Saturday 13 October 2018

சிலந்திக்கும் யானைக்கும் சண்டை

                சிலந்திக்கும் யானைக்கும் சண்டை


திருவானைக்காவல் மிகவும் அழகான தமிழ்ப் பெயர். அங்கிருக்கும் கோயிலும் அழகானது. கோயிலில் இருக்கும் அன்னையும் அழகு. அவளது காதணிகளும் மிக அழகு. பெரியது.
முருகன் கோயில், அம்மன் கோயில்களை விட சிவன் கோயில் அமைதியா இருக்கும். பெருமாள் கோயில் கொண்டாட்டங்களைச் சொல்லவே வேண்டியதில்லை. அதுவும் நல்லாத்தான் இருக்கும்.
ஆனாலும் பொதுவா சிவன் கோயில் மத்த கோயில்களை விட அமைதியா இருக்கும். அதே போல புத்தர் கோயில்களும் அமைதியா இருக்கும். அதுக்குக் காரணம் இருக்கு.
சிவனும் சரி, புத்தரும் சரி, ரெண்டு பேருமே தவசிகள். எப்பவுமே தவத்தில் உட்கார்ந்திருப்பாங்க. தவம் மனதை அமைதிப்படுத்தும். ஆண்டவனை நினைச்சு இருக்கும் தவம் அமைதிப்படுத்தும்னா, ஆண்டவனே தவம் இருந்தா எவ்வளவு அமைதியா இருக்கும்!
ஒரு கதை சொல்வாங்க. புத்தர் தவத்தில் இருக்குறப்போ அந்த தவத்தின் ஆற்றல் புத்தரைச் சுற்றி பலப்பல யோசனைத் தொலைவுகளுக்கு இருக்குமாம். ஒருவேளை மானைத் துரத்திக் கொண்டு வரும் புலி அந்த தவ ஆற்றல் இருக்கும் இடத்துக்குள்ள நுழைஞ்சிருச்சுன்னா, அதோட சீற்றமும் பசியும் அடங்கி அமைதியாயிருமாம். புத்தரின் தவத்தால் அந்தப் புலியின் மனமும் அமைதியாகி அதுவும் தவத்துல விழுந்திருமாம்.
உள்ளத்தை ஒருமுகப் படுத்தும் தவம் உடம்புக்கும் நல்லது. அதுவும் காலையில் செய்யும் தவம் மிகவும் நல்லது.
அந்த அமைதிக்காகத்தான் காலையில் திருவானைக்காவலுக்குப் போகனும்னு நான் விரும்பினேன். கோயிலும் அமைதியா இருந்தது. அதுவும் சிவனுக்குச் சிறப்பானதாகச் சொல்லப்படும் திங்கட்கிழமை.
வாசல்ல கொஞ்சம் நாகலிங்கப்பூ வாங்கிக்கிட்டோம். நாகலிங்கப்பூ தெரியும்ல? அஞ்சுதலைப் பாம்பு படமெடுத்தாப்புல இருக்கும். உள்ள ஒரு குட்டி லிங்கம் இருக்கும். மிக அழகான மலர். சிவனை நம்புறவங்களுக்கு ஒரு நாகலிங்கப்பூ ஒரு கோயிலுக்குச் சமம். சிவலிங்கமோ கோயிலோ இல்லைன்னா நாகலிங்கப்பூவையே கும்பிடலாம்.
திருவானைக்காவல் கோயில் பஞ்சலிங்கங்களில் நீரைக் குறிக்கிறது. சிவலிங்கம் இருக்கும் இடத்தில் தண்ணீர் ஊறிக்கொண்டேயிருக்கிறது. மழைக்காலங்களில் நீரின் அளவு கூடுகிறது. காவிரிப் படுகையில் அதற்கேற்ற வகையில் அழகாக அமைந்திருக்கிறது கோயில்.
சிவலிங்கம் இருக்கும் கருவறை மிகச்சிறியது. ஒரு கதை சொல்வாங்க. காட்டில் வெண்நாவல் மரத்தடியில் இருந்த சிவலிங்கத்தின் மேல் இலையும் தூசியும் விழாம ஒரு சிலந்தி வலைகட்டிக் காப்பாத்துச்சாம். அந்தப் பக்கம் வந்த ஒரு யானையோ சிவலிங்கத்து மேல சிலந்தி வலைபின்னிப் பாழடைஞ்சிருச்சேன்னு வருத்தப்பட்டு அந்த வலையை அத்துப் போட்டுச்சாம்.
மறுபடியும் சிலந்தி வலையக் கட்ட, மறுபடியும் யானை பிய்க்கன்னு இந்தச் சண்டை கொஞ்ச நாள் நடந்திருக்கு. ஒருநாள் சிலந்தி ரொம்ப ஆத்திரபட்டு யானையோட தும்பிக்கைக்குள்ள நுழைஞ்சிருச்சாம். அந்த வேதனை தாங்காம யானை இறந்து விழ உள்ளயே சிலந்தியும் இறந்திருச்சாம்.
இறந்து போன அந்தச் சிலந்தி கோச்செங்கண் என்னும் சோழ மன்னனாகப் பிறந்ததாம். அந்தச் சோழன் கட்டியதுதான் இந்தக் கோயில்னு தலபுராணக் கதை சொல்றாங்க. கோயிலுக்குள்ள யானை வந்திருமோன்னு கருவறையை ரொம்பச் சிறுசா யானை நுழைய முடியாத வகையில் சிலந்திச் சோழன் கட்டினான்னு சொல்வாங்க.
சரி. கதையில் அந்த யானைக்கு என்னாச்சுன்னு தெரிய வேண்டாமா? அதுக்கான பதில் இந்தப் பதிவில் ஒரு எடத்துல இருக்கு. லேசாக் கண்டுபிடிச்சிரலாம். 🙂
கதையும் சுவையான கதைதான். கோயிலுக்குள் நுழையும் போது இந்தக் கதை ஒரு நினைவலை மாதிரி நொடியில் மூளைக்குள் வந்துட்டுப் போச்சு. கதையத் தள்ளி வெச்சுட்டு கடவுளைக் கும்பிடலாம்னு கருவறைக்குள் நுழைஞ்சேன். ஆனை மட்டுமல்ல குதிரை கூட நுழைய முடியாது. சின்ன அறைதான். உள்ள போனா சிவலிங்கத்துக்குப் பக்கத்துல நின்னு கும்பிடலாம். பொன்னார் மேனியனைத் தண்ணீர் மேனியனாப் பாத்து ரசிச்சேன்.
கருவறையில் தரிசனம் பண்ணீட்டு வெளிய வர்ரப்போ நல்லாக் குனிஞ்சு வராததால தலை லேசா இடிச்சிருச்சு. வலியெல்லாம் இல்லாம மெத்துன்னு லேசா இடிச்சது. அந்நேரம் அந்தப் பக்கம் வந்த ஒரு அம்மா, “மறுபடியும் உள்ள போங்க தம்பி”ன்னு சொன்னாங்க. நானும் உள்ள வந்துட்டேன். மறுபடியும் அருளின்பம் பெருக்கும் தீபாராதனை. இரண்டாம் காட்சி தந்த ஈசனுக்கு நன்றி சொல்லீட்டு வெளிய வந்தேன்.
திருவானைக்காவில் இருக்கும் அம்பிகைக்கு அகிலாண்டேசுவரி என்று பெயர். அகிலத்தையே படைத்து ஆட்சி செய்யும் அவள் அகிலத்துக்கே ஈசுவரிதான். அவளை உள்ளமும் உயிரும் குளிர வணங்கிவிட்டு வெளியே வந்தோம்.
ஆனைக்காகாரி சாமானியப்பட்டவள் அல்ல. கல்வி முழுதும் கற்க வேண்டும் என்று ஒரு அந்தணன் அம்பிகையை நோக்கித் தவம் இருந்தான். அம்பிகையும் வந்தாள். அவன் கற்பனையில் கண்டு வைத்திருந்த பட்டுச் சீலை இல்லை. சூரியனையே கண்கூச வைக்கும் நகைகள் இல்லை. எதிர்த்தவரைக் குத்திக் கிழிக்கும் சூலமும் இல்லை. ஆனால் ஞாலம் முழுதும் காக்கும் அன்னையோ தாய்மைக்குரிய எளிமையோடு வந்தாள். வந்தவளும் வாயில் வெற்றிலை மென்று கொண்டிருந்தாள்.
அந்தணனனால் அவளை அம்பிகையாகவே நினைக்க முடியவில்லை . அவள் வாயில் செம்மையாக இருந்தது மெல்லப்பட்ட வெற்றிலை அல்ல. ஞானம். நம்பிக்கை இல்லாதவனுக்கு அது புரியவில்லை. ”சீ போ போ” என்று விரட்டி விட்டான். அம்பிகை அப்படியே கோயிலைச் சுற்றி வந்தாள். மடப்பள்ளியில் சமைத்து நன்றாகத் தின்று விட்டுப் படுத்திருந்தான் வரதன். “வரதா, வாயைத் திற” என்றாள் அன்னை. அவனும் வாயில் பொங்கலோ பாயசமோ விழப்போகிறது என்று அரைகுறைத் தூக்கத்தில் வாயைத் திறந்தான். அம்பிகை தான் மென்றிருந்த வெற்றிலையை அவன் வாயில் உமிழ்ந்தாள். வெறும் வரதன் அன்றிலிருந்து கவிமழை பொழியும் காளமேகம் ஆனான். இதுதான் காளமேகப் புலவரின் கதை.
பிள்ளைகளுக்கு படிப்பும் தங்களுக்கு நல்லறிவும் வேண்டும் அன்பர்கள் வணங்க வேண்டியது திருவானைக்காவல் அகிலாண்டேசுவரியை. அதுனால்தானோ என்னவோ பணக்காரசாமிகளுக்குத் தினப்படி கூடும் கூட்டம் அகிலாண்டேசுவரிக்குக் கூடுவதில்லை. கல்வியும் அறிவும் எல்லாருக்கும் வாய்ப்பதில்லை. சேரிடம் அறிந்தே அறிவும் சேர்கிறது. அதனால்தான் கற்றோரைக் கற்றோரே காமுறுவர். பணம் வரும் போகும். கல்வியறிவு வரும். ஆனால் போகாது. அந்த யானையை சிவபெருமான் சிவகணங்களுக்குத் தலைமைக்கணமாக ஆக்கிக் கொண்டாராம்.
கோயிலைச் சுற்றி வரும் போது நந்தியம்பதி அகப்பட்டார். அவரைக் கிளிக்கிக் கொண்டேன். அப்போது அங்கு நெய்விளக்கு வித்துக் கொண்டிருந்தவர் “கேமரா டிக்கெட் வாங்கியாச்சா” என்று கேட்டார். ஆச்சு என்று சொல்லி விட்டு அவரையும் கிளிக்கிக் கொண்டு வாசலை நோக்கி நடந்தேன்.
வழியில்தான் சிலந்திச் சோழனின் எதிரியைச் சந்திக்க நேர்ந்தது.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...