Sunday 7 July 2019

திருச்செந்தூரும் குரு பகவானும் !​

                                        

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

   திருச்செந்தூரும் குரு பகவானும் !

குரு குஹ சரணம் !தேவகுரு என்றும் பிரகஸ்பதி என்றும் போற்றப்படும் குரு பகவான் ஒருமுறை, மனக்கலக்கத்துடன் கானகத்தின் வழியே நடந்து வந்துகொண்டு இருந்தார். அவரது மனம் சஞ்சலத்தில் ஆழ்ந்திருந்தது. 
தட்ச யாகத்தில் கலந்துகொண்டதால் சிவநிந்தை செய்த பாவத்துக்கு ஆளாகியிருந்தார்கள் தேவர்கள். விளைவு, தேவர்களின் வலிமை குறைந்து, சூரபத்மனின் கை ஓங்கிவிட்டது. ஈரேழு பதினான்கு உலகங்களிலும் அவனது அதிகாரம் கொடிகட்டிப் பறக்கிறது. தேவர்களைத் தேடிப் பிடித்து வேட்டையாடி வருகிறான். இந்திரன் இருக்கும் இடமே தெரியவில்லை. தேவர்களின் குருவான பிரகஸ்பதி கிடைத்தால், அவரையும் ஒழித்துவிடக் கங்கணம் கட்டித் திரிகிறான் அசுர வேந்தன்.
இதற்கெல்லாம் தீர்வு என்ன என்ற கேள்வி குருபகவானுக்குள். மனதில் ஆர்ப்பரிக்கும் எண்ணங்களுடன், கானகத்தின் வழியே சென்றுகொண்டிருந்தார் அவர். அந்தக் காடு சூரபத்மனின் தலை நகரமான வீரமகேந்திரபுரிக்கு அருகில் இருந்தது. வேறு இடங்களில் தேடினாலும் தேடுவானே தவிர, தன் எல்லையில் குரு பகவான் இருப்பார் என்ற எண்ணம் சூரனுக்கு உதிக்க வாய்ப்பே இல்லை. எனவே, இந்தக் காடு தனக்கு மிகப் பாதுகாப்பானது என்று கருதிய குரு பகவான், அங்கே ஓரிடத்தைத் தேர்ந்தெடுத்து, சிவத்தை மனத்தில் இருத்தி, தவத்தில் மூழ்கினார்.
 
அப்போது, அவரது ஞானக்கண்ணில் திருக்கயிலையின் காட்சிகள் விரிந்தன. ஆவேசமாக எழுந்து, கோபாக்னியுடன் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டிருந்தார் சிவபெருமான். பூத கணங்களும் அரம்பையரும் என்ன நேரப்போகிறதோ என்று அச்சத்துடன் அந்தத் தாண்டவத்தைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள்.
சிவனாரின் இந்த ருத்ர தாண்டவத்துக்குக் காரணம் இருக்கவே செய்தது. 

தவத்தின் பலனாக சிவனாரிடம் பல வரங்களும், இறவாத் தன்மையும் பெற்றிருந்தான் சூரபத்மன். அதன் காரணமாக, சர்வ லோகங்களையும் ஆளும் பேறு கிடைத்தது அவனுக்கு. ஆனால் தகுதியற்றவனின் ஆட்சியில் நல்லவர்களும் ஞானிகளும் படும் பாடு சொல்லிலும் எழுத்திலும் அடங்காது அல்லவா? இங்கு தேவர்கள் மற்றும் ரிஷிகளின் பாடும் அப்படித்தான் இருந்தது. சூரபத்மனால் கொடுமையின் உச்சகட்டத்தை அனுபவிக்கத் தொடங்கினர். அதைப் பொறுக்க முடியாமல்தான் சினம் கொண்டுவிட்டார் சிவபெருமான்.

 
அவரது நெற்றிக்கண் திறந்தது. அதிலிருந்து ஆறு தீப்பொறிகள் தோன்றின. அதைக் கண்டு பார்வதிதேவி அச்சத்துடன் விலகி நகர, அவளுடைய கால் சிலம்பு சிதைந்து, அதிலிருந்த நவரத்தின மணிகள் தெறித்துத் தரையில் விழுந்தன. இந்த நவமணிகளின் மேல் தீப்பொறிகளின் ஒளிபட்டு ஏற்பட்ட பிரதிபலிப்பில் இருந்து நவ வீரர்கள் தோன்றினார்கள். அவர்கள் வீரபாகு, வீரகேசரி, வீரமகேந்திரன், வீர மகேசன், வீர புரந்தரன், வீர ராக்ஷஸன், வீர மார்த்தாண்டன், வீர ராந்தகன், 

வீரதீரன். அதே நேரம், சிவனாரின் நெற்றிக்கண்ணில் தோன்றிய தீப்பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் சேர்க்கப்பட்டன. அங்கே அவை ஒன்றிணைந்து வீரகுமாரனாக உருவெடுத்தன (தற்போது ஈரோடு மாவட்டம், 

வெள்ளக்கோவிலில் வீரகுமார் என்ற பெயரில் முருகனுக்குச் சந்நிதி உள்ளது. இங்கு முருகன் போர்க்கோலத்தில் இருப்பதால், கோயிலுக்குள் பெண்களுக்கு அனுமதி இல்லை).

குமாரனுக்கு அருளாசி வழங்கிய சிவபெருமான், ''தேவர்களே, கலங்கவேண்டாம். இதோ எனது புத்திரனான வீரகுமார் முருகன், சுப்பிரமணியன், கந்தன் என்று போற்றப்படுவான். இவன், சூரபத்மனை அழிக்கவே தோன்றியுள்ளான். 

நவமணிகளின் பிரதிபலிப்பில் தோன்றிய ஒன்பது பேரும் முருகனுடன் இணைந்து போரிட்டு, சூரபத்மனை வீழ்த்துவார்கள். அதற்கான காலம் கனிந்து விட்டது'' என்று திருவாக்கு தந்தார்.

நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமு மாக வளர்ந்து ஆளான முருகப்பெருமானும் நவ வீரர்களும், சூரனை வெல்வதற்குப் படை திரட்டிப் புறப்பட்டு, இதோ குருபகவான் தவமிருக்கும் இந்தக் கானகத்துக்கும் வந்துசேர்ந்துவிட்டார்கள்.
தேவாசுர யுத்தம் மூளப்போகிறது. தேவ சேனாதிபதியாக முருகவேள் நியமிக்கப் பட்டுவிட்டார். அவருக்குத் துணையாக நவ வீரர்களும் வியூகம் வகுக்கத் தயாராக இருந்தார்கள். மந்திர ஆலோசனை நடந்தது.
முருகப்பெருமான் தனது கருத்தை வெளிட்டார்... 'எதிரியைத் தாக்குவதற்கு முன்பு, அவனது பூர்வாங்கம் என்ன, அவனது பலம் பலவீனம் என்ன என்பது பற்றியெல்லாம் அறிந்துகொண்டு போருக்குச் செல்வதே விவேகமான செயல். 

ஆகவே, நாமும் சூரபத்மனின் பூர்வாங்கம், அவன் மற்றும் அவனைச் சுற்றியுள்ளவர்களின் பலம் பலவீனத்தை அறியவேண்டும். சூரபத்மனைப் பற்றி அறிந்துகொண்டு, அதன்பின் போரைத் தொடங்கலாம்!' என்றார்.

 
தேவேந்திரனின் வேண்டுகோளுக்காக தேவகுரு வியாழ பகவான், சூரபத்மனைப் பற்றிய அனைத்து விவரங்களையும் கந்தவேளுக்கு எடுத்துக் கூறினார்.
அனைத்தையும் கவனமாகக் கேட்டுக் கொண்ட கந்தவேள், குருபகவானிடம் விடைபெறும் முன், 'தேவகுருவே! என்னைத் தரிசிக்கத் தாங்கள் தவமியற்றிய திருத்தலம் இது. இனி இங்கே நாம் இருவரும் சமமாக மதிக்கப்படுவோம். 

ஏனெனில், நாம் இருவருமே இந்த உலகை, அதில் வாழும் மக்களை ஞானத்தில் ஏற்றி உய்விக்க வந்தவர்கள். நாம் இருவரும் எப்போதும் எதிலும் திருப்தியாக இருப்பவர்கள். கருணை தவழும் முகமும், சத்துவமான சாந்த குணமும் கொண்டவர்கள். காவி உடை அணிந்த நாம் அடியவர்களின் துன்பத்தைப் போக்குபவர்கள். அடியவர்களுக்கு அபயம் அளிக்கும் நாம் தூய திருநீறு அணிந்திருப்பவர்கள்.

அதுபோல், குருபரன் என்ற திருநாமம் நம் இருவருக்கும் உண்டு. அஞ்ஞான இருளை நீக்கி, மாயையை அழிப்பதில் நாம் இருவருமே வல்லவர்கள். ஆதலால்தான் முரட்டுத்தனம் தணிந்து ஞானத்துடன் கூடிய வீரம் பெற, செவ்வாய் என்னை வணங்குகிறான். அதன் காரணமாகவே 'மங்களன்’ எனப் பெயர் பெறுகிறான். அடியவர்களின் உள்ளம் எனும் திருக்கோயிலில் நாம் இருவருமே வீற்றிருக்கிறோம்.
யுத்தம் முடிந்து, நான் இங்கு கோயில் கொள்ளும்போது, திருச் சீரலைவாய் எனும் இந்தப் புண்ணியப்பதியும் தங்களின் பெயரால் குரு ஸ்தலமாகவே விளங்கும்'' என்று வரம் அளித்துச் சென்றார்.அதன்படி, குருபகவான் அங்கேயே தங்கினார்.
அதுமட்டுமின்றி, கந்தன் தந்த வரப்பயனால் 6 மைந்தர்களையும், ஒரு மகளையும் பெற்று, திருச்செந்தூரில் குரு பகவானாக, புத்திரப்பேறு அருளும் தேவனாக, ஞானம் அருளும் ஞான குருவாக அருள்பாலிக்கிறார்.
நாமும், செந்திலாண்டவனைத் தரிசிக்க திருச்சீரலைவாய் என்று புராணங்கள் போற்றும் திருச்செந்தூருக்குச் செல்லும்போது, அங்கு அருளும் குருபகவானையும் தரிசித்து வணங்கி, குகப்பெருமானின் திருவருளோடு குருவருளையும் பெற்று வருவோம்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...