Wednesday 10 July 2019

அங்காளம்மன் வரலாறு

                                                           

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

   அங்காளம்மன் வரலாறு


அம்மன் ஆதிபராசக்தி ஆவாள். சதுர்யுகங்களுக்கும் முன்னால் இருந்த சிருஷ்டியின் ஆரம்பமான மணியுகத்திற்கும் முன்னரே சுயம்புவாய்த் தோன்றிய அன்னை, அந்த யுகத்தின் முதல் மூர்த்தியான சிவனின் பிரமஹத்தி தோஷத்தை நீக்கினாள் என்று சொல்லப் படுகிறது. அருள் மிகு அங்காளம்மன் முப்பெரும் சக்திகளான இச்சாசக்தி, கிரியா சக்தி, ஞான சக்தி என்ற மூன்று சக்திகளையும் தன்னிடம் கொண்டவளாக முப்பெருந்தேவியரின் அம்சமும் கொண்டவளாக, மும்மூர்த்திகளான சிவன், விஷ்ணு, பிரம்மா என்ற மும்மூர்த்திகளைத் தோற்றுவித்த மாபெரும் ஆதி பராசக்தியாக முப்பெரும் அண்டங்களிலும் நிறைந்தவளாகவும், காணப்படுகிறாள்.
முதல் ஐந்து உற்பவங்களிலும் தனித்த சக்தியாகவே விளங்கிய இவள் தக்ஷனின் யாகத்தில் விழுந்து உயிரை விட்ட தாக்ஷாயணியாக அவதரித்தபோது ஈசனாகிய சிவனின் சக்தியான சிவசக்தியின் பஞ்சமுகதத்துவமாகிய கோபம், சினம், சீற்றம், ஆங்காரம், ஆவேசம் மிகக் கொண்டு சத்யோஜாதம், வாமதேவம், ஈசானம், தத்புருஷம், அகோரம் என்ற ஐந்து முகங்களாகவும் ஒன்று திரண்டு உருவமற்றுச் சுயம்புவாக உருவானவள் அங்காளம்மன் ஆவாள். இவளே உருவமாக பருவதராஜன் என்ற ஹிமவானுக்கும், மேனைக்கும் புத்திரியாகப் பார்வதி என்ற பெயரில் அவதரித்தாள்.
தாக்ஷாயணி அவதாரத்தில் தக்ஷனின் யாக குண்டத்தில் விழுந்து உயிரை விடத் துணிந்த சக்தியின் உயிரற்ற உடலைத் தூக்கிக்கொண்டு விண்ணுக்கும், மண்ணுக்கும் அலைந்து திரிந்த ஈசனின் துயரத்தைக் கண்டு சகிக்கமாட்டாமல் மஹாவிஷ்ணு தன் சுதர்சன சக்கரத்தால் அவள் உடலைத் துண்டு துண்டுகளாக அறுந்து விழும்படிச் செய்தார். அப்படி அம்மனின் உடல் உறுப்புகள் விழுந்த இடங்கள் அனைத்துமே மகிமை பொருந்தியதோடு அல்லாமல் அம்பிகையில் உடலே பீஜாக்ஷரங்களால் ஆனது என்பதால் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒவ்வொரு சக்தி பீடமும் உருவானது. அங்காளியே இப்படிக் கோயில் கொண்டாள் என்றும் இந்த மேல் மலையனூரே ஆதி சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர். இவள் சண்டி, முண்டி, வீரி, வேதாளி, சாமுண்டி, பைரவி, பத்ரகாளி, எண்டோளி, தாரகாரி, அமைச்சி, அமைச்சாரி, பெரியாயி, ஆயி, மகாமாயி, அங்காயி, மாகாளி, திரிசூலி, காமாட்சி, மீனாக்ஷி, அருளாட்சி, அம்பிகை, விசாலாக்ஷி, அகிலாண்டேசுவரி என்ற பெயரில் எண்ணற்ற சக்திபீட தேவதையாக விளங்குகின்றாள்.
அம்பிகையின் உடலைத் தூக்கிக்கொண்டு சிவன் தாண்டவம் ஆடியபோது அறுந்து துண்டாக விழுந்த அம்பிகையின் வலக்கையின் புஜம் விழுந்த இடம் மேல் மலையனூர் என்று கூறப்படுகிறது. இதையே தண்டகாரண்யம் என்றும் சொல்கின்றனர். ஈசனைப் போலவே தனக்கும் ஐந்து முகங்கள் இருக்கிறதால் தானும் பெரியவன் என்று வீண் கர்வம் கொண்ட பிரம்மாவின் ஐந்தாவது சிரசை ஈசன் கிள்ளி எறிய, சிவனுக்கே பிரம்மஹத்தி தோஷம் பிடித்துக்கொண்டது. கிள்ளி எறிந்த சிரசின் மண்டை ஓடு ஈசன் கையை விட்டு அகலாமல் கையிலேயே ஒட்டிக்கொண்டது. ஒட்டிக்கொண்ட மண்டை ஓட்டில் அம்பிகையானவள் பிக்ஷை போட்டு அந்த பிக்ஷையை ஏற்கும்போது எந்த ஊரில் மண்டை ஓடு அகலுமோ அங்கே பிரம்மஹத்தி தோஷமும் நீங்கும் என்று புரிந்த ஈசன் ஒவ்வொரு ஊராக, ஒவ்வொரு சுடுகாட்டுக்கும் சென்று கபாலத்தில் பிக்ஷை வாங்கிச் சுற்றி அலைந்து திரிந்து கடைசியாக இந்த தண்டகாரண்யம் என்னும் மேல் மலையனூருக்கு வருகிறான்.
மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசை. அங்காளியானவள் அன்று தன் பூரண வலுவோடும், பலத்தோடும் இருப்பாள். அனைத்துக்கும் மூலாதார சக்தியான அங்காளி அன்று சுடுகாட்டில் ஆவிகள், ஆன்மாக்கள் போன்ற அனைவருக்கும் சூரை இடும் நாள் ஆகும். அதுவே மயானக்கொள்ளை என்றும் கூறப்படுகிறது. சூரை என்பது உணவு அளிப்பதையே இங்கே குறிக்கும். அப்போது உலகெங்கும் சுற்றி வந்த சிவன் அங்கே வந்து சேரும் தினம் மாசி மாதம் சிவராத்திரிக்கு மறுநாள் அமாவாசையாக இருக்கவே அன்று அங்காளியம்மன் சூரையின் முதல் கவளத்தை பிரம்ம கபாலத்தில் இட, பிரம்மஹத்திக்கு உணவு கிடைக்க அது சாப்பிடுகிறது. இரண்டாவது கவளமும் கபாலத்திலேயே அன்னை இடுகின்றாள். உணவின் ருசியில் தன்னை மறந்த பிரம்மஹத்தி அதையும் உண்ண, மூன்றாவது கவளத்தைச் சூரையாகச் சுடுகாட்டில் இறைக்கும்போது ஈசனைப் பற்றி இருந்த பிரம்ம ஹத்தி அந்தச் சூரையைச் சாப்பிட வேண்டி ஈசன் உடலில் இருந்து இறங்க, கையில் இருந்த கபாலத்தில் புகுந்து கொண்டு கீழே இறங்கியது. கீழே இறங்கிய கபாலம் சூரையைச் சாப்பிடும்போது சிவன் அங்கிருந்து தாண்டித் தாண்டி ஓடி, தாண்டவேஸ்வரர் ஆக அந்த ஊரிலேயே அமர்ந்தார். அதன் பின்னரே அவர் அங்கிருந்து சிதம்பரம் சென்று ஸ்படிக லிங்கமாக அமர்ந்தார, என அங்காளம்மன் கோயில் வரலாறு கூறுகிறது.
பிரம்ம கபாலத்தினுள் புகுந்த பிரம்மாவின் பிரம்மஹத்தியானது சாப்பிட்டு முடிந்ததும் ஈசனைப் பற்றிக்கொள்ளவேண்டும் என்று நினைத்து விஸ்வரூபம் எடுத்துக்கொண்டு விண்ணில் பறக்க ஆயத்தமானது. அங்காளி இதைக் கண்டு கோபம் கொண்டு அதற்கும் மேல் தானும் விஸ்வரூபம் எடுத்து பிரம்மாவின் கபாலத்தை பிரம்மஹத்தியோடு சேர்த்து அழுத்தித் தன் கால்களால் மிதித்தாள். அவள் கோபத்தைக் கண்டு மஹாவிஷ்ணு தலையை மிதித்த அங்காளியை அவ்வண்ணமே பூமிக்குள் தள்ளி மூடி மறைத்துவிட்டார். சற்று நேரத்தில் பூமிக்கு மேல் சுயம்புவாகப் புற்று உருவாகி அதில் ஒரு நாகமும் குடிகொண்டதாய்த் தலவரலாறு கூறுகிறது. இந்த நாகத்தின் படம் சுருங்காமலே பல யுகங்கள் இருந்ததாயும் கலி யுகத்திலே தேவர்கள் அனைவரும் தேர் உருவில் வந்து வணங்கவும் நாகத்தின் படம் சுருங்கி உள்ளே சென்று அங்காளம்மனாக அமர்ந்ததாகவும் வரலாறு கூறுகிறது.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...