Wednesday 22 March 2017

பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பது என்ன?

          பெற்றோர் மற்றும் பிள்ளைகள் ஒருவருக்கொருவர்          எதிர்பார்ப்பது என்ன?


எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

பெற்றோர் பிள்ளைகளிடம் எதிர்பார்ப்பது: மகனே, மகளே! உங்களை உலகிற்குத் தந்த எங்களின் பெருமையை, மதிப்பை எப்போதும் மதித்து நடந்து கொள்ளுங்கள். பெரியவர்கள் அனுபவசாலிகள். ஆகவே உங்களது நன்மைக்காகச் சில அறிவுரைகளைச் சொல்வார்கள் என்பதை நம்புங்கள்.
* ஆடி ஓடி விளையாடுங்கள். ஆனால் உங்களுக்கு அதிலேயே பொழுது கழிந்துவிடக் கூடாது என்பதால் நாங்கள் அவ்வப்போது குறுக்கிடுவோம். பொறுத்துக் கொள்ளுங்கள்!
* செய், சரி, நல்லது என்பதைச் சொல்ல நாங்கள் தயார். இடையிலேயே சில வேண்டாம், கூடாது என்று வருவதெல்லாம் இயல்புதான். பெரிதுபடுத்தாதீர்கள்.
* எல்லா இடத்திற்கும் உங்களை அழைத்துச் செல்ல இயலாமல் போகலாம். அதற்காக வருத்தப்பட வேண்டாமே!
*நீங்கள் தனிமையை விரும்பலாம். ஆனால் உங்கள் தனிமை உங்களுக்கு நன்மை தராவிட்டால் என்ன செய்வது? அதனால்தான் நாங்கள் பக்கத்தில் துணைக்கு நிற்கிறோம். எங்கள் கவலை எங்களுக்கு.
*நீங்கள் சொல்லும் பதிலை நாங்கள் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறோம். நம்புங்கள். வேறு எங்கு பார்த்தாலும் கவனம் எங்கள் பிள்ளைகளான உங்கள் மீதுதான்.
*மொபைலில் நீங்கள் நீண்ட நேரம் பேசுவது தவறல்லதான். ஆனால் காலத்தின், பணத்தின் அருமையை யோசியுங்கள்.
*நல்ல பொருளைத் தொலைத்து விட்டு வந்தால் கொஞ்சவா முடியும்? திட்டுவோம். அடுத்து அது மாதிரி நிகழாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றுதான். பாசமில்லாத கொடியவர்கள் அல்லவே நாங்கள்?
* உங்களுக்குப் பிடித்தமான உடைகளை வாங்கித் தருகிறோம். ஆனால் அது நம் குடும்ப கவுரவத்திற்கு ஏற்றதாக இருக்குமா என்று யோசியுங்கள்.
* உங்களை அரவணைப்பதைவிட, உங்கள் இனிய பேச்சைக் கேட்பதை விடவா உலகில் எங்களுக்குப் பேரின்பம் உள்ளது? அந்த வாய்ப்பை அவ்வப்போது தாருங்கள்.
*நீங்கள் சினிமாவில் வரும் ஆரவார இசையை ரசிக்கலாம். அதே நேரம் பெரியவர்களான நாங்கள் ரசிக்கும் பக்திப் பாடல்களையும் கேட்க மறுக்காதீர்கள். கேலி செய்யாதீர்கள்.
*உங்களுக்கு உயர்ந்த லட்சியம் காட்டவும் நற்பண்புகளை உணர்த்தவும் நாங்கள் முன்மாதிரியாக இருக்கிறோம் என்பதை மறவாதீர்கள்.
* கண்மணிகளே! டி.வி. பாருங்கள். தடுக்கவில்லை. மனதைக் கெடுத்துவிடும் சிலவற்றை நீங்கள் பார்த்துவிடக் கூடாதே என்ற பயம் எங்களுக்கு உள்ளது. அதனால்தான் சதா டி.வி பார்க்காதே என எச்சரிக்கிறோம், நச்சரிக்கவில்லை.
*உங்கள் நன்மைக்காக உங்களிடம் சுறுசுறுப்பு, வேலையில் திறமை, சுகாதாரமான பழக்கங்கள் இவற்றை நாங்கள் எதிர்பார்ப்பது தவறா?
* நாங்கள் வேலையாக இருக்கும்போது நீங்கள் அருகில் வந்து இதை அடுக்கவா, இதை வெட்டித்தரவா, அதைக் கொண்டு போய் அங்கு வைக்கவா என்று கேட்டு சிறு உதவி செய்து உங்கள் அன்பை இப்படியும் வெளிப்படுத்தலாமே!
* உங்கள் ஆற்றலைப் புரிந்து கொள்ளுமாறு உங்களுக்கு எந்தத் துறையில் ஆர்வம் உள்ளது என எங்களிடம் கூறுங்கள்.
* வாய்ப்புகளையும் வசதிகளையும் நாங்கள் செய்து தருகிறோம். சாதனைகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்!
* படிப்பின் சுமை, வீட்டுச்சுமை அதிகம் உள்ளதால் உங்களை நாங்கள் வீட்டு வேலை செய்ய அதிகம் ஏவுவதில்லை. உங்களைப் புறக்கணிக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.
* நீங்கள் பெரியவர்களான எங்களைக் கேலி செய்வதாகவோ, அவமானப்படுத்துவதாகவோ தோன்றும்படிகூட நடந்து விடாதீர்கள். எங்களால் அவற்றைக் தாங்கிக் கொள்ள முடியாது.
*எங்கள் கவலைகளை எல்லாம் நாங்கள் உங்களிடம் சொல்வதில்லை. பிஞ்சுகளான உங்களிடம் பிரச்னை, கவலை என்று திணித்து வருத்தப்பட வைக்க நாங்கள் விரும்பவில்லை. இது பெருந்தன்மை என்று புரிந்து கொள்ளுங்கள்.

பிள்ளைகள் பெற்றோரிடம் எதிர்பார்ப்பது : * அம்மா அப்பாக்களே, உங்கள் பிள்ளையாகிய நான் சொல்லும் சில நல்ல விஷயங்களைக் காதுகொடுத்துக் கேளுங்கள். நான் ஏதாவது நல்ல வேலையைச் செய்தால் என்னைத் தவறாமல் பாராட்டுங்கள்; மனம் திறந்து ஊக்குவியுங்கள்.
* உங்களுக்குச் சிலவற்றைக் கற்றுத் தர என்னையும் அனுமதியுங்கள். நீங்களே என்றும் கற்றுத் தருபவராக இருக்காதீர்கள்.
* பொது இடங்களில் என் மீது உங்களின் அதிகப் பாசத்தைக் கொட்டி வெளிப்படுத்தாதீர்கள். அப்போது நான் நெளிவேன்.
* உங்கள் இளம்வயதில் நீங்கள் செய்ததைப் போன்றே என்னையும் சில சோதனைகளை மேற்கொள்ளவிடுங்கள்.
* நான் அதிகம் விரும்பும் விளையாட்டுக்கள், கொஞ்சம் ஊர் சுற்றுவது போன்றவற்றை இழக்கச் செய்யாதீர்கள்.
* என் தனிமைக்கும் சிறிது மதிப்பளியுங்கள்.
* நான் ஏதாவது கேட்டுவிட்டால் உடனே, இல்லை அல்லது உனக்கு அது வேண்டாம் என்பதைவிட, சரி, செய், நான் பார்த்துக் கொள்கிறேன் போன்ற வார்த்தைகளை அதிகம் கூறுங்கள்.
* சிறிய காரியங்களுக்காக நீங்கள் செல்லும் போது, என்னையும் உடன் அழைத்துச் செல்லுங்கள். எனக்கும் அவற்றைக் கற்றுக் கொடுங்கள்.
* நான் பார்க்க வேண்டிய தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நிர்ணயத்துச் சொல்லுங்கள். ஒரேடியாக டி.வி.யைப் பார்க்காதே என்று சொல்லிவிடாதீர்கள்.
* வாழ்நாள் முழுவதற்கும் நிலைக்கும் திறனை அல்லது சிறப்பு ஆற்றலை நான் பெற உதவுங்கள்.
* அம்மாவே, என்னிடம் உங்களுக்குள்ள எதிர்பார்ப்புகளுக்கு என்னிடம் காரணம் கூறி, என் வளர்ச்சியில் உங்களோடு என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.
* குடும்ப வேலைகள் முன்னிட்டு நான் எல்லோரிடமும் நெருக்கமான உணர்வை ஏற்படுத்திக் கொள்ள உதவுங்கள்.
* நல்ல விஷயங்களை எனக்கு விளக்கிக் கூற நேரம் ஒதுக்குங்கள். விளக்கினால் மட்டும் போதாது, நான் அதைப் புரிந்து கொண்டேனா என என்னை விசாரியுங்கள்.
* சிறிது வளர்ந்ததும் சில சமயம் நான் விசித்திரமாக உணர்கிறேன். எனவே நான் விசித்திரமாக நடந்து கொள்வதை மனதில் கொள்ளாதீர்கள்.
* சில நேரங்களில் என்னை விட்டு விலகியிருங்கள். எப்போதும் என்னைப் பொத்திப் பொத்தி வைக்காதீர்கள்.
* சில சமயங்களில் நான் நடந்து கொள்வது உங்களைக் கேலி செய்வது போல் இருக்கலாம். என்னை அறியாமலே நடந்துவிடுகிறது. இதை ஒரு பொருட்டாக எண்ணாதீர்கள்.
* குடும்பப் பிரச்னைகள் அல்லது மற்ற பிரச்னைகள் பற்றியும், பணப் பிரச்னை, வீட்டுப் பிரச்னை போன்றவற்றைப் பற்றியும் என்னிடம் சொல்லுங்கள். இவற்றை என்னிடம் கூறாமல் தவிர்த்தால் பிறகு தானாகத் தெரியவரும்போது என் மனம் மிகவும் புண்படும்.
* பல விளையாட்டுகளைக் குடும்பத்துடன் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கும். அதற்கு நேரம் ஒதுக்குங்கள்.
* நீங்கள் என்னிடம் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுங்கள்.
* நான் தவறு செய்யும்போது, தவறைப் புரிய வைத்து மன்னிப்பு கேட்கப் பழக்குங்கள்.
* உணவு விஷயத்தில் நான் கேட்டுக் கொண்டிருப்பதைத் தொடர்ந்து கொடுக்காதீர்கள்.
* நீங்கள் கேள்வி கேட்கும்பொழுது, நான் சொல்லும் பதிலை உன்னிப்பாகக் கேளுங்கள்.
* என்னிடம் நீங்கள் காட்டும் அன்பை வெளிப்படுத்தும் சிறந்த வழி நீங்கள் என்னைக் கவனித்துக் கேட்பதுதான்.
* எனக்காகக் கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டிருங்கள். அது எனக்குப் பாதுகாப்பு உணர்வைத் தரும்.                                                                                                                                                                                                                                                                                                                                                                        
1. பெற்றோர் தங்கள் பிள்ளைகளின் பழக்க வழக்கங்களை கூர்ந்து கவனித்து அதிலிருந்து அவர்களின் குறைகளை பக்குவமாய் பேசி தீர்க்க வேண்டும்


2. குழந்தைகளின் இயலாமையை கேலி பேசுவதோ பிறரிடம் கிண்டல் செய்வதோ கூடாது, மாறாக அவர்களுக்கு நடப்பை பெற எளிய வழிகளை சொல்லித் தரவேண்டும்.
3. சில குழந்தைகள் கூச்ச சுபாவம் உடையவர்களாக இருப்பார்கள் அவர்களுக்கு தைரியத்தையும் ,மற்றம் குழந்தைகளுடன் பழகும் சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
4. அவர்களுக்கிருக்கும் நட்பு வட்டாரத்தில் மேலும் அவர்களுக்கு ஆர்வத்தை உண்டாக்கி விட வேண்டும்.
5. தான் ஒரு நல்ல மனம் படைத்த பெண் /ஆண் என்ற உணர்வை ஏற்படுத்தும் வகையில் பெற்றோரின் அணுகுமுறை இருக்க வேண்டும் .அந்த உணர்வை மற்றவர்களும் அறியும் வண்ணம் அவர்கள் நடத்தை இருக்க வேண்டும் என்று எடுத்து சொல்ல வேண்டும் 
.
6. மற்றவர்களோடு நாம் அன்போடு பழகினால் அவர்களும் நம்மிடம் அன்பு செலுத்துவார்கள் என்ற எளிய வழியைச் சொல்லி தர வேண்டும்
.
7. பிறர் எதிர் பார்க்கும் முன்னரே மற்றவர்களுக்கு உதவி செய்யும் உயர்ந்த மனப்பான்மையுடன் வளர வேண்டும் என்று சொல்லவேண்டும்.

8. குழந்தைகள் மற்றவர்களைப் பற்றி புறம் பேசினால் அதில் ஆர்வம் காட்டாமல் தவிர்க்க வேண்டும் , மேலும் அந்த பழக்கம் தேவையற்றது என்றும் அந்த பழக்கம் நட்புறவுகளை துண்டித்து விடும் என்று சுட்டிக் காட்ட வேண்டும் 
.
9. மற்றவர்களின் கருத்தையும் மதிக்க வேண்டும், குறைந்த பட்சம் அவர்கள் சொல்லுவதை பொறுமையுடன் கேட்க வேண்டும் என்றும் இவ்வாறன குணம் இருந்தால் நிச்சயம் நட்பு வளரும் என்று வலியுறுத்த வேண்டும்.

10. தான் பிடிச்ச முயலுக்கு மூன்று கால் என்ற பிடிவாதத்தில் இருந்தால்,நட்புறவுகளைத் தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சிறு பிராயத்திலிருந்தே அவர்களுக்கு சகிப்புத் தன்மை, பொறுமை போன்ற குணங்களை பழக்க வேண்டும்

11. மற்றவர்களோடு அன்போடு பழகவும் யுத்திகளை கற்றுத் தர வேண்டும் அதற்கு மூலக்கூறாக, பிறருடன் பேசும் போது எப்போதும் புன்சிரிப்போடு பேச வேண்டும் என்று பழக்க வேண்டும்

12 முக்கியமாக முன்பே குறிப்பிட்டது போல், அடிக்கடி ஏற்படுத்தும் இட மாற்றங்கள் குழந்தைகளின் மன நிலையை பெரிதும் பாதிக்கும் என்பதையும் பெற்றோர் உணர வேண்டும் காலங்கடந்து உணர்வதால் பயனில்லை ஏனெனில் அவர்கள் உணரும் போது அக்குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகி விட்டிருப்பார்கள் .ஆகவே பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் குணாதிசயங்களை சிறு பிராயத்திலேயே இனங்கண்டு அவர்களுக்கு வேண்டிய உற்சாகத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், நட்பில்லா வாழ்க்கை உப்பில்லா பண்டத்தைப் போன்று சுவையற்ரதாகிவிடும் என்று நட்பின் அவசியத்தை வலியுறுத்தி அதற்கு பெற்றோரும் உற்றத்துணையாய் இருந்து வருவதும் பெற்றோரின் கடமையே

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...