Friday 26 May 2017

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களைக் கல்யாணம்செய்து கொள்ளக் கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன,

மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்களைக் கல்யாணம் செய்து கொள்ளக் கூடாது என்று சொல்வதன் காரணம் என்ன,?


ஒரு விஷயத்தை நன்றாகப் புரிந்துகொள்ளுங்கள். இறைவன் படைத்த 27 நட்சத்திர தேவியர் அனைவருமே புனிதமானவர்கள். மக்கள் சமுதாயத்திற்குத் தொண்டாற்ற அல்லும் பகலும் அயராது உழைப்பவர்கள், மூர்த்தி, தீர்த்தம், தலங்களை முறையாக தரிசித்து அந்த பூஜா பலன்களை எல்லாம் நம்முடைய முன்னேற்றத்திற்காக அர்ப்பணிப்பவர்கள். சுயநலம் ஒரு சிறிதும் அற்ற உத்தம தெய்வங்களே நட்சத்திர தேவியர் என்பதை உணர்ந்தால் உங்கள் கேள்விக்குரிய பதிலை நீங்களே உணர்ந்து கொள்வீர்கள். 63 நாயன்மார்கள், பன்னிரு ஆழ்வார்கள், சித்தர்கள், மகான்கள், யோகிகள், உத்தம மனிதர்கள் எல்லா நட்சத்திரங்களிலும் பிறந்திருக்கிறார்கள். அவர்கள் விரும்பியிருந்தால் நல்ல நட்சத்திரங்கள் என்று நீங்கள் நினைக்கும் நட்சத்திரங்களில் மட்டும் பிறந்திருக்கலாமே? இதை யோசித்துப் பார்த்தீர்களா?

மக்களின் அறியாமைக்குக் காரணம், ’... பெண் மூலம் நிர்மூலம்’ என்ற பழமொழியை வழக்கம்போல் தவறாகப் புரிந்து கொண்டதுதான். ’நிருத்தி திக்கில் இருக்கும் மூலப் பிரபுவை வணங்கிய பெண் நலம் பெறுவாள்,’ என்பதே இந்தப் பழமொழியின் உண்மைப் பொருள். நிருதி திக்கு என்பது தென் மேற்கு திசை, இது கன்னி மூலை என்றும் வழங்கப்படும். தென் மேற்கு திசையில் குடிகொண்டிருப்பவர் யார்? எல்லாவற்றிற்கும் முதன்மையாக வழிபட வேண்டிய முழுமுதற் கடவுளான மூலப் பிரபு கணபதியே கன்னி மூலை கணபதியாக எல்லா சிவாலயங்களிலும் எழுந்தருளியுள்ளார். மணமாகாத கன்னிப் பெண்கள் இந்தக் கன்னி மூலை கணபதியை வணங்கினால் அவர்களுக்கு எளிதில் திருமணம் கை கூடும்.
மூல நட்சத்திரத்தில் பிறந்த பெண்கள் காரிய சாதனைகள் புரிவர். அடியேனுக்குத் தெரிந்த பல பெண்கள் மிகச் சிறந்த குழந்தை மருத்துவர்களாகவும், பெண்ணியல் உடல் மருத்துவர்களாகவும், கர்ப்பிணி சிசிச்சை வல்லுநர்களாகவும் சிறந்து விளங்கி புகழுடன் வாழ்கிறார்கள். அவர்கள் அனைவரும் மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்களே. மூல நட்சத்தில் பிறந்தவர்களின் குணாதிசயத்தை, அவர்களின் எதிர்காலத்தை அறிய வேண்டுமானால் அவர்கள் எந்த நட்சத்திரப் பாதத்தில் பிறந்தார்கள், அந்த நட்சத்திர பாதம் எந்தக் கிரகங்களின் பார்வையைப் பெற்றுள்ளது, அதன் நவாம்ச வீடு என்ன, திரேகாணம், துவிதாம்சத்தில் எந்த வீடுகளில் உள்ளது போன்ற விவரங்களை எல்லாம் கணித்துப் பார்க்க வேண்டும். வெறுமனே மூல நட்சத்திரத்தில் பிறந்ததை மட்டும் பார்த்து ஒரு முடிவுக்கு வருவது சரியான ஜோதிட அணுகு முறை ஆகாது.
மூல நட்சத்திரத்தில் நிறைவேற்றும் நற்காரியங்கள் பன் மடங்காக விருத்தியாகும் தன்மை உடையன. உதாரணமாக, மூல நட்சத்திரத்தில் ஒரு தங்கக் காசு வாங்கினால் மூன்று காசு வாங்க வசதி வரும்.
‘மூலத் தங்கம் முழு முதற் பொருளாய் ஆகி
காலத் தாமதத்தைக் கவினுறக் கழித்திட வழி செய்யும் பாரேன்‘
என்று அகத்திய நாடி உரைக்கிறது.

120 ஆண்டுகள் மனித உடலில் வாழ்ந்து, உயிர் உடலை விட்டுப் பிரிந்த பின்பும் மற்றவர்களுக்காக தன் உடலைப் பாதுகாத்து அருள்புரியும் உடையவர் என்னும் ராமானுஜர் மூல நட்சத்திரத்தில் பிறந்தவரே. மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தத் துறையைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அதில் தலைமைப் பொறுப்பில் இருப்பார்கள். காரிய சாதனைகள் பல புரியவல்லவர்கள் மூல நட்சத்திரக்காரர்கள்.
மூல நட்சத்திர தினத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருதல் சிறப்பாகும். ‘குத்துச் செடி‘ என்று அழைக்கப்படும் ஒரு அற்புதமான மூலிகை உண்டு. சதுரகிரி மலை, திருஅண்ணாமலை, ஜவ்வாது மலை, சுருளி மலை, மருந்துவாழ் மலை, திருக்குற்றால மலை போன்ற மலைத் தலங்களில் மட்டுமே வளரக் கூடிய மூலிகை. இதன் குணம் கருதி இதை ’பங்காளிச் செடி’ என்றும் சொல்வது உண்டு. மூல நட்சத்திரத்தில் மட்டுமே இந்தச் செடி வளரும், மூல நட்சத்திரம் முடிந்தவுடன் பூமியின் அடியில் சென்று மறைந்து விடும். நிலம் புரண்டி என்ற ஒரு தெய்வீக மூலிகையைப் பற்றி அடியேன் உங்களுக்கு ஏற்கனவே விளக்கி உள்ளேன்.. அதைத் தொட்டாலே சிவபெருமான் பிரத்யட்சியமாக அதைத் தொட்டவர் கண் முன்னே நிற்க வேண்டும் என்பது இறை நியதி. அப்படிப்பட்ட அற்புத ஆற்றல் படைத்த நிலம்புரண்டிக்கு மூலமாக இருப்பதாலும், மூல நட்சத்திரம் அன்று மட்டுமே தோன்றுவதாலும் பங்காளிச் செடியை ‘மூல நிலம்புரண்டி‘ என்றும் சொல்வது உண்டு. இதன் காற்று மனிதர்கள் மேல் பட்டால் பங்காளிச் சண்டைகள், சொத்துத் தகராறுகள் மறையும்.
கான்சர், ஆஸ்துமா, பக்கவாதம் போன்ற கடுமையான வியாதிகளால் அவதியுறுவோர் தாங்கள் ஏற்கும் மருந்துகளைக் கையில் ஏந்தி மூல நட்சத்திரம் அன்று திருஅண்ணமலையைக் கிரிவலம் வந்து பின்னர் அவற்றைப் பயன்படுத்துவதால் நோயின் கடுமை படிப்படியாகக் குறைவதைக் கண்கூடாகக் காணலாம். புதிய மருந்துகள், விஞ்ஞானக் கண்டு பிடிப்புகள், கம்ப்யூட்டர் ப்ராஜக்ட்டுகள் போன்றவற்றை மூல நட்சத்திர தினத்தில் தொடங்குவது நலம். சில மருந்துகள் மூல நட்சத்திரத்தில் மட்டுமே செய்யப்படுகின்றன. மூல நட்சத்திரத்தன்று மருந்துகளின் வீரிய சக்தி அதிகரிக்கிறது.
Sulpha drugs என்று அழைக்கப்படும் கந்தக மருந்து வகைகளை மூல நட்சத்திரத்தன்று தயாரிப்பது விசேஷம். குளிகைகள் தயாரிக்க, பிரதிஷ்டை செய்ய மூல நட்சத்திரம் உகந்தது. மார்கண்டேய மகரிஷி திருஅண்ணாலையைச் சுற்றி குளிகைகளைப் பூமி அடியில் பதித்து வைக்கும் புனித பூஜைகளை மூல நட்சத்திர தினத்தில்தான் றிறைவேற்றினார். இன்றும் ஆஞ்சநேய மூர்த்தி ஒவ்வொரு மூல நட்சத்திரம் அன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வந்து அற்புதமான குளிகைகளை திருஅண்ணாமலை கிரிவலப் பாதை எங்கும் மக்களின் நலனுக்காக நிரவி வருகிறார் என்பது பலரும் அறியாத இரகசியம். இதனால்தான் திருஅண்ணாமலையில் எங்கு சென்றாலும் பாதணிகள் அணியாமல் வெறுங்காலுடன் செல்லுதல் சிறப்பு என்று சித்தர்கள் வலியுறுத்துகிறார்கள்.
வீட்டிற்குத் தேவையான மளிகை சாமான்களை மூல நட்சத்திரத்தன்று வாங்கலாம். மருத்துவர்கள், மருந்துகள் தயாரிப்போர், மருந்து கம்பெனிகளில் பணிபுரிவோர், பெண்ணியல் நோய் வல்லுநர்கள், குழந்தை மருத்துவர்கள் போன்றோர் மூல நட்சத்திர தினத்தன்று திருஅண்ணாமலையைக் கிரிவலம் வருவதால் நல்ல கைராசியுடன், தங்கள் தொழிலில் சிறந்து விளங்கி பேரும் புகழும் எய்துவர். மூல நட்சத்திரத்தில் தொடங்கும் வியாபாரம், தொழில் முயற்சிகள் நன்முறையில் வளர்ச்சி பெற்று சிறப்படையும்.
அடியேனுக்குத் தெரிந்த ஒரு தொழிலதிபர் இதை நடைமுறையில் செயல்படுத்தி நன்மை அடைந்து வருகிறார். அவர் ஒரு முறை 150 விமானங்களை வாங்கினார். முதலில் ஜெர்மானிய விமானங்களை வாங்க நினைத்த அவர், பிறகு தன் எண்ணத்தை மாற்றிக் கொண்டு பிரான்ஸ் நாட்டு விமானங்களை வாங்கினார். இதனால் பல கோடி ரூபாய் அந்நியச் செலாவணி அவருக்கு மிச்சமாயிற்று. அவர் தன் முடிவை திடீரென மாற்றிக் கொண்டதற்குக் காரணம் பிரான்ஸ் நாட்டு விமானங்களின் தயாரிப்பு மூல நட்சத்திரம் அன்று தொடங்கப்பட்டது என்பதை கம்பெனியின் ஆவணங்களிலிருந்து தெரிந்து கொண்டதுதான்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...