண்டனை என்பதை கருடபுராணம் கூறுகிறது. இந்நூலினைப் படித்தால் தவறு செய்ய அஞ்சி நல்வழிப்படுவர். எனவே அனைவரும் இந்நூலைப் படிக்க வேண்டியது இன்றியமையாததாகும்.

இத்தனை சிறப்புகளைப் பெற்ற கருட பகவானை வணங்கி அவனருள் பெற்று, அவனால் திருமாலின் தரிசனத்தையும் அருளையும் பெறுவோமாக!



No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...