Friday 12 July 2019

தர்ப்பை புல் பாய்...

                                                     

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

                                                   தர்ப்பை புல் பாய்
 ஏன் இந்து சமயத்தில் பூஜைகளில் பயன்படுத்துகிறார்கள் தெரியுமா?

தர்ப்பை புல், இந்த பெயரைக்கேட்டாலே, அநேகம் பேருக்கு இது என்ன புல் என்றே கேட்பர். இன்றைய நாகரிக உலகில் தர்ப்பை என்பது வெகு சிலர் மட்டுமே, அதுவும் சமயச்சடங்குகளில் மட்டுமே, பயன்படுத்தும் ஒரு விசயமாக ஆகிவிட்டது. விஷயம் அப்படியல்ல, நம் முன்னோர் நமக்கு அளித்த பல நடைமுறைகள் எல்லாம், நம் வாழ்வின் நலனுக்காக அமைந்தவையே, நாம் அவற்றின் காரணம் உணராமல், அவற்றை நவீன கண்டுபிடிப்புகளுடன் ஒப்பிட்டு அதன் எளிமையான பயன்பாட்டை புறக்கணிக்கிறோம், அவமதிக்கிறோம். அப்படி முன்னோர் வகுத்த வாழ்வியல் நெறியில், ஒரு சூட்சுமமாக செயலாற்றுவதுதான், தர்ப்பை புல்.
உலகம் தோன்றியபோதே தோன்றிய தொன்மையான புல், என தர்ப்பை புல்லை முன்னோர் போற்றுவர். சித்தர்கள் முதல், சாமானியர் வரை மலைகளுக்கு சென்றே, தவம் செய்ய விரும்பினர், ஏன் எனத் தெரியுமா?
கோவில்களில் தரிசனம் செய்ய செல்லும்போது, விநாயகர், மூலவர், அம்பாள் என பல சன்னதிகள் இருந்தாலும், நாம் கோவிலின் கொடி மரம் முன் மட்டுமே தரையில் விழுந்து வணங்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனரே, ஏன் எனத் தெரியுமா?
சிற்றறிவின் துணைகொண்டு, பேரறிவின் தத்துவத்தை அறிய முயல்வோம். தர்ப்பை புல்லில் தாமிர சத்து அதிக அளவில் நிரம்பி இருப்பதால், அது சிறந்த ஆற்றலை கடத்தும் சாதனமாக அறியப்படுகிறது. நவீன கால விஞ்ஞான வளர்ச்சிகளில் அலைக்கற்றை அலைவரிசைகளை இணைக்கும் தொடர்புகளில் நுண்ணிய ஆப்டிகல் ஃபைபர் கேபிள்களைவிட, தாமிர கேபிள்களே சிறந்த இணைய வேகத்திற்கு துணைபுரிகின்றன என்பதிலிருந்து, தாமிரத்தின் ஆற்றலை நாம் அறிய முடியும். இதைவிட, அனுபவரீதியில் தர்ப்பை புல்லின் மகத்துவம் அறிய வேண்டுமென்றால், கோவில்களில் நாம் தரிசனம் செய்துவிட்டு, கொடிமரம் அருகே விழுந்து வணங்குகிறோம் அல்லவா? அங்கு கொடிமரங்களில் கட்டப்பட்டிருக்கும் தர்ப்பை புல் மேலும் கொடிமரத்தின் அருகே வளர்ந்திருக்கும் தர்ப்பை புற்கள், அண்டத்தின் காந்த சக்தியை அவ்விடத்தில் ஒருமித்து வெளியிட்டு, தரையில் விழுந்து வணங்குபவர்களின் உடல் வழியே, அந்த ஆற்றலை அவர்களுக்குள் செலுத்துவதனாலே, உடல் மற்றும் மனதில் இனம்புரியாத நிம்மதி உணர்வை அடைவதை அவர்கள் உணரமுடியும்.
இது போலவே தர்ப்பை புல்லில் ஊறிய நீரும், தூய்மையையும் உடலுக்கு நலத்தையும் தருவதாகும். கோவில் கும்பாபிஷேகங்களில், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றியபின், அந்த நீரை, கூடியுள்ள மக்களின் மீது தெளிப்பதன் விளக்கமும் இதுதான். தர்ப்பை புல்லின் பலன்கள் நாணல் மற்றும் குசப்புல் என்று அழைக்கப்படும் தர்ப்பை புல், வடமொழியில் அம்ருத வீரியம் எனப்படுகிறது. தர்ப்பை புல் இட்ட நீரை வீடுகளில் தெளித்துவர, அங்கு எந்த தொற்று வியாதியும் அணுகாது. தர்ப்பை புல் வளரும் இடங்களில் உள்ள காற்றில் நடந்து செல்லும்போது, அவை நம் மீது பட்டு, உடல் நலம் சீராகும். தேவையற்ற தீமை பயக்கும் அண்டவெளி அலைகளை, தன் இருப்பிடத்திலிருந்து நீக்கும் ஆற்றல்மிக்கது. தர்ப்பை புல் காய்ந்தாலும், அதன் தன்மை மாறாது, உயிர்ப்புடன் இருக்கும் என்பதே, தர்ப்பை புல்லின் சிறப்பாகும். இந்து சமய சடங்குகளில், பிறப்பிலிருந்து இறப்பு வரை முக்கிய இடம் தர்ப்பை புல்லுக்கு உண்டு. தர்ப்பை புல் மனிதனுக்கும் இறைவனுக்கும் தொடர்பு தரும் சாதனமாக, வேதங்களின் மூலம் அறியப்படுகிறது. மனிதர்க்கு சுபத்தை, புனிதத்தை தரவல்லது. வலது கை மோதிர விரல் மூளையுடன் தொடர்புடையது. இந்த விரலில் தர்ப்பை புல்லை, பவித்ரம் எனும் மோதிரம் போல அணிந்துகொண்டு, ஹோம ஜப வேள்விகளில், சடங்குகளில் ஈடுபட, அண்டவெளியில் உள்ள ஆற்றலை மூளைக்கு கொண்டு சேர்க்கும் வல்லமைமிக்கது. இதை அணிவதன் மூலம் அனைத்துவகை பாவங்களும் விலகுவதாக, வேதங்கள் கூறுகின்றன.
மேலும், பவித்ரம் எனும் தர்ப்பை புல்லை, கை விரலில் அணியாமல் மேற்கொள்ளும் எந்த ஆன்மீக சடங்குகளும், மின்சாரம் இல்லாத கணினி போல, அவற்றால் எந்த பலன்களும் இல்லை என்று, இந்து மத சாத்திரங்கள் கூறுகின்றன.
நீர்த் தொட்டிகளில் தர்ப்பை :
தர்ப்பை புல்லை வீடுகளில் பயன்படுத்தும் நீர்த்தொட்டிகளில் இட்டுவைக்க, மழைக்கால பாதிப்புகள் நம்மை அணுகாது, நலமுடன் இருக்கலாம். உணவு பாத்திரங்களிலும் இட்டு வைக்கலாம். வீடுகளில், உயரமான இடங்களில், வாசல்களில் கொத்தாக தர்ப்பை புல்லை கட்டிவைக்க, எந்தவித தொற்று பாதிப்புகளும் அணுகாமல் இருக்கும். வியாதி உள்ளவர்கள் தங்குமிடங்களில் தர்ப்பை புல்லை வைக்க, வியாதிகள் பரவாது, நலம் பெறுவர். தர்ப்பை புல்லின் சாம்பலில் ஐம்பொன் சிலைகளை துடைத்து, பளபளப்பாக்க பயன்படுத்துகின்றனர். இதனால், சிலைகளில் உள்ள உலோகங்கள் தன்மை இழக்காமல், நீண்ட நாட்கள் ஒலி அலைகளை கடத்தும் தன்மையும், அவற்றின் மெருகும் குறையாமல் இருக்கும்.
தர்பாசனம் :
இது என்ன புதுவகை ஆசனம் என்று யோசிக்கிறீர்களா? தியானம் செய்ய வெறும் தரையில் அமரக்கூடாது, அப்படி அமர்ந்தால், அவை நம் தியானத்தில் சேமிக்கும் ஆற்றலை, உடலிலிருந்து தரைக்கு கடத்திவிடும். அந்த வகை தியானத்தில் யாதொரு பலனும் இல்லை, எனவேதான், பண்டைக்காலத்தில் தவம் செய்ய பெரியோர்கள் மான் தோல், புலித்தோல் மற்றும் தர்ப்பை புல்லை கொண்டு செய்த தர்பாசனம் பயன்படுத்தினர். விலங்குகளின் தோல்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துமாதலால், தர்பாசனம் எனும் தர்ப்பை புல்லைகொண்டு செய்த பாயையே, தியானம் செய்ய அமரும் பலகையாக பயன்படுத்தினர்.
தர்ப்பை புல்லில் ஏராளம் உள்ள தாமிரத்தாதுவின் வளத்தால், தியானங்கள் எளிதில் கைகூடி, எண்ணிய எண்ணங்களை, அபூர்வ திறமைகளை வளர்த்துக் கொள்ள, தர்ப்பையை ஒரு அதிமுக்கிய கருவியாகப் பயன்படுத்தி, வளம் பெற்றனர்.
தர்ப்பை பாய்:
தர்ப்பை புல்லில் உள்ள தாமிர சக்தியின் ஆற்றலை உடலில் பரவச் செய்ய, இந்த தர்ப்பை பாயை நாமும் வாங்கி, தியானம் செய்யலாம், தியானம் செய்ய தெரியாவிட்டால், அமைதியாக அமர்ந்து எதிர்கால சிந்தனைகளை, இலட்சியங்களை மனதில் எண்ண அலைகளாக ஓடவிட்டு, அதே சிந்தனையில் வேறு எந்த எண்ணங்களுக்கும் இடந்தராமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தர்ப்பை பாயில் அமர்ந்து சிந்தித்து வர, எண்ணிய எண்ணமெல்லாம், நலமுடன் விரைவில் நடந்தேற, வாய்ப்புகள் உண்டாகும். மேலும், தர்ப்பை பாயில் படுத்து உறங்கிவர, உடல் சூடு குறைந்து, மன உளைச்சல் போன்ற மன வியாதிகள் விலகி, நல்ல நிம்மதியான உறக்கம் உண்டாகும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...