Thursday 25 October 2018

உவமை கதை

                                                                            உவமை கதை

ஒரு பிச்சைக்காரர் இருந்தார்.
அவர் எப்போதும் ஊரின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் மாத்திரம் அமர்ந்திருப்பார்.
வேறு எங்கும் போய் பிச்சை எடுக்க மாட்டார்.
பசி எடுத்தால் மட்டுமே உணவு கேட்பார்.

பணம் வாங்க மாட்டார்.

அவரது நல்ல பண்பைப் பார்த்த அந்த கிராமத்தினர் தினமும் அவருக்கு மூன்று வேளையும் உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தார்கள்.

சில நாட்களில் அதிகமான உணவு வந்துவிட்டால், அதையும் யாருக்காவது தானம் செய்து விடுவார்.

எனவே அவரிடம் அந்த கிராமத்தினர்
நல்ல மரியாதை வைத்திருந்தனர்.

ஒரு நாள் அவர் இறந்து விட்டார். ஊரே துக்கப்பட்டது.

ஊர்ப் பெரியவர்கள் எல்லாம் கூடி
ஒரு முடிவுக்கு வந்தார்கள்.

பிச்சைக்காரரின் உடலை அவர் தங்கியிருந்த, அவருக்குப் பிரியமான அதே இடத்திலேயே புதைத்துவிட முடிவு செய்தார்கள்.

அவர் இருந்த இடத்திலேயே குழி தோண்ட ஆரம்பித்தார்கள். நாலாவது அடி தோண்டும்போது கடப்பாறை ஏதோ உலோகத்தில் மோதியது போல 'நங்' கென்று சத்தம் கேட்டது.

எல்லோரும் வந்து எட்டிப் பார்த்தார்கள். அந்த இடத்தில் , ஒரு பெரிய பித்தளை அண்டா தென்பட்டது.
உடனே தோண்டுவதை நிறுத்தி விட்டு அண்டாவை வெளியே எடுத்தனர்.
திறந்து பார்த்தால்,
அவர்களுடைய கண்களை அவர்களாலேயே நம்ப முடியவில்லை.

ஆமாம்.,
அண்டா முழுக்கத் தங்கமும்,
வைரமும் நிறைந்திருந்தது.

அந்தப் புதையலின் மதிப்பு அந்த கிராமத்தில் உள்ள அனைவருமே பல ஆண்டுகளுக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவிற்கு இருந்தது.

புதையல் ஊருக்குத் தேவையான நல்ல காரியங்களைச் செய்யும்படி
அந்த கிராமத்தின் தலைவரிடம் ஒப்படைக்கப்பட்டது.
தலைவர் சொன்னார் ,

"தான் உட்கார்ந்திருந்த
இடத்திற்கு கீழே இவ்வளவு பெரிய பொக்கிஷம் இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா...

அந்த மனுஷன் பிச்சை எடுக்காம ,
ஒரு மகாராஜா மாதிரி வாழ்ந்திருக்கலாம். கடைசி வரைக்கும், பாவம், பிச்சைக் காரனாவே வாழ்ந்து செத்தார்...!"

பலரும் இப்படித்தானே தங்கள் அருகிலேயே இருப்பது தெரியாமல் நிம்மதிக்கும், சந்தோஷத்திற்கும் சமாதானத்திற்கும் பிச்சைக்காரர்களாய் எங்கெங்கோ அலைகிறார்கள்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...