அகந்தையை அருளாத ஆண்டாள்"
“ரொம்ப சாமர்த்தியம்தான் ,”.
“முதலில் உன் மாமனார் மாமியாரை வேண்டிக்கொண்டு அப்புறம் என்னிடம் வருவதைச் சொன்னேன்.” என்றான் கண்ணன்
கோதை கூறினாள் “ நான் உன் பள்ளியறையில் முதலில் உன் பெற்றோரைத்த்தான் கண்டேன். உடனே உன் தந்தையின் தாராளகுணம் நினைவுக்கு வந்தது. அவர் அம்பரம் , தண்ணீர் , சோறு, அதாவது உடுக்க உடை, பருக நீர், உண்ண உணவு, வாரி வாரித்தந்தவர் ஆயிற்றே. அதனால்தானே வேதாந்த தேசிகர் , யாதவாப்யுதயம் என்னும் காவியத்தில், நீ பிறந்தவுடன் நந்தகோபர் கொடையில் கல்பதருவையும் மிஞ்சிவிட்டார் என்றார். ?” என்றாள் ஆண்டாள்.
“ ஆம். யாதவாப்யுதயம் என் சரிதத்தை மிகவும் அழகாகக் கூறுகிறது. தேசிகரின் அறிவார்ந்த புலமைக்கு ஈடு இணை உண்டோ?”
“அடுத்தது உன் அன்னையைக் கண்டேன். கொம்பனார்க்கெல்லாம்கொழுந்து என்றதன் மூலம் அவளுடைய கொடிபோன்ற மேனி படைத்த் எல்லா மாதரிலும் சிறந்தவள் என்றேன். மேலும் அவள் யாதவகுல விளக்குஅல்லவா. “
“உண்ணும் சோறு, பருகும் நீர் எல்லாம் கண்ணன் என்று நாங்கள் உணர உன்னை எங்களுக்கு அளித்தனால் நந்தகோபர் எம்பெருமான் ஆகிறார்,. யசோதை எம்பெருமாட்டி. மேலும் யச: என்றால் பிரம்மம் என்கிறது வேதம் அந்த பிரம்மத்தை ஒரு குழந்தையாக உலகுக்கு தந்தவள் , யச: ததாதி இதி யசோதா.” என்ற ஆண்டாளிடம் கண்ணன் கேட்டான்.
“அத்புதமான விளக்கம் . அது சரி. நீ படுத்திருக்கும் வரிசைக்க்ரமத்தில் எழுப்பி வந்தவள் எனக்கு முன்னாள் படுத்திருந்த அண்ணனை விட்டுவிட்டு என்னை முதலில் எழுப்பக் காரணம் ?
“ ஆண்டாள் கூறினாள். “ அதுவா, பலராமன் காலில் இருந்த செம்பொற் கழலைப்பார்த்து நீ என்று நினைத்தேன் . அதனால் உன்னை முதலில் எழுப்ப முயற்சித்தேன். பிறகுதான் உண்மை தெரிந்தது அதனால் அவனை மகிழ்விக்க உம்பியும் நீயும் உறங்கேலாரெம்பாவாய் என்றேன். , உன் சயனமாகிய ஆதிசேஷன் ஆயிற்றே, அவன் எழுந்தால் நீ எழுந்துதானே ஆகவேண்டும்?”
“ நல்ல சாதுர்யம் “ என்ற கண்ணன் “அன்னை அருகில் இங்கு சாதுவாகப் படுத்து உறங்கும் என்னை உலகளந்தானாக பாவிக்க ஏதும் விசேஷ காரணம் உண்டோ” என்றான்.
“நல்ல சாதுப்பிள்ளை “ என்ற ஆண்டாள்,
‘அம்பரம் அதாவது ஆகாயத்தை ஊடறுத்து, பிளந்து ஓங்கி உலகளந்தவன் நீ. உனக்கு உறங்குவதற்கு ஏது இடம் என்று பொருள். “ என்றாள் கோதை.
“ எல்லோரையும் திருப்திப் படுத்தி விட்டாய்,” என்ற கண்ணனைப் பார்த்து கோதை கூறினாள்.
“ நாங்கள் எல்லோரிடமும் உன்னையே காண்கிறோம் அல்லவா? நந்த கோபாலன் என்றது உன்னைத்தான். நந்தம் அல்லது ஆனந்தம் என்பது நீதான், கோ அதாவது, பூமி, வாக்கு, ஆவினம், இந்த்ரியங்கள் முதலிய எல்லாவற்றிற்கும் பாலன், காப்பாற்றுகிறவன் நீதானே.” அம்பரம், வஸ்திரம் திரௌபதிக்குக் கொடுத்தாய் . பாரத யுத்தத்தில் தேரோட்டியாகி களைத்த குதிரைகளுக்கு உன் கையால் நீர் கொடுத்தாய்., சோறு அதாவது உணவு, வற்றின அக்ஷயபாத்திரத்தில் இருந்து துர்வாசர் முதலியோருக்கு உணவளித்தாய்.” என்றாள் கோதை. “ நன்று. நீ செம்பொற்கழல் என்று சொன்னது என் அண்ணனின் காலில் இருந்த வீரக்கழல்.,அவன் வீரச்செயல்களை அறிவாயல்லவா? அவமதித்த கௌரவருக்கு புத்தி புகட்ட தன கோடரியால் ஹஸ்தினாபுரத்தையே கங்கையில் தள்ளவில்லையா? ஒருசமயம் யமுனையை தான் இருக்கும் இடத்திற்கு இழுத்தானே.” என்றான் கண்ணன்.
“ அது மட்டுமா? ஆதிசேஷனான அவன் ஏழு குழந்தைகளை இழந்த பின்னர் உன் தாயான தேவகியின் கர்ப்பத்தில் புகுந்து சர்ப்ப தோஷ நிவாரணம் செய்பவன் போல அதை சுத்தமாக்கி உன் பிறப்புக்கு வழிவகுத்தவன் அல்லவா? “என்றாள் கோதை.
“ நீ சொல்வது உண்மை, சென்றால் குடையாம், இருந்தால் சிங்காசனமாம் என்று எங்கும் என்னைத் தொடர்பவன் அல்லவா? “ என்றான் கண்ணன்.
“சேஷனாகியவனும், சேஷியாகிய நீயும் ஒன்றே. வால்மீகி ஆதிசேஷனின் அவதாரமான லக்ஷ்மணனை ராமனாகிய உன் உடலுக்கு வெளியே உள்ள உயிர், பஹிர்கதபிராண: என்றல்லவா கூறுகிறார்?’ என்ற கோதையிடம் கண்ணன் கூறினான்.
“எம்பெருமான் நந்த கோபாலன் என்பது, எம்பெருமானார் என்று அழைக்கப்பட்ட ராமானுஜரை நினைவூட்டுகிறது. எல்லோருக்கும் பக்தியை ஊட்டி ஆனந்தத்தை அளித்தததனால் அவரும் நந்த கோபாலனாகிறார். “ என்ற கண்ணிடம் ஆண்டாள் கூறினாள்.
“ உன் அருளால் வரும் எல்லா சொற்களும் எந்த காலத்திற்கும் ஓட்டிவரும் அல்லவா? அம்பரம் என்பது உன் அருள். தண்ணீர் அதனால் பெருகும் பக்தி. சோறு என்றால் பகவத்கைங்கர்யம். இது எல்லாம் ஆசார்யன் அருளால் வருவது.”
“மேலும் அவர் என் பிரியமான அண்ணன் ஆயிற்றே. நான் நேர்ந்து கொண்ட நூறு தடாவில் வெண்ணையும் அக்கறை வடிசிலும் திருமாலிருன்சொலையில் உள்ள உனக்குக் கொடுப்பேன் என்றதை நிறைவேற்றினவர் அல்லவா !” என்றாள் ஆண்டாள்.
“ஆம். அடுத்த பாசுரம் திருப்பாவை ஜீயர் என்று அழைக்கப்பட்ட அவருக்கு உகந்ததாயிற்றே!” என்றான் கண்ணன்.

No comments:
Post a Comment