Wednesday 11 October 2017

ஆன்மீக கேள்வி -பதில்!!! 1)

ஆன்மீக கேள்வி -பதில்!!! 1)


1)
வீட்டில் கணபதி ஹோமத்தை நடத்துவதாக இருந்தால் எப்போது செய்வது நல்லது ?
பிரம்ம முகூர்த்தம் என்னும் அதிகாலை 4.30 முதல் 6 மணிக்குள் நடத்துவது நல்லது. விநாயகருக்குரிய சதுர்த்தி திதி, அஸ்தம் நட்சத்திர நாளில் நடத்துவது இன்னும் சிறப்பு.
2)
கிரகப்பிரவேசத்தின் போது முதலில் பசுமாட்டை வீட்டிற்கு அழைத்து வருவது ஏன்?
பசு லட்சுமியின் அம்சம். தர்ம தேவதையின் அடையாளம். பால் தருவதால் "கோமாதா' என்று தாயாகப் போற்றுவர். வீட்டில் லட்சுமி கடாட்சம் நிலைக்கவும், தர்மம் தழைக்கவும் பசுவை வீட்டுக்குள் அழைத்துச் செல்கிறார்கள்.
3)
மற்றவர் ஏற்றிய அகல் விளக்குகளில் நாம் தீபம் ஏற்றலாமா?
யார் ஏற்றினாலும் தீபம் ஒன்று தான். சுவாமி சந்நிதியில் தீபம் ஏற்றினால் நாம் செய்த பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைக்கிறது. இது விளக்கேற்றினால் கிடைக்கும் பலன் தானே தவிர எரிகிற விளக்கில் ஒன்றுமில்லை. ஒருவர்
ஏற்றிய விளக்கில் நாம் மீண்டும் விளக்கேற்றினால் அவரது பாவம் நமக்கு வந்துவிடாது. நமது புண்ணியமும் அவருக்குப் போய் விடாது. சந்நிதியில் விளக்கேற்றுகிறோம் என்ற தூய சிந்தனையுடன் மட்டும் தீபம் ஏற்றுங்கள். அதிகமாக தீக்குச்சிகளை உபயோகிப்பதால் குச்சிகள் குவியும் தொந்தரவும் இருக்காது.
4)
மதுரையில் உள்ள சிவாலயத்தை மீனாட்சி அம்மன் கோயில் என்று குறிப்பிடுகிறோம். சுவாமி பெயரால் வழங்கப்படாதது ஏன்?
திருமணம் செய்து கொண்டு கணவன் வீட்டிற்குச் சென்றிருக்கும் நம் பெண்ணைப் பார்க்கச் செல்கிறோம். அப்பொழுது ""என் பெண் வீட்டிற்குச் செல்கிறேன்,'' என்று தான் கூறுவோமே தவிர, ""மாப்பிள்ளை வீட்டிற்கு செல்கிறேன்,'' என்று கூறுவதில்லையே! மதுரையை ஆண்ட மலையத்வஜ பாண்டியனுக்கு மகளாக அவதரித்து மதுரையின் அரசியாக மகுடம் சூடி, திக்விஜயமாக கைலாயத்துக்கே சென்றவள் மீனாட்சி. அந்த வீரத்திருமகளை திருமணம் செய்தவர் சிவன். எனவே, அம்பாளுக்கு இங்கே முக்கியத்துவம் தரப்பட்டிருக்கிறது.
5)
பிரதோஷம் என்பதன் பொருள் என்ன? அதன் சரியான கால அளவு எவ்வளவு?
""ப்ரளீயந்தே அஸ்வின் தோஷா'' என்பது பிரதோஷம் என்ற சொல்லின் வடமொழி இலக்கணம். அதாவது அனைத்து தோஷங்களும் ஒடுங்கும் காலம் என்று பொருள். பகல் முழுவதும் மனிதர்கள் எவ்வளவோ செயல்களைச் செய்கிறார்கள். அவற்றில் நல்லவை, கெட்டவை கலந்தே இருக்கின்றன. அறியாமல் செய்த தீமைகளைப் பொறுத்துக் கொள்ளுதலும், நல்ல செயல்களுக்கு இறைவன் அருள் செய்தலும் இந்த பிரதோஷ காலத்தில் தான். தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான ஒன்றரை மணி நேரம் பிரதோஷ காலமாகும். இந்த நேரத்தில் சிவபெருமானை தரிசிப்பது மிக விசேஷமானது. இதற்கு "நித்யபிரதோஷம்' என்று பெயர். வளர்பிறை திரயோதசிக்கு பக்ஷ பிரதோஷம், தேய்பிறை திரயோதசிக்கு மாத பிரதோஷம், தேய்பிறை திரயோதசி சனிக்கிழமை ஆகியவை கூடியிருந்தால் மகாபிரதோஷம் என்று பெயர்.
6)
குலதெய்வம் எது என்று தெரியவில்லை. எந்தக் கடவுளை குலதெய்வமாக ஏற்கலாம்?
ஒவ்வொரு குடும்பத்திற்கும் பரம்பரை பரம்பரையாக குல தெய்வ வழிபாடு என்று ஒரு தெய்வத்தை வழக்கில் கொண்டிருப்பார்கள். அது மிக அவசியமானது. அலட்சியப்படுத்தக் கூடாத விஷயம். இந்த வழிபாட்டில், அவரவர்கள் சில விதி முறைகளைப் பின்பற்றி வந்துள்ளனர். நம் சந்ததியைக் காப்பாற்றுவது குல தெய்வ வழிபாடு தான். குலதெய்வம் எது என்று தெரியவில்லையென்றால், உங்களுக்கு விருப்பமான தெய்வங்களின் பெயர்களை விநாயகர் முதல் அனுமன் வரை சீட்டுகளில் எழுதுங்கள். அருகில் உள்ள கோயிலில் சுவாமிக்கு அர்ச்சனை செய்த பிறகு எழுதி வைத்திருக்கும் சீட்டுகளை சுவாமி பாதத்தில் வைத்து, ஏதாவது ஒன்றினை எடுக்கச் சொல்லி, அதில் உள்ள தெய்வத்தை குலதெய்வமாக ஏற்று வழிபாட்டைத் துவக்குங்கள்.
7)
அமாவாசை, திதி நாளில் வாசலில் கோலம் போடக் கூடாது என்பதற்கு காரணம் என்ன?
அமாவாசை, சிராத்தம் போன்ற நாட்கள் ""பிதுர் தினம்'' என்றழைக்கப்படுகின்றன. அன்று பிதுர் காரியத்தை முடித்து விட்டுத்தான் தெய்வ வழிபாடே செய்யப்பட வேண்டும். மங்களகரமான விஷயங்களில் பிதுர்களுக்கு விருப்பம் கிடையாது. எனவே, முன்னோர் காரியங்களில் கோலம் போடக்கூடாது.
8)
வீட்டில் ஆண்டுக்கொரு முறை கணபதி ஹோமம் செய்ய நினைக்கிறேன். என் எண்ணம் சரியானது தானா?
மிக சரியானது. நீங்கள் ஹோமம் செய்வதோடு பிறரையும் செய்யச் சொல்லுங்கள். ஹோமப்புகையும் மந்திரங்களும் உங்கள் வீட்டை மட்டுமல்ல! உங்கள் ஊரையே காப்பாற்றும். இப்படி எல்லோரும் செய்து வந்தால் காற்றில் மாசு கலப்பது தவிர்க்கப்படும். நன்கு மழை பெய்யும். இயற்கை சீற்றம் ஏற்படாது. ஓசோன் மண்டலம் பாதுகாக்கப்படும். கடந்த சில ஆண்டுக்கு முன் நிகழ்ந்த போபால் விஷவாயு, தினமும் ஹோமம் செய்த ஒருவர் வீட்டில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
9)
கருட புராணத்தை வீட்டில் படிக்கக் கூடாது என்கிறார்களே ஏன்?
ஒருவர் இறந்த பிறகு அவரது ஆவியின் பயணம் பற்றிக் கூறும் நூல் கருட புராணம். இறப்பதற்கு முன் செய்த பாவ புண்ணிய பலனை உயிர் அனுபவிப்பதை அது விளக்குகிறது. இறந்தவரின் பிள்ளைகள் செய்யும் கர்மாக்களினால் துன்பத்திலிருந்து விடுபட்டு பிதுர் உலகம் செல்வதையும் கூறுகிறது. இதனால் சாதாரண நாட்களில் இதனைப் படிக்க கூடாது என்பர். ஆனால், இந்நூலில் உள்ள விஷயங்களை தெரிந்து கொண்டால் நம்மிடம் தவறுகள் குறையும். புத்தகம் என்பது மற்றவர் படிக்கத் தான். இறந்த வீட்டில் பத்து நாளுக்குள், இந்நூலை ஒருவர் படிக்க மற்றவர்கள் கேட்பர். கோயில், மடங்களில் தகுதியான ஒருவர் படிக்க மற்றவர் கேட்கலாம்.
10)
மாலையில் தீபமேற்றி வழிபட்ட பின், கோயிலுக்குச் சென்று தீபமேற்றி வழிபடலாமா?
சந்தேகமே வேண்டாம். தாராளமாக வீட்டில் தீபமேற்றிய பின் கோயிலிலும் தீபமேற்றி வழிபடுங்கள். அதனால், உங்களுக்குப் புண்ணியம் பன்மடங்கு சேரும்.

No comments:

Post a Comment

கடவுள் படையலை சாப்பிடுவாரா?

 கடவுள் படையலை சாப்பிடுவாரா? ரொம்ப நாளா நம்மளுக்கு விடை தெரியாத ஒரு கேள்வியிது சரியான விளக்கத்தை படித்து தெளிந்தேன் நீங்களும் படித்து அறிவீ...