Saturday, 24 May 2025

திருமூலர் தரும் ரகசிய கணக்கு:


மூச்சை வெளிவிடும்போது தானாகவே விருட்டென்று வெளியேற முயலும். அவ்வாறு வெளியேற விடாமல், மெதுவாக ஊர்ந்து செல்லுமாறு வெளிவிட வேண்டும். அவ்வாறு வெளிவிட வேண்டுமானால் பெருமூளைப் புறணியின் கட்டளை வேண்டும். தானாக நிகழ்கிற செயலைக்கூட மூளையின் கட்டளைக்கு உட்படுத்தும் போது, சோர்ந்திருக்கும் மூளை செயல்பாட்டுக்கு வருவது இந்த முந்நிலை மூச்சுயிர்ப்பின் சிறப்பு.
இங்கு கணக்கிட்டுச் சூத்திரம் தருகிறார் என்குரு திருமூலர்:
ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்;
ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்;
ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்;
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.
- திருமந்திரம்:568
மூச்சை ஏற்றும்போது, இடது நாசியின் வழியாகப் பதினாறு மாத்திரை அளவுக்கு ஏற்றலாம். புதிய காற்றை உள்விடாமலும் உள்வந்த காற்றை வெளிவிடாமலும் ஆறுதலாக அறுபத்துநாலு மாத்திரை அளவுக்கு நிறுத்திக்கொள்ளலாம். முப்பத்திரண்டு மாத்திரை அளவுக்கு வலது நாசியின்வழியாக மெதுவாக ஊரவைத்து வெளியேற்றலாம். அளவு மாறினால் சிக்கல்.
அடுத்ததாக குதிரைகள் செய்யும் கும்பகத்தை பற்றி சொல்கிறார்...
குதிரைகள் தாவி ஓடுவதற்குக் கூடுதல் ஆற்றல் வேண்டுமென்பதால், கூடுதல் மூச்சை உள்ளிழுக்கின்றன. ஒரு பாய்ச்சலுக்கு ஒரு மூச்சு. பாயும்முன் உள்ளிழுத்த காற்றைப் பாயும்போது உள்நிறுத்துகின்றன; மேலெழுந்த கால்கள் கீழேபடும்வரை தம்மை அறியாமலே கும்பகம் செய்கின்றன. மேலெழுந்த கால்கள் கீழே படும்போதுதான் மூச்சை வெளிவிடுகின்றன. உள்ளிழுத்த அதே அளவு காற்று வெளிவிடப்படுகிறது. ஆற்றலின் தேவை மிகும்போது, உள்ளிழுத்தல், உள்நிறுத்தல், வெளியேற்றலின் அளவும் கூடும்.
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம்; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும்; சோம்பு தவிர்ப்பிக்கும்;
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோருக்கே.
- திருமந்திரம்:566
பறவையைக் காட்டிலும் சிறப்பாகப் பறக்கும் குதிரை. அதை வசப்படுத்தி ஏறிக்கொண்டால், அதைவிடக் களிப்புத் தருவது கள்ளும்கூட இல்லை; சோம்பல் நீங்கி உங்களில் ஒரு துள்ளல் வரும்; உள்ளதைச் சொன்னோம்; உணர்வுடையோர் கேளுங்கள் என்று சொன்னதோடு விடாமல்,
ஈர்ஆறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல்,
நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே
- திருமந்திரம்:722
என்று ஆணையிட்டும் சொல்கிறார். நான்கு கால் குதிரையே மூச்சைப் பிடித்து விண்ணில் எழுகிறது. உங்களுக்குக் கிடைத்திருப்பது பன்னிரண்டு கால் குதிரை அல்லவோ? அந்தக் குதிரையைக் கட்டியாள உங்களால் முடியுமென்றால், ஏது இறப்பு? நீராலும், நிலத்தாலும் பிற பூதங்களாலும் யாக்கப்பட்ட உங்கள் உடம்பு அழியாது.
பன்னிரண்டு கால் புரவி என்பது பன்னிரண்டு விரற்கடை அளவுக்குப் பாயும் மூச்சுக் குதிரை.
இந்தச் சூத்திரத்தைப் பிடித்துக்கொள்ளும் பத்திரகிரியார்.....
பன்னிரண்டு கால்புரவி
பாய்ந்துசில்லம் தப்பாமல்
பின்னிரண்டு சங்கிலிக்குள்
பிணைப்பதுஇனி எக்காலம்?
- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்:141

என்று ஏங்குகிறார். பன்னிரண்டு கால் குதிரை பாய்வதில் சிக்கலில்லை; பாயும் வேகத்தில் சிதறிச் சில்லாகிவிடாமல் கணக்காகப் பாயப் பழக்கவேண்டாமா? இடம் வா என்றால் இடம் வரவும், வலம் வா என்றால் வலம் வரவும், நில்லென்றால் நிற்கவும் வேண்டாமா? குதிரை பழக்கிக் கடிவாளம் போடுவது எக்காலம்?

No comments:

Post a Comment

கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக

 இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப...