Sunday 30 June 2019

ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும்!

எங்களின் ஆன்லைன் சேவை - http://astroav.in/

ஜென்ம நட்ச்சத்திர மகிமையும் , ஜென்ம நட்சத்திரத்தில் செய்யவேண்டியவையும்!

  ஆலயத்துக்குச் சென்று இறைவழிபாடு செய்வதற்கு எத்தனையோ ஆகம கோட்பாடுகள், ஐதீக விதிமுறைகள் நடைமுறையில் உள்ளன. அதில் ஒன்று தினமும் ஆலயத்துக்கு செல்ல வேண்டும் என்பதாகும். தினமும் காலை, மாலை இரு நேரமும் ஆலயத்துக்கு செல்பவர்கள் முழுமையான இறையருள் இன்பத்தை பெற முடியும்.

யார் ஒருவர் தினமும் ஆலயத்துக்கு செல்கிறாரோ, அவருக்கு ஆலயத்தில் உள்ள தெய்வீக அலை சக்தி நிரம்ப கிடைக்கும். இதை கருத்தில் கொண்டே, ‘ஆலயம் தொழுவது சாலவும் நன்று’ என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். ஆனால் நாம் எல்லாரும் தினமும் ஆலயத்துக்கு செல்கிறோமா? இல்லை. நம்மில் 95 சதவீதம் பேர் தினமும் ஆலயத்துக்கு செல்வதில்லை.

இந்துக்களில் பெரும் பாலானவர்கள் குறிப்பிட்ட விழாக்கள் சமயங்களில் மட்டுமே ஆலயம் பக்கம் எட்டி பார்க்கிறார்கள். இப்படி ஆடிக்கு ஒரு நாள், அமாவாசைக்கு ஒருநாள் என்று ஆலயத்துக்கு செல்வதால் எந்த பிரயோஜனமும் இல்லை. தினமும் ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்ய வேண்டும். ஆனால் தற்போதைய எந்திரமயமான வாழ்க்கையில் எல்லாராலும் தினமும் ஆலயம் செல்ல முடிவதில்லை.அத்தகைய சூழலில் இருப்பவர்கள் குறைந்த பட்சம் வாரம் ஒரு தடவையாவது ஆலயம் செல்ல வேண்டும். நாம் ஆலயத்துக்கு செல்லாத ஒவ்வொரு நாளையும் நமக்கு ஏற்பட்ட இழப்பாகத்தான் கருத வேண்டும்.

இந்த இழப்பை எப்படி சரி செய்வது?

அதற்கும் பல வழிகள் உள்ளன.

அதில் முதன்மையானதாக கருதப்படுவது ஜென்ம நட்சத்திர வழிபாடாகும். இது நம் எல்லோராலும் மிக, மிக எளிதாக கடைபிடிக்கக் கூடியது. அதோடு மிகுந்த பலன் தரக்கூடியது.

நாம்   சாஸ்திர சம்பிரதாயத்தை பின்பற்றுபவர்கள். ஒவ்வொரு சாஸ்திர சம்பிரதாயத்தின் பின்னும் உள்ள காரணங்கள் அர்த்தம் பொதிந்தவை.

அந்த வகையில் ஒருவரது ஜாதகத்தை எடுத்துக்கொண்டால், லக்கினம் ஆன்மாவையும், சந்திரன் நின்ற ராசி எனப்படும் ராசி, இந்த உடலையும் குறிக்கும், சந்திரனானது ஒரு ராசியில், ஏதோ ஒரு நட்ச்சத்திர பாதத்தில் இருக்கும், அதுவே எமது பிறந்த நட்ச்சத்திரம் ஆகும்.

பிறந்த நட்ச்சத்திரம் , அந்த நட்ச்சத்திரத்துக்கு அதிபதி, இந்த உடலை இயக்குபவர் . எமது கர்ம வினைகளுக்கேற்ப இந்த உடல் அனுபவிக்கும் நன்மைகளுக்கு காரணமானவர்கள் இந்த ஜென்ம நடச்சத்திரம் , அதன் அதிபதி.

இதனாலேயே, குறிப்பாக ஆலய வழிபாட்டுக்கு மிக, மிக உகந்த தினமாக ஜென்ம நட்சத்திரதினம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்சத்திரம் அன்று கோவிலுக்குச் சென்று அர்ச்சனைகள் செய்து வழிபட வேண்டும் என்று சொல்லி வைத்தார்கள். அவ்வாறு வழிபடுவதால் நம் துன்பங்களின் தாக்கத்தை பெருமளவு குறைத்துக் கொள்ள முடியும்.

அனைத்து வித தோஷங்களுக்கும் பரிகாரம் செய்ய உகந்த நாட்கள் ஒவ்வொரு மாதத்திலும் வரும் ஜென்ம நட்ச்சத்திரங்கள் .

ஜென்ம நட்சத்திர தினத்தன்று செய்யப்படும் வழிபாட்டால், எந்த ஒரு தெய்வமும் அருள் செய்தே தீர வேண்டும் என்பது பிரபஞ்ச இறை சட்டமாகும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டில் உள்ள ஆன்மீக ரகசியமே இது தான்.எனவே ஜென்ம நட்சத்திர வழிபாடு வாய்ப்பை ஒரு போதும் தவற விட்டு விடாதீர்கள்.

குறைந்தபட்சம் ஆலயத்தில் ஒரு அகல் விளக்காவது ஏற்றி வழிபாடு செய்யுங்கள். ஜென்ம நட்சத்திரத் தினத்தன்று எந்த ஆலயத்துக்கு சென்று, உங்கள் ஜாதகம் மூலம், (தீமைகள் அகல, தோஷம் விலக ) எந்த கடவுளை வழிபட வேண்டும் என்று தெரிந்து வைத்து கொண்டு வழிபாடு செய்தால் கர்ம வினைகள் தீரும் என்பது குறிபிடத்தக்கது.

ஜென்ம நட்சத்திர பூஜை முடிந்ததும், ஏழை - எளியவர்களுக்கு தானங்கள் செய்தால், அவரது பித்ருக்களின் மனம் மகிழ்ந்து முழுமையான ஆசி கிடைக்கும்.

ஜென்ம நட்சத்திர வழிபாட்டை ஒருவர் தொடர்ந்து செய்து வந்தால்  . தடைபடும் செயல்கள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும்.

ஜென்ம நட்சத்திரத்தினத்தன்று அவரவர் தகுதிக்கு ஏற்ப ஆலயங்களில் மூலவருக்கு அபிஷேக ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் செய்வது நல்லது. வசதி இருப்பவர்கள் ஜென்ம நட்சத்திரம் அன்று ஹோம வழிபாடு செய்தால் கூடுதல் பலனை பெற முடியும்.ஜென்ம நட்சத்திர வழிபாட்டுக்கு அத்தகைய சக்தி உள்ளது.

ஜென்ம நடச்சத்திரத்தின் மகிமைக்கு உதாரணமாக இந்த கதையையும் கூறுகிறேன்.

வினை காரணமாக சிவபெருமானிடம் இருந்து பிரிந்து மாங்காட்டில் தவம் இருந்த பார்வதி தேவி, இறுதியில் தனது ஜென்ம நட்சத்திர தினத்தன்று மணலால் சிவலிங்கம் செய்து வழிபட்ட பிறகே கணவருடன் சேர்ந்து வாழும் நிலை உண்டானது. இதன் மூலம் ஜென்ம நட்சத்திரத்தின் மகிமையை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் ஜென்ம நட்சத்திரம் எந்த தேதியில் வருகிறது என்பதை காலண்டரில் குறித்து வைத்துக் கொண்டு அன்றைய தினம் எவ்வளவு வேலை இருந்தாலும் சிறிது நேரம் ஒதுக்கி ஆலயத்துக்கு சென்று தனது ஜென்ம நட்சத்திரத்தை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். அது ஜென்ம நட்சத்திரத்தை பலம் பொருந்தியதாக மாற்றும்.

நிறைய பேர் இதை அறியாமல் ஆங்கில தேதியை அடிப்படையாகக் கொண்டு பிறந்த தினத்தன்று ஆலயத்துக்கு சென்று வழிபாடு செய்கிறார்கள். இதில் எந்த பலனும் கிடைக்காது.

அதிலும் குறிப்பாக ஜென்ம நட்சத்திரத்தின் அதி தெய்வம் (அதிதேவதை)                                                                                                                                 எது என்பதை அறிந்து வழிபட்டால் 100-க்கு 100 வெற்றியைப் பெறலாம்.

பிறந்த நாளில் ஆத்ம திருப்திக்கு கோவில் சென்றாலும் , அர்ச்சனை செய்யும் பொது கூட, பிறந்த நட்ச்சத்திரத்தை கூறி அர்ச்சனை செய்கிறோமே தவிர பிறந்தநாளை யாரும் கூறுவதில்லை. பிறந்த நாளை பெரிய பார்டி கொண்டாடுவது ஆங்கில கலாச்சாரமே, இதில் எந்த வித ஜோதிட அனுகூலமோ ரகசியமோ இல்லை.உங்கள் நட்சத்திரத்திற்கான அதிதேவதை 

அசுவினி   சரஸ்வதி

பரணி  துர்கை

கார்த்திகை   அக்னி, ஸ்ரீ முருகப் பெருமான்

ரோகிணி    பிரம்மா ,ஸ்ரீ கிருஷ்ணன்

மிருகசீரிடம்   சந்திரன் , ஸ்ரீ சந்திர சூடேஸ்வரர்

திருவாதிரை    சிவபெருமான்

புனர்பூசம்   அதிதி ,ஸ்ரீ ராமர்

பூசம்   பிரகஸ்பதி  ஸ்ரீ தட்சிணாமூர்த்தி (குரு)

ஆயில்யம்   ஆதிசேஷன்

மகம்   பித்ருக்கள்,சுக்கிரன்  ஸ்ரீ சூரிய பகவான்

பூரம்   பார்வதி ,ஸ்ரீ ஆண்டாள்

உத்திரம்   சூரியன் ,ஸ்ரீ மகாலக்ஷ்மி

அஸ்தம்   சாஸ்தா,ஸ்ரீ காயத்திரி தேவி

சித்திரை   விஷ்வகர்மா ,ஸ்ரீ சக்கரத்தாழ்வார்

சுவாதி   வாயு ,ஸ்ரீ நரசிம்மமூர்த்தி

விசாகம்   முருகன்

அனுசம்   ஶ்ரீலஷ்மி, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணர்

கேட்டை   இந்திரன் ,ஸ்ரீ வராஹ பெருமாள்

மூலம்    நிருதி , ஸ்ரீ ஆஞ்சனேயர்

பூராடம்   வருணன் , ஸ்ரீ ஜம்புகேஸ்வரர்

உத்திராடம்   கணபதி

திருவோணம்   விஷ்ணு ,ஸ்ரீ ஹயக்கிரீவர்

அவிட்டம்  வசுக்கள்,ஸ்ரீ அனந்தசயனப் பெருமாள்

சதயம்   எமன் ,ஸ்ரீ மிருத்யுஞ்ஜேஸ்வரர்

பூரட்டாதி  குபேரன்,ஸ்ரீ ஏகபாதர்

உத்திரட்டாதி    காமதேனு,ஸ்ரீ மகா ஈஸ்வரர்

ரேவதி  சனிபகவான்,ஸ்ரீ அரங்கநாதன்

இப்போது நீங்கள் வணங்க வேண்டிய தெய்வம் அறிந்துகொண்டீர்கள். இனியென்ன... அந்தத் தெய்வத்தை ஒருபோதும் விட்டுவிடாதீர்கள். நினைக்க மறக்காதீர்கள். வழிபட மறக்காதீர்கள்.உங்கள் நட்சத்திரத்திற்கு   நட்சத்திர தேவதை தொடர்பான ஆலயங்களுக்கு சென்று வர 100 சதவிகித வெற்றியை அடைவீர்கள்

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...