குடும்ப பிரச்சனைகளை தீர்த்து வைக்கும் கொண்டத்துக்காளியம்மன் !
அருள்மிகு கொண்டத்துக்காளியம்மன் திருக்கோவில்

கொண்டத்துக்காளியம்மன் கோயம்புத்தூரில் உள்ள பெருமாநல்லூரில் அருள்பாலித்து வருகிறாள். இப்பகுதி வயல்வெளிகள் நிறைந்த பழமையான பகுதியாக இருந்ததால் இவ்வூர் தொடக்கத்தில் 'பெரும்பழனம்" என்றும் 'பெரும்பழனாபுரி" என்றும் வழங்கப்பட்டு, காலப்போக்கில் பெருமாநல்லூர் என்ற பெயர் பெற்றது.

இங்கு வீற்றிருக்கும் கொண்டத்துக்காளியம்மன் ஏழு பேராக அவதரித்த அம்பாள் சகோதரிகளில், ஒருவராக, எட்டு கைகளில் ஆயுதங்களையும், கல்வியையும் ஏந்தி, லட்சுமி, காளி, சரஸ்வதி என மூன்று அன்னையர்களின் அம்சமாக அருள்பாலிக்கிறாள்.
மூலவர் - கொண்டத்துக்காளியம்மன் (குண்டத்தம்மன்)
பழமை - 1000-2000 வருடங்களுக்கு முன்
புராண பெயர் - பெரும்பழனம்

சேரமன்னர்கள் அப்பகுதியை ஆண்டபோது, போரில் வெற்றி மட்டுமே கிடைக்க வேண்டும் என்பதற்காக தங்கள் குருநாதரிடம் ஆலோசனை கேட்டனர். அதற்கு குருநாதர், போரில் வெல்ல படைபலம் மட்டுமின்றி காளியின் அருளும் வேண்டும் எனக் கூறினார். எனவே, அவளுக்கு கோவில் அமைத்து களப்பலி கொடுத்து போருக்குச் சென்றால் எளிதில் வெல்லலாம் என்றார்.

அதன்படி மன்னர்கள் அந்த இடத்தில் காளிதேவிக்கு கோவில் ஒன்றைக் கட்டினர். பின்பு அண்டை நாடுகள் மீது படையெடுத்துச் செல்லும் முன்பு காளியை வணங்கி பெரிய குண்டம் ஒன்றில் வேள்வி வளர்த்து அதில் வீரர் ஒருவரை பலி கொடுத்து விட்டுச் செல்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

மன்னர் காலத்திற்கு பின்னர், மக்கள் தொடர்ந்து கொண்டத்துக்காளி அம்மனை வழிபட்டு குண்டம் இறங்கி வந்தனர். அப்போது ஆங்கிலேயர்கள், குண்டம் இறங்கும் திருவிழாவிற்கு தடை விதித்தனர். ஆனால், தடையை மீறி பக்தர்கள் குண்டம் இறங்கச் சென்றபோது, அதில் அரக்கை ஊற்றி பக்தர்கள் இறங்கமுடியாதபடி செய்தார்கள்.

இதனால் மனம் கலங்கிய பக்தர்கள் வருந்தியபடியே அம்பாளைத் துதித்து, பார்த்துக்கொண்டிருந்தனர். திடீரென பன்றி புகுந்து குண்டத்தில் இறங்கி ஓடியதை கண்ட வெள்ளைக்காரத் துறைக்கு கண்பார்வை மங்கியது. பன்றி வடிவில் வந்தது அம்பிகை என்பதை உணர்ந்த அவர், பக்தர்கள் குண்டம் இறங்க அனுமதித்தார். அதன்பின், அவருக்கு பார்வை கிடைத்தது.

இத்தல விநாயகர் பால விநாயகர் என்ற திருநாமத்துடன் அருள்பாலிக்கிறார். இங்கு நைவேத்யமாக சர்க்கரைப் பொங்கல் படைக்கின்றனர். சுற்றுப்பிரகாரத்தில் சப்தகன்னியர், குதிரைகளுடன் முனியப்பன், கருப்பராயர் ஆகியோர் அருள்புரிகின்றனர்.

அம்பாள் சன்னதிக்கு இடப்புறம் முத்துக்குமரன், தனது கழுத்தில் சொருகிய வாளை கையில் பிடித்தபடி, அருட்காட்சி தருவது வேறு தலங்களில் இல்லாத இத்தல சிறப்பாகும்.

குடும்ப பிரச்சனை தீர, குழந்தை பாக்கியம் கிடைக்க, விவசாயம் செழிக்க, தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் தீர இங்கு வேண்டிக்கொள்கிறார்கள்.

குண்டம் இறங்குதல், அக்னிச்சட்டி, பால்குடம், அங்கபிரதட்சணம், குண்டத்தில் உப்பு, மிளகு, கரும்பு போடுதல் போன்றவற்றை பக்தர்கள் இங்கு நேர்த்திக்கடனாக செய்கின்றனர். தோல் நோய் தீர்ந்திட காளிக்குரிய சிங்க வாகனத்தின் மீது வெற்றிலை, பாக்கு வைத்து வணங்கப்படுகிறது.
No comments:
Post a Comment