Saturday 6 July 2019

பீமனின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.

                                   


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

 பீமனின் நம்பிக்கைக்கு கிடைத்த வெற்றி.
 நயவஞ்சகமாய் பேசி தர்மரை சூதாட்டத்திற்கு அழைத்தான் துரியோதனன். அதன் பிறகு நடந்ததெல்லாம் உங்களுக்குத் தெரிந்திருக்கும். சூதாட்டத்தில் துரியோதனனிடம் தோற்ற பாண்டவர்கள், வனவாசத்தை ஏற்று, காட்டில் வாழ்ந்து வந்தார்கள்.காட்டில் இருந்தாலும் குந்தி, பாஞ்சாலி, பஞ்சபாண்டவர்கள் அனைவரும் தினமும் பிரார்த்தனையில் ஈடுபட்டு வந்தார்கள். ஆனால் பிரார்த்தனைகளில் கலந்து கொள்ளாமல், பீமன் மட்டும் எப்போதும் தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்து வந்தான்.
தினமும் பிரார்த்தனைகளில் கலந்துக் கொள்ளாத பீமனை எண்ணி மனம் வருந்திய தர்மர், ஒரு நாள் பீமனைப் பார்த்து, "நீ பலசாலிதான், ஆனாலும் பிரார்த்தனையில் ஈடுபடும் எண்ணமே இல்லாமல் இருக்கிறாயே
உனக்கு ஏன் பக்தி இல்லாமல் போயிற்று!" என்று கோபமாக கேட்டும் விட்டார். ஆனால் அடுத்த நாளும் வழக்கம்போல தாமதமாகவே பீமன் படுக்கையிலிருந்து எழுந்திருக்க ஆரம்பித்தான்.

ஒரு முறை கிருஷ்ணரை விருந்துக்கு அழைக்க எண்ணி, "நகுலனை, கிருஷ்ணரிடம் அனுப்பி வைத்தார் தர்மர். நகுலன் திரும்பி வந்து "நாளைக்கு கிருஷ்ணருக்கு வேறு வேலை இருக்கிறதாம். வேறு ஒருநாள் தான் அவரால் வரமுடியுமாம்" என்று கூறினான். "நீங்களெல்லாம் கூப்பிட்டால் கிருஷ்ணன் வரமாட்டார். நான் போய் அழைத்து வருகிறேன் பாருங்கள்" என்று கூறியவாறு அர்ஜுனன் நம்பிக்கையுடன் எழுந்து சென்றான். அங்கு சென்ற அர்ஜுனனிடமும் "என்ன செய்வது, நாளைக்கு எனக்கு வேறு வேலை இருக்கிறதே" என்றார் கிருஷ்ணர்.
ஏமாற்றத்துடன் அர்ஜுனன் திரும்பினான். அர்ஜுனன் போய் அழைத்தும், கிருஷ்ணர் வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டாரே.. என்று எல்லொரும் கவலையாக இருந்தனர். வழக்கம் போல, தாமதமாகவே படுக்கையிலிருந்து எழுந்து வந்த பீமன், "ஏன் எல்லோரும் என்னவோ போல இருக்கிறீர்கள்?" என்று வினவினான். அப்பொழுது தருமர், "ஒன்றுமில்லை, கிருஷ்ணரை இன்று விருந்துக்கு அழைத்திருந்தோம், அவருக்கு வேறு வேலை இருப்பதாகக் கூறி மறுத்துவிட்டார்" என்றார்.
"இவ்வளவுதானா.., நான் போய் கிருஷ்ணரை அழைத்து வருகிறேன்" என்றான் பீமன். "நான் போய் அழைத்து வரமுடியாத கிருஷ்ணர்.. நீ கூப்பிட்டால் வந்து விடுவாரா?" என்று அர்ஜுனன் கிண்டல் செய்தான். பீமன் தனது கதையை தூக்கிக் கொண்டு புறப்பட்டான். போகும்போது "பாஞ்சாலி... நீ விருந்து தயார் செய். கிருஷ்ணனுக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை" என்று கூறிவிட்டுச் சென்றான்.
சிறிது தூரம் போனபின், தன் கதையை வானத்தை நோக்கி வீசி எறிந்தான்! "கிருஷ்ணா! நீ விருந்துக்கு வருகிறாயா இல்லையா? வராவிட்டால் நான் வீசிய கதை என் தலைமேல் விழுந்து, நான் என் உயிரை விட்டு விடுவேன்" என்று உரக்கக் கத்தினான்.
உடனடியாக கிருஷ்ணர் தோன்றி, பீமனின் தலைக்கு மேலாக விழுந்து கொண்டிருந்த கதையை சட்டென்று பிடித்துக் கொண்டார்! பீமனின் அன்பு அழைப்பினை ஏற்று, அவனோடு விருந்திற்கு வந்தார். பீமனோடு கிருஷ்ணர் வருவதைக் கண்டதும், கேலி செய்தவர்கள் எல்லாம் தலை குனிந்தனர்.
யார் தினந்தோறும் கடவுளை வழிபடுகிறார்கள் என்பது முக்கியமில்லை. நமது பக்தியில் உண்மை இருக்க வேண்டும். பீமன், கிருஷ்ணரை அழைக்கச் செல்லும் போதே நம்பிக்கையுடன் பாஞ்சாலியிடம், 'நீ விருந்து தயார் செய்.. கிருஷ்ணருக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு எடுத்து வை' என்று சொல்லி புறப்படுகிறான். உண்மையான பக்தி என்பது முழுமையான நம்பிக்கையை ஆதாரமாகக் கொண்டது. பக்தியில் மட்டும் இல்லாமல் நீங்கள் செய்யும் எல்லா காரியங்களிலும் முழு நம்பிக்கையோடு செயலாற்றுங்கள்! நம்பிக்கை தான் வெற்றியின் முதல் படியாக இருக்கிறது.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...