Thursday, 12 June 2025

கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக




 இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று

நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப்பில் வைத்த கொஞ்ச நேரத்தில் கேஸ் நின்று விட்டது.
உடனே புது சிலிண்டரை மாத்தினேன்.
வைத்த உடனே கேஸ் லீக் ஆகியது.
உடனே எல்லாவற்றையும் நிறுத்தி விட்டு யோசிக்க, அப்போது நேரமோ ஒன்பது மணி.
மெக்கானிக்கை எங்கே தேடுவது?,
உடனடியாக கூகுளில் தேட எமர்ஜென்சி கேஸ் லீக்கேஜ் என்றால் 1906 என்ற எண்ணை தொடர்பு கொள்ள வேண்டும் என அறிந்து அதற்கு ஃபோன் செய்தேன்.
ஒரு அதிகாரி பேசினார்.
கேஸ் புக் செய்யும் பதிவு செய்த ஃபோன் நம்பரை கேட்டார்.
நான் நம்பரை சொன்னவுடன் எனது பெயர் முகவரி மற்றும் டீலர் பெயர் இவற்றை கூறி நம்முடன் சரிபார்த்து விட்டு சற்று நேரத்தில் ஆள் வருவார் எனவும் சிலிண்டரில் பிரச்னை என்றால் எதுவும் பணம் தரத் தேவையில்லை , ரெகுலேட்டர் ட்யூப் இவற்றில் பழுது இருந்தால் அதற்கான பணம் தர வேண்டும் என்றார்.
சில நொடிகளில் எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
அதில் புகார் எண், மெக்கானிக்கின் தொடர்பு எண், வேலை முடிந்ததும் அவரிடம் கூற வேண்டிய ஒடிபி எண் ஆகியவை இருந்தது.
பத்து நிமிடத்தில் மெக்கானிக் என்னை தொடர்பு கொண்டு வழியை கேட்டு கொண்டார்.
வீட்டுக்கு வந்து சிலிண்டரை சோதித்து வாஷர் இல்லை எனவும் கூறி புதிய வாஷரையும் மாற்றி விட்டு அடுப்பை பற்றவைத்து சோதித்து எல்லாம் நன்றாக உள்ளது.
இனி பயமில்லை என்று சொல்லி அந்த ஒடிபி எண்ணை கேட்டு உடனே அதை வாட்ஸ்அப்பில் அனுப்பி வைத்தார்.
இதற்காக நான் பணம் தந்தபோது அதை வேண்டாம் என மறுத்து விட்டார்.
அடுத்த ஜந்து நிமிடத்தில் எனக்கு ஃபோன் செய்து தங்களது புகார் சரியாகி விட்டதா என்று விசாரித்தனர்.
எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
இந்த சேவை பற்றி எனக்கு இதுவரை தெரியாது. அற்புதமான சேவை.
இது நம்மில் பலருக்கு தெரிந்து இருந்தாலும் தெரியாதவர்களுக்காக!!....!

Saturday, 24 May 2025

திருமூலர் தரும் ரகசிய கணக்கு:


மூச்சை வெளிவிடும்போது தானாகவே விருட்டென்று வெளியேற முயலும். அவ்வாறு வெளியேற விடாமல், மெதுவாக ஊர்ந்து செல்லுமாறு வெளிவிட வேண்டும். அவ்வாறு வெளிவிட வேண்டுமானால் பெருமூளைப் புறணியின் கட்டளை வேண்டும். தானாக நிகழ்கிற செயலைக்கூட மூளையின் கட்டளைக்கு உட்படுத்தும் போது, சோர்ந்திருக்கும் மூளை செயல்பாட்டுக்கு வருவது இந்த முந்நிலை மூச்சுயிர்ப்பின் சிறப்பு.
இங்கு கணக்கிட்டுச் சூத்திரம் தருகிறார் என்குரு திருமூலர்:
ஏறுதல் பூரகம், ஈர்எட்டு வாமத்தால்;
ஆறுதல் கும்பம், அறுபத்து நாலதில்;
ஊறுதல் முப்பத்து இரண்டுஅதி ரேசகம்;
மாறுதல் ஒன்றின்கண் வஞ்சகம் ஆமே.
- திருமந்திரம்:568
மூச்சை ஏற்றும்போது, இடது நாசியின் வழியாகப் பதினாறு மாத்திரை அளவுக்கு ஏற்றலாம். புதிய காற்றை உள்விடாமலும் உள்வந்த காற்றை வெளிவிடாமலும் ஆறுதலாக அறுபத்துநாலு மாத்திரை அளவுக்கு நிறுத்திக்கொள்ளலாம். முப்பத்திரண்டு மாத்திரை அளவுக்கு வலது நாசியின்வழியாக மெதுவாக ஊரவைத்து வெளியேற்றலாம். அளவு மாறினால் சிக்கல்.
அடுத்ததாக குதிரைகள் செய்யும் கும்பகத்தை பற்றி சொல்கிறார்...
குதிரைகள் தாவி ஓடுவதற்குக் கூடுதல் ஆற்றல் வேண்டுமென்பதால், கூடுதல் மூச்சை உள்ளிழுக்கின்றன. ஒரு பாய்ச்சலுக்கு ஒரு மூச்சு. பாயும்முன் உள்ளிழுத்த காற்றைப் பாயும்போது உள்நிறுத்துகின்றன; மேலெழுந்த கால்கள் கீழேபடும்வரை தம்மை அறியாமலே கும்பகம் செய்கின்றன. மேலெழுந்த கால்கள் கீழே படும்போதுதான் மூச்சை வெளிவிடுகின்றன. உள்ளிழுத்த அதே அளவு காற்று வெளிவிடப்படுகிறது. ஆற்றலின் தேவை மிகும்போது, உள்ளிழுத்தல், உள்நிறுத்தல், வெளியேற்றலின் அளவும் கூடும்.
புள்ளினும் மிக்க புரவியை மேற்கொண்டால்
கள்உண்ண வேண்டாம்; தானே களிதரும்;
துள்ளி நடப்பிக்கும்; சோம்பு தவிர்ப்பிக்கும்;
உள்ளது சொன்னோம் உணர்வு உடையோருக்கே.
- திருமந்திரம்:566
பறவையைக் காட்டிலும் சிறப்பாகப் பறக்கும் குதிரை. அதை வசப்படுத்தி ஏறிக்கொண்டால், அதைவிடக் களிப்புத் தருவது கள்ளும்கூட இல்லை; சோம்பல் நீங்கி உங்களில் ஒரு துள்ளல் வரும்; உள்ளதைச் சொன்னோம்; உணர்வுடையோர் கேளுங்கள் என்று சொன்னதோடு விடாமல்,
ஈர்ஆறு கால்கொண்டு எழுந்த புரவியைப்
பேராமல் கட்டிப் பெரிதுஉண்ண வல்லீரேல்,
நீர் ஆயிரமும் நிலம்ஆயிரத்து ஆண்டும்
பேராது காயம் பிரான்நந்தி ஆணையே
- திருமந்திரம்:722
என்று ஆணையிட்டும் சொல்கிறார். நான்கு கால் குதிரையே மூச்சைப் பிடித்து விண்ணில் எழுகிறது. உங்களுக்குக் கிடைத்திருப்பது பன்னிரண்டு கால் குதிரை அல்லவோ? அந்தக் குதிரையைக் கட்டியாள உங்களால் முடியுமென்றால், ஏது இறப்பு? நீராலும், நிலத்தாலும் பிற பூதங்களாலும் யாக்கப்பட்ட உங்கள் உடம்பு அழியாது.
பன்னிரண்டு கால் புரவி என்பது பன்னிரண்டு விரற்கடை அளவுக்குப் பாயும் மூச்சுக் குதிரை.
இந்தச் சூத்திரத்தைப் பிடித்துக்கொள்ளும் பத்திரகிரியார்.....
பன்னிரண்டு கால்புரவி
பாய்ந்துசில்லம் தப்பாமல்
பின்னிரண்டு சங்கிலிக்குள்
பிணைப்பதுஇனி எக்காலம்?
- பத்திரகிரியார் மெய்ஞ்ஞானப் புலம்பல்:141

என்று ஏங்குகிறார். பன்னிரண்டு கால் குதிரை பாய்வதில் சிக்கலில்லை; பாயும் வேகத்தில் சிதறிச் சில்லாகிவிடாமல் கணக்காகப் பாயப் பழக்கவேண்டாமா? இடம் வா என்றால் இடம் வரவும், வலம் வா என்றால் வலம் வரவும், நில்லென்றால் நிற்கவும் வேண்டாமா? குதிரை பழக்கிக் கடிவாளம் போடுவது எக்காலம்?

Saturday, 17 May 2025

27 நட்சத்திர கோயில்கள் –

 27 நட்சத்திர கோயில்கள் – ஜாதக தோஷ நிவாரணத்திற்கான தெய்வீக வழிகாட்டி!


பிறப்பின் நேரத்தில் சந்திரன் எந்த நட்சத்திரத்தில் இருந்ததோ அதுவே ஜாதக நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் ஒரு மனிதனின் மனநிலை, உடல்நிலை, துல்லியமான சிந்தனை மற்றும் வாழ்க்கையின் பல துறைகளையும் தீர்மானிக்கிறது. இந்த நட்சத்திரத்தின் விளைவாக சிலருக்கு நல்ல எதிர்வினை கிடைக்கும், சிலருக்கு அதிர்ஷ்டம் தாமதமாகவே வரும். ஆனால், இதற்கு தீர்வாகவே ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஏற்ற 27 ஆலயங்களை நம் முன்னோர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை நட்சத்திர பரிகார ஸ்தலங்கள் என அழைக்கப்படுகின்றன.
இந்த கோயில்களில் நடைபெறும் வழிபாடுகள், ஹோமங்கள், அர்ச்சனைகள் மற்றும் அபிஷேகங்கள் மூலம், நட்சத்திரத்தின் ஒழுக்குகளும், தோஷங்களும் நீங்கிச் சாந்தி, செழிப்பு, ஆரோக்கியம், குழந்தைப் பேறு மற்றும் தொழில் வளர்ச்சி உண்டாகும்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு கோயில் – ஒரு பரிகார வழிகாட்டி
1. #அசுவினி – பிள்ளையார்பட்டி மாருத்தீஸ்வரர் கோயில், சிவகங்கை
இந்த நட்சத்திரம் கொண்டவர்கள், உடல்நல பிரச்சினைகள், வாகன விபத்துகள், மற்றும் சிந்தனையிலான குழப்பங்களை அனுபவிப்பவர்கள். இவர்கள் மாருத்தீஸ்வரரை வழிபட்டால் உடல்நலம் மேம்படும்.
2. #பரணி – அக்னீஸ்வரர் கோயில், கும்பகோணம்
பரணி நட்சத்திரம் பெரும் தீவிர சக்தி கொண்டது. அக்னீஸ்வரர் வழிபாடு, ராகு, கேது மற்றும் சுக்கிர தோஷங்களை நீக்குகிறது.
3. #கார்த்திகை – கார்த்திகேயபெருமான் கோயில், சுவாமிமலை
முருகன் வழிபாடு, மன உறுதி, படிப்பு மற்றும் காரிய வெற்றிக்கு உதவும். கார்த்திகை நட்சத்திரத்தை கொண்டவர்கள் வழிப்பட வேண்டிய முக்கிய ஆலயம் இது.
4. #ரோகிணி – நந்தீஸ்வரர் கோயில், நந்தீபுரம்
மன அழுத்தம், பணத்தடை, உறவுப் பிரச்சனை போன்றவை நிவர்த்தி செய்ய நந்தீஸ்வரரைக் கருதப்படுகிறது.
5. #மிருகசீரிடம் – ஆம்ரவனேஸ்வரர் கோயில், திருவாமூர்அ
நீதி, கல்வி மற்றும் ஆன்மீக மேம்பாடு தேவைப்படும் வாழ்வில், இந்தக் கோயில் வழிபாடு மிக அவசியம்.
6. #திருவாதிரை – நந்தீஸ்வரர் கோயில், திருநெல்வேலி
இங்கே வழிபடுவது நரம்பியல் நோய்கள் மற்றும் மனவியாதிகளை தாண்ட உதவுகிறது.
7. #பூசம் – ஆறப்பரிச்வரர் கோயில், பட்டுக்கோட்டை
அதிக கப தோஷம், மன அழுத்தம், குழந்தையின்மை போன்ற பிரச்சனைகளுக்கு சரியான பரிகாரம்.
8. #ஆயில்யம் – நகுலீஸ்வரர் கோயில், நாகப்பட்டினம்
நாக தோஷம், ராகு/கேது பகவானின் கிரஹ தோஷங்கள், குழந்தை பிரச்சனைகள் நீங்கும்.
9. #மகம் – மகாலிங்கஸ்வரர் கோயில், திருக்கடையூர்
மனம் நிலையாக இல்லாத நிலை, அதிர்ஷ்டக் குறைவு போன்றவற்றில் இருந்து விடுபட உதவும்.
10. #பூரம் – நித்தியசுந்தரேஸ்வரர் கோயில், புடுக்கோட்டை
மிகவும் சக்திவாய்ந்த ஆலயம். பரிகார பூஜைகள் செய்வதன் மூலம் கல்வி மற்றும் வேலைக்கு நல்ல முடிவுகள் கிடைக்கும்.
11. #உத்திரம் – பாகவலீஸ்வரர் கோயில், திருச்சி
அழுக்காறு, பிசாசு தோஷம் மற்றும் குடும்பக் குழப்பங்கள் தீரும்.
12. #அஸ்தம் – இராசர குபேர லட்சுமி சமேத யமராஜர் கோயில், திருக்கோவிலூர்
பரிகார யம தரிசனம், வம்ச தோஷ நிவாரணம், செல்வ வளைச்சல்.
13. #சித்திரை – சித்ரசாபதேஸ்வரர் கோயில், திருநல்லூர்
கலை, கணிதம், ஆழ்ந்த சிந்தனையை மேம்படுத்தும்.
14. #சுவாதி – முசுந்தேஸ்வரர் கோயில், புஞ்சை
மூளை சம்பந்தமான நோய்கள் மற்றும் தர்மபதி வாஸ்து தோஷங்கள் நீங்கும்.
15. #விசாகம் – முசுந்தேஸ்வரர் கோயில், மேலமங்கலம்
மதம், ஞானம், ஆன்மீகம், துறவிகள், தன்னிறைவு பெற இங்கு வழிபடலாம்.
16. #அனுஷம் – கமலாபதி சமேத கமலாம்பிகை சமேத சம்புமூர்த்தி கோயில்
பிணி நீக்கம், தீராத நோய்கள், பூர்வ ஜன்ம தோஷங்களை களைக்கும் ஆலயம்.
17. #கேட்டை – வரதராஜபெருமாள் கோயில், நாகப்பட்டினம்
நாராயணர் அருள் பெறுவதற்காக, கெட்ட சக்திகள் மற்றும் கனவிலே பயங்கரத் தோற்றங்களை நீக்க.
18. #மூலம் - ரங்கநாதசுவாமி கோயில், மயிலாடுதுறை
ஆன்மீக வளர்ச்சி, திருமண தடை, பண வசீகரம் ஆகியவற்றில் பெருமளவு பலன்கள்.
19. #பூராடம் – தண்டாயுதபாணி கோயில், மயிலாடுதுறை
இளமை, புத்திசாலித்தனமும், கல்வித் திறமையும் மேம்படும்.
20. #உத்திராடம் – ஆழ்வார்திருநகரி கோயில், திருநெல்வேலி
முன்னோர்களின் அருள், குடும்ப இணக்கம் மற்றும் நிதி நிலை நல்லது.
21. #திருவோணம் – பிரம்ம விஷ்ணு ருத்ரர் கோயில், திருநந்தி
சம்பந்தமான கிரஹ தோஷங்களைத் தீர்க்கவும், புத்தி மேம்படவும்.
22. #அவிட்டம் – பத்ரகாளி அம்மன் சமேத சிவசுந்தரேஸ்வரர் கோயில், சிகரலை
மனப் பிரச்சனை, அலர்ஜி, குழந்தை பிரச்சனைக்கு தீர்வு.
23. #சதயம் – வாடாபத்ரசாயி கோயில், திருக்கண்ணங்குடி
முதன்மை காட்சி — சதய நட்சத்திரம் பெற்றவர்கள் தொழில் முனைவோர், சமூக சேவையாளர்களுக்கு பரிகாரம்.
24. #பூரட்டாதி – சுந்தரவரதர் கோயில், திருவல்லிக்கேணி
பரிகாரம் வழிபாடு நன்மை தரும். அதிக வெற்றி, செல்வ விருத்தி.
25. #உத்திரட்டாதி – பவளக்குன்று சுவாமி கோயில், திருவண்ணாமலை
தவம், தியானம், ஆன்மீக ஒளி பெற பரிகாரம் தரும்.
26. #ரேவதி – சீதாலக்ஷ்மி சமேத ரேவதீஸ்வரர் கோயில், திருவெண்காடு
மன அமைதி, குடும்ப சமரசம், தீராத நோய்களுக்கு நிவாரணம்.
27. #ஆதிரை – நந்தீஸ்வரர் கோயில், திருநெல்வேலி
காரண நோய்கள், மூச்சுத் தடைகள், மன வலிமை வளர்க்கவும் பரிகாரம் தரும்.
நட்சத்திர ஆலயங்களுக்கு செல்வது ஏன் அவசியம்?
1. #தோஷ_நிவாரணம்:
சந்திர தோஷம், களத்திர தோஷம், நாக தோஷம், ராகு/கேது தோஷம், முன் ஜென்ம பாபம்.
2. #வாழ்க்கை_முன்னேற்றம்:
கல்வி, திருமணம், தொழில், பிள்ளை பேறு, நிதி வளர்ச்சி.
3. #ஆன்மீக_மேம்பாடு:
மன உறுதி, ஆழ்ந்த சிந்தனை, தவ வாழ்வு.
4. #சமூகவாழ்க்கை:
குடும்ப ஒற்றுமை, சமூக பண்பாடு, பொறுமை, சகிப்புத்தன்மை.
வழிபாட்டு முறை:
உங்கள் ஜாதக நட்சத்திரத்தின்படி அந்தக் கோயிலில் பவித்ரமா சென்று விஷேஷ அர்ச்சனை செய்ய வேண்டும்.
சிறப்பு அன்னதானம் அல்லது விளக்கேற்றம் செய்தால் பலன்கள் அதிகரிக்கும்.
சந்திர வாரத்தில் (திங்கட்கிழமை) பயணம் மேற்கொள்ளலாம்.
பக்திபூர்வமான நாமஜபம் மற்றும் ஸ்லோக பாராயணம் செய்வது மேலானது.
இந்த 27 நட்சத்திரக் கோயில்கள் — ஒரு ஜாதகர் வாழ்க்கையின் எல்லா பரிமாணங்களிலும் அமைதி, ஆற்றல், வளம் மற்றும் ஆனந்தத்தை கொண்டு வரும்
ஜாதகம்பார்க்க9994150658 

Thursday, 15 May 2025

திருச்செந்தூர் தல வரலாறு என்ன?


 சிவமயம் சிவாயநம

ஞானத்தை அருளக்கூடிய முருகன் இருக்கும் இடமாகிய திருச்செந்தூர் தல வரலாறு என்ன? என்பதைப் பற்றித் தெரிந்து கொள்வோம்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ள சுப்ரமணிய சுவாமி கோவில் முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடாகும். இத்தலத்தில் முருகப்பெருமான் சூரபத்மன் என்னும் அசுரனை வென்றபின் சிவபெருமானை ஐந்து லிங்கங்கள் வடிவில் வைத்து வழிப்பட்டார். அலைகள் வந்து புரளும் கடற்கரையில் இக்கோவில் அமைந்துள்ளது.
தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார்.
இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார்.
வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோவில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் ‘செயந்திநாதர்” என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே ‘செந்தில்நாதர்” என மருவியது. தலமும் ‘திருஜெயந்திபுரம்” என அழைக்கப்பெற்று, பின்பு திருச்செந்தூர் என மருவியது.
*கோவில் அமைப்பு 😘
150 அடி உயரம் கொண்ட இக்கோவிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைந்துள்ளது. முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்ட பின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சிவபெருமானுக்கு பூஜை செய்தார்.
தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கிறது. இவருக்கு முதல் தீபாராதனை காட்டிய பின்பே, முருகனுக்கு தீபாராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கிறது. இவ்விரு லிங்கங்களும் இருளில் உள்ளதால், தீபாராதனை ஒளியில் மட்டுமே காண முடியும்.
இது தவிர முருகன் சன்னதிக்கு வலப்புறத்தில் பஞ்சலிங்க சன்னதியும் இருக்கிறது. திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கிறது. முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார்.
பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைந்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒருநாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும்.
*திருக்கோவில் சிறப்புகள்:*
முருகனுக்குரிய ஆறுபடைவீடுகளில் திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், பிற ஐந்தும் மலைக்கோவிலாக அமைந்துள்ளது.
திருச்செந்தூர் கோவில் இடது பக்கத்தில் வள்ளிக்குகை உள்ளது. இந்த குகைக்கு முன்புள்ள சந்தன மலையில் தொட்டில் கட்டினால் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
திருச்செந்தூர் கோவிலில் உள்ள சண்முக விலாசம் என்னும் மண்டபம் 120 அடி உயரமும், 60 அடி அகலமும் கொண்டது. 124 தூண்கள் இதை தாங்குகின்றன.
திருச்சிற்றம்பலம்.

Wednesday, 23 April 2025

குளிக்கும் போது அல்லது திசை நோக்கி நின்று


 குளிக்கும் போது வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி நின்று குளிக்கவேண்டும். (இவை இரண்டும் உத்தம திசைகள்.

(கர்மம் செய்தபின்னும், மயானத்திற்கு சென்று வந்தால் மட்டும் தெற்கு நோக்கி நின்று குளிக்கலாம். மேற்கு திசை நோக்கி நின்று குளித்தால் உடல் நோவு வரும்).
தினமும் கங்கா ஸ்நானம் செய்யமுடியும். குளிக்கும் முன் ஒரு குவளை தண்ணீரில் மோதிரவிரலால் ஓம் என்று த்யானம் செய்து எழுதுங்கள். அந்த நீர் அப்போது முதல் கங்கை நீராக மாறிவிடும். ஒரு நிமிட த்யானத்தில் "இந்த உடலுக்குள் நீங்களே வந்திருந்து, இதை உங்களுக்கு செய்யும் அபிஷேகமாக ஏற்றுக்கொள்ளுங்கள்" என்று இறையிடம் வேண்டிக்கொண்டு குளித்தால், உள்பூசையின் அங்கமாக இறைவனுக்கு அபிஷேகமும் ஆகிவிடும். குளிப்பது, உண்மையிலேயே நாமாக இருக்காது.
அக்னி எப்போதும் மேல்நோக்கியே பயணிக்கும். உடலுக்குள் இருக்கும் அக்னி கீழிருந்து மேல் ஏறுவதுதான் சரி. தண்ணீரை கால் முதல் மேல் நோக்கி நனைத்து வந்து கடைசியில் தலையில் ஊற்றிக் கொள்ளவேண்டும்.
நமது மண்டை ஓடுக்கு எப்படிப்பட்ட அக்னியின் வேகத்தையும் தாங்குகிற சக்தி உண்டு. காலிலிருந்து பரவும் குளிரிச்சி மேல் நோக்கி பயணிக்கும் போது உள் அக்னியானது தலையை நோக்கி பயணிக்கும். அதுவே சரியான முறை.
தலை முதல் கால் வரை உள்ள பின் பாகத்தை "பிரஷ்டம்" என்பர். அதில் நம் முதுகு பாகம் தான் மிகப்பெரியது. அங்கு தான் அக்னியின் வீச்சம் கூடுதல் வேகமாக பரவும். ஆதலால், குளித்து முடித்தவுடன், முதலில் முதுகு பாகத்தைதான் துவட்ட வேண்டும்.
துவலையை (துண்டு) குளிக்கும் நீரிலே நனைத்து பிழிந்து துவட்டுவது தான் உத்தமம். அனேகமாக, அனைவரும் ஈரம் படாத துண்டைத்தான் உபயோகிப்பீர்கள். உலர்ந்த துணியானது உள் சூட்டை வேகமாக பரவச்செய்து பல வித உள் நோவுகளை உருவாக்கும்.
பிறருடன் வாய் திறந்து பேசக்கூடாத மூன்று நேரங்களில் ஒன்று, குளிக்கும் நேரம். மௌனத்தை கடைபிடிக்கலாம், அல்லது மனதளவில் தெரிந்த  செய்யலாம்.
குளிப்பதினால், பஞ்ச இந்த்ரியகளால் செய்த தவறுகளினால் நமக்குள் சேர்த்து வைத்துள்ள கர்மாக்கள் களையப் பெறுகிறது.
தண்ணீர் உடலை தழுவி, கழுவி சுத்தப்படுத்தி, நம்மை, நம் மூலத்திற்கு அழைத்துச் செல்லுகிறது. குளித்தபின் நாம் இருக்கும் நிலையே மனிதனின் சுத்த நிலை. அதை உணரவேண்டும்.
குளிக்கும் போது, வாயில் கொள்ளளவு நீரை வைத்து குளித்தபின் துப்புவதால், கண்டத்துக்குமேல் (கழுத்துக்கு) வருகிற நீர் சம்பந்தமான கட்டுகளை, நோய்களை தவிர்க்கலாம். வாயில் இருக்கும் நீர் மேல் நோக்கி எழும்பும் அக்னியின் வேகத்தை எடுத்துவிடும்.
நீர் நிலைகள், குளம், ஆறு, கடல் இவைகளில் எல்லா தேவதைகளும், பெரியவர்களும் அரூபமாக ஸ்நானம் செய்வதாக கூறுகிறார்கள். நாரம் என்கிற தண்ணீரில் நாராயணன் வாசம் செய்வதாகவும் சொல்வார்கள். ஆதலால், ஓடி சென்று அதில் குதிக்காமல், கரையில் நின்று, சிறிது நீரை எடுத்து தலையில் தெளித்தபின், நீர் கலங்காமல், ஒரு இலை நீரில் விழுகிற வேகத்தில் மெதுவாக இறங்கி சென்று குளிக்கவேண்டும்.
நீரில் காரி உமிழ்வதோ, துப்புவதோ கூடாது. நீரின்றி ஒரு உயிரும் இல்லை.
நீரை விரயம் செய்ய கடன் அதிகரிக்கும்.
உப்பு நீர் ஸ்நானம் திருஷ்டி தோஷங்களை அறுக்கும். வெள்ளியன்று குளிப்பது நல்லது...

Friday, 28 March 2025

என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார்


 என் அப்பா வயதாகிவிட்டார், நடந்து செல்லும்போது சுவரின் ஆதரவைப் பெறுவார். இதன் விளைவாக சுவர்கள் நிறமாற்றம் அடைந்தன, அவர் தொட்ட இடமெல்லாம் அவரது கைரேகைகள் சுவர்களில் பதிந்தன..

என் மனைவி இதை வெறுத்தார், சுவர்கள் அழுக்காகி வருவதாக அடிக்கடி புகார் கூறுவார்.. ஒரு நாள், என் அப்பாவுக்கு தலைவலி இருந்தது, அதனால் அவர் தலையில் சிறிது எண்ணெய் தடவினார்.. அதனால், நடந்து செல்லும்போது சுவர்களில் எண்ணெய் கறைகள் உருவாகின..
இதைப் பார்த்து என் மனைவி என்னைப் பார்த்து கத்தினாள்.. நான் என் அப்பாவைக் கத்தினேன், அவரிடம் முரட்டுத்தனமாகப் பேசினேன், நடக்கும்போது சுவர்களைத் தொடாதே என்று அறிவுறுத்தினேன்.. அவர் காயமடைந்ததாகத் தோன்றியது.. என் நடத்தையைப் பார்த்து நானும் வெட்கப்பட்டேன், ஆனால் அவரிடம் எதுவும் சொல்லவில்லை..
என் அப்பா நடந்து செல்லும்போது சுவரைப் பிடிப்பதை நிறுத்தினார்.. ஒரு நாள் அவர் சமநிலையை இழந்து கீழே விழுந்து இடுப்பு எலும்பு உடைந்து போனார்.. இடுப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் படுக்கையில் விழுந்து சிறிது நேரத்தில் எங்களை விட்டு பிரிந்து சென்றார்..
என் இதயத்தில் மிகுந்த குற்ற உணர்ச்சியை உணர்ந்தேன். அவருடைய வெளிப்பாடுகளை ஒருபோதும் மறக்கவும், சிறிது நேரத்திலேயே அவரது மறைவை மன்னிக்கவும் முடியவில்லை..
சில நாட்களுக்குப் பிறகு, எங்கள் வீட்டிற்கு வண்ணம் தீட்ட விரும்பினோம்.. ஓவியர்கள் வந்தபோது, அவரது தாத்தாவை மிகவும் நேசித்த என் மகன், ஓவியர்கள் என் தந்தையின் கைரேகைகளை சுத்தம் செய்து அந்தப் பகுதிகளை வரைய அனுமதிக்கவில்லை..
ஓவியர்கள் மிகவும் நல்லவர்களாகவும், புதுமையானவர்களாகவும் இருந்தனர்.. அவர்கள் என் தந்தையின் கைரேகைகளை அகற்ற மாட்டோம் என்றும், இந்த அடையாளங்களைச் சுற்றி ஒரு அழகான வட்டத்தை வரைந்து ஒரு தனித்துவமான வடிவமைப்பை உருவாக்குவோம் என்றும் அவருக்கு உறுதியளித்தனர்.. அதன் பிறகு இது தொடர்ந்தது. அந்த அச்சுகள் எங்கள் வீட்டின் ஒரு பகுதியாக மாறியது..
எங்கள் வீட்டிற்கு வருகை தரும் ஒவ்வொருவரும், சுவரில் உள்ள தனித்துவமான வடிவமைப்பைப் பாராட்டினர்.. காலப்போக்கில், நானும் வயதாகி விட்டேன்.. இப்போது நடக்க சுவரின் ஆதரவு எனக்கும் தேவைப்பட்டது. ஒரு நாள் நடக்கும்போது, என் தந்தையிடம் நான் சொன்ன வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டேன், ஆதரவின்றி நடக்க முயற்சித்தேன்..
என் மகன் இதைப் பார்த்தான். உடனே என் அருகில் வந்து, நடந்து செல்லும்போது சுவர்களைத் தாங்கிப் பிடிக்கச் சொன்னான். நான் ஆதரவு இல்லாமல் விழுந்திருப்பேனோ என்று கவலைப்பட்டான். என் மகன் என்னைப் பிடித்துக் கொண்டிருப்பதை உணர்ந்தேன். என் பேத்தி உடனடியாக முன்னோக்கி வந்து அன்பாக, அவள் தோளில் என் கையை வைக்கச் சொன்னாள். நான் கிட்டத்தட்ட அமைதியாக அழ ஆரம்பித்தேன்.
நான் என் தந்தைக்கு அதையே செய்திருந்தால், அவர் நீண்ட காலம் வாழ்ந்திருப்பார்.. என் பேத்தி என்னை அழைத்துச் சென்று சோபாவில் உட்கார வைத்தாள்.. பின்னர் அவள் தனது ஓவியப் புத்தகத்தை எடுத்து எனக்குக் காட்டினாள்.. அவளுடைய ஆசிரியர் அவள் வரைந்ததைப் பாராட்டி, அவளுடைய சிறந்த கருத்துக்களைக் கூறினார்..
அந்த ஓவியம் சுவர்களில் என் தந்தையின் கைரேகையைக் கொண்டிருந்தது.
அவள் கருத்து - "ஒவ்வொரு குழந்தையும் தங்கள் பெரியவர்களை அதே வழியில் நேசிக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்."
நான் என் அறைக்குத் திரும்பி வந்து, என் மறைந்த தந்தையிடம் மன்னிப்பு கேட்டு, அதிகமாக அழுதேன்..
காலப்போக்கில் நாமும் வயதாகிவிடுவோம்.. நம் வீட்டில் பெரியவர்கள் இன்னும் இருந்தால், அவர்களைக் கவனித்துக்கொள்வோம். நம் குழந்தைகளுக்கும் நம் முன்மாதிரியாக அதையே செய்யக் கற்றுக் கொடுப்போம்.
(ஒரு அழகான செய்தியின் தமிழ் மொழிபெயர்ப்பு)
இந்தக் கதை என் இதயத்தைத் தொட்டது. மேலும், வயதாகி வரும் என் நண்பர்கள் மற்றும் அறிமுகமானவர்களுடன் பகிர்ந்து கொள்வதாக உணர்ந்தேன்.
மிகவும் நெகிழ்ச்சியானது.. நம்மில் பெரும்பாலோர் எப்போதாவது நம் வயதான பெற்றோருடன் இதே போன்ற தவறுகளைச் செய்திருக்கலாம்.
வணக்கம்🙏

Thursday, 27 March 2025

நல்ல அர்த்தமுள்ள தமிழ் பழமொழிகள் சிந்தித்து ரசிப்பதற்கு...


 1. தங்கச் செருப்பானாலும் தலைக்கு ஏறாது.

2. தீயில் இட்ட நெய் திரும்ப வராது.
3. நாடு கடந்தாலும் நாய்க்குணம் போகாது.
4. தேரோடு போச்சுது திருநாள். தாயோடு போச்சுது பிறந்தகம்.
5. தெய்வம் காட்டுமே தவிர ஊட்டாது.
6. செத்த பிணத்திற்கு அருகே இனி சாகும் பிணம் அழுகிறது.
7. கரந்தப் பால் காம்பில் ஏறாது.
8. கடலைத் தாண்ட ஆசையுண்டு, கால்வாயை தாண்ட கால் இல்லை.
9. கரும்பு கசப்பது வாய்க்குற்றம்.
10. கடன் வாங்கிக் கடன் கொடுத்தவனும் கெட்டான்.
மரம் ஏறி கை விட்டவனும் கெட்டான்.
11. காட்டிலே செத்தாலும் வீட்டிலே தான் தீட்டு.
12. கூப்பாட்டால் சாப்பாடாகுமா?
13. எரிகிற வீட்டை அவிக்க கிணறு வெட்ட நாள் பார்த்தது போல, கும்பிட்ட கோயில் தலை மேல் இடிந்து விழுந்தது போல, சில்லரைக் கடன் சீரழிக்கும்.
14. சொப்பனங்கண்ட அரிசி சோற்றுக்கு ஆகுமா?
15. உறவு போகாமல் கெட்டது, கடன் கேளாமல் கெட்டது. (எத்தனை பெரிய உண்மை. போய் வந்து கொண்டிருந்தால் தான் உறவு நிலைக்கும். கொடுத்த கடனைக் கேட்டுக் கொண்டே இருந்தால் தான் திரும்பக் கிடைக்கும்).
16. அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் அமிர்தமுமா?
(இன்று பலரும் இப்படித்தானே இருக்கிறார்கள்?)
17. ஆனை இருந்து அரசாண்ட இடத்தில் பூனை இருந்து புலம்பி அழுகிறது.. (எல்லாம் காலத்தின் கோலம்.)
18. அறப்படித்தவன் அங்காடிக்குப் போனால் விற்கவும் மாட்டான், வாங்கவும் மாட்டான்.
(அதிகமாய் படித்தவர்கள் பலரும் இப்படித்தான்).
19. உள்ளப் பிள்ளை உரலை நக்கிக் கொண்டிருக்க மற்றொரு பிள்ளைக்கு மனம் ஏங்குதாம்.
20. இறுகினால் களி. இளகினால் கூழ்.
21. ஊன்றக் கொடுத்த தடி மண்டையைப் பிளந்தது.
(யாருக்கு உதவுகிறோம் என்று சிந்தித்து உதவா விட்டால் இப்படித்தான்)
22. எடுப்பது பிச்சை. ஏறுவது பல்லாக்கு.
(பலருடைய போக்கு இப்படித்தான் இருக்கிறது)
23. எட்டி பழுத்தென்ன? ஈயாதார் வாழ்ந்தென்ன?
(எட்டி பழுத்தாலும் அதன் கசப்பால் சாப்பிட உதவாது. கஞ்சனுக்கு எத்தனை செல்வம் வந்தாலும் அதில் யாரும் பலன் அடைய முடியாது).
24. விசாரம் முற்றினால் வியாதி. (கவலை அதிகமானால் வியாதியில் தான் முடியும்).
25. பைய மென்றால் பனையையும் மெல்லலாம்.
(நிதானமாக சிறிது சிறிதாக மென்றால் பனையைக் கூட மென்று விடலாம்.

Wednesday, 26 March 2025

மகிழ்ச்சியான திருமணத்திற்கு 10 ரகசியங்கள்


 மகிழ்ச்சியான திருமணத்திற்கு 10 ரகசியங்கள்

ரகசியம் 1
இங்கு திருமணம் செய்து கொள்ளும் ஒவ்வொருவருக்கும் ஒரு பலவீனம் உள்ளது. கடவுளுக்கு மட்டுமே பலவீனம் இல்லை. எனவே உங்கள் துணையின் பலத்தில் கவனம் செலுத்தாமல், பலவீனத்தில் கவனம் செலுத்தினால் அவருடைய சிறந்த திறமைகளை, சிறந்த விஷயங்களை உங்களால் பெற முடியாது.
ரகசியம் 2
ஒவ்வொருவருக்கும் இருண்ட வரலாறு உண்டு. யாரும் இங்கு உத்தமர் இல்லை. நீங்கள் திருமணம் செய்து கொள்ளும்போது ஒருவரின் கடந்த காலத்தை தோண்டி எடுப்பதை நிறுத்துங்கள். உங்கள் துணையின் தற்போதைய வாழ்க்கை மிகவும் முக்கியமானது. கடந்த கால விஷயங்கள் மறைந்துவிட்டன. இனி நல்ல எதிர்காலத்தில் கவனம் செலுத்துங்கள்.
ரகசியம் 3
ஒவ்வொரு திருமணமும் சவால்கள் நிறைந்ததே. திருமணம் என்பது ரோஜாக்களின் படுக்கை அல்ல. ஒவ்வொரு நல்ல திருமணமும் நெருப்பில் நீந்துவதை போன்றது. உண்மையான அன்பு, சவாலான நேரங்களில் நிரூபிக்கப்பட வேண்டும். உங்கள் திருமணத்திற்காக போராடுங்கள். தேவைப்படும் சமயங்களில் உங்கள் துணையுடன் நிற்க மனதை உறுதி செய்யுங்கள். நோயிலும் ஆரோக்கியத்திலும் இணைந்திருக்க போவது நீங்கள் இருவர் மட்டுமே.
ரகசியம் 4
ஒவ்வொரு திருமணமும் வெற்றியின் வெவ்வேறு நிலைகளைக் கொண்டுள்ளது. உங்கள் திருமணத்தை வேறு யாருடனும் ஒப்பிடாதீர்கள். இங்கு யாரும் சமமாக இருக்க முடியாது. சிலருக்கு விரைவில் நடக்கலாம். சிலருக்கு கால தாமதமாகலாம். திருமண அழுத்தங்களைத் தவிர்த்து, பொறுமையாக இருங்கள், நம்பிக்கையோடு இருங்கள், காலப்போக்கில் உங்கள் திருமணக் கனவுகள் நனவாகும்.
ரகசியம் 5
திருமணம் செய்துகொள்வது என்பது போர் அறிவிப்பதாகும். திருமணத்தின் எதிரில் நிற்கும் சில எதிரிகள்:
அறியாமை
மன்னிக்காத தன்மை
மூன்றாம் மனிதர் செல்வாக்கு
கஞ்சத்தனம்
பிடிவாதம்
அன்பு இல்லாமை
முரட்டுத்தனம்
சோம்பல்
அவமரியாதை
ஏமாற்றுதல்
உங்கள் திருமண பந்தத்தை காப்பாற்ற இவர்களை எதிர்த்து போராட தயாராக இருங்கள்.
ரகசியம் 6
திருமணம் வாழ்க்கை என்பது அதீத கவனம் தேவைப்படும் கடினமான வேலை. திருமணம் என்பது சரியான பராமரிப்பு மற்றும் சரியான கவனம் தேவைப்படும் ஒரு கார் போன்றது. இதைச் செய்யாவிட்டால், அது எங்காவது ரிப்பேர் ஆகி, உரிமையாளருக்கு ஆபத்து அல்லது சில ஆரோக்கியமற்ற சூழ்நிலைகளை வெளிப்படுத்தும். திருமண வாழ்க்கையில் அலட்சியமாக இருக்க வேண்டாம்.
ரகசியம் 7
நீங்கள் விரும்பும் ஒரு முழுமையான வாழ்க்கை துணையை கடவுளால் கூட கொடுக்க முடியாது. நீங்கள் விரும்பும் நபரை நீங்கள் மாற்றிக்கொள்ளும் வகையில் அவர் மூலப்பொருட்களின் வடிவில் ஒரு துணையை கொடுக்கிறார். காதல், அக்கறை, அன்பு, விசுவாசம் மற்றும் பொறுமை மூலம் மட்டுமே இதை அடைய முடியும்
ரகசியம் 8
திருமணம் செய்வது மிகப்பெரிய ஆபத்தை எடுத்துக்கொள்கிறது. எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று கணிக்க முடியாது. சூழ்நிலைகள் மாறக்கூடும், எனவே மாற்றங்களுக்கு இடம் கொடுக்க தயாராக இருங்கள். கணவர் தனது நல்ல வேலையை இழக்க நேரிடலாம் அல்லது நீங்கள் குழந்தைகளைப் பெறத் தவறலாம். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.
ரகசியம் 9
திருமணம் என்பது தற்காலிக ஒப்பந்தம் அல்ல. அது நிரந்தரமானது. அதற்கு முழு ஈடுபாடு தேவை. காதல் என்பது ஜோடியை இணைக்கும் பசை. விவாகரத்து பெறுவதைப் பற்றிய எண்ணங்களை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள். விவாகரத்து செய்வதாக உங்கள் மனைவியை ஒருபோதும் அச்சுறுத்தாதீர்கள். இயலாமையின் வெளிப்பாடே ஒருவரை அச்சுறுத்துவது.
ரகசியம் 10
ஒவ்வொரு திருமணத்திற்கும் ஒரு விலை கொடுக்க வேண்டும். திருமணம் என்பது வங்கிக் கணக்கு போன்றது. நீங்கள் டெபாசிட் செய்யும் பணம்தான் நீங்கள் திரும்பப் பெறுகிறீர்கள். உங்கள் திருமணத்தில் அன்பு, அமைதி மற்றும் அக்கறையை நீங்கள் டெபாசிட் செய்யவில்லை என்றால், நீங்கள் ஒரு ஆனந்தமான, சொந்த வீட்டிற்கு உரிமையாளராக முடியாது .
திருமண வாழ்க்கையை தியாகம் என்று நினைக்கும் ஒவ்வொருவருக்கும் இந்த கட்டுரையை ஷேர் செய்யுங்கள்.
புரிந்தால் வாழ்க்கை உங்களுடையது.. வாழ்த்துக்கள்.

Saturday, 15 March 2025

கர்மா


 கர்மா எப்படி செயல்படுகிறது?

நான் ஏன் இப்படி இருக்கிறேன்?
அவன் என்னை விட நன்றாக இருக்கின்றானே? என்னை விட நன்றாக வாழ்கின்றானே?
நான் நல்லது செய்தும் இப்படி நாயாய், பேயாய் அவதிப்படுகிறேனே?
நான் முயற்சி செய்தும் எல்லாம் தள்ளிப்போகிறது. அவனுக்கு அதிர்ஷ்டம் வாசலில் வந்து நிற்கிறது.
இப்படிப்பட்ட புலம்பல்களை நாம் தினமும் கேட்கிறோம்.
ஆனால் இதற்கு என்ன காரணம் என்பதை யாராலும் சொல்ல முடியாது. என்னதான் பரம்பரை காரணம் என்றாலும்கூட, திடமான விளக்கத்தை யாராலும் தரமுடியாது.
ஆனால் நம்முடைய சமயச்சான்றோர்கள் இதற்கு ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்லுகிறார்கள். அதுதான் கர்மா. அது ஒவ்வொரு உயிர்களின் பிறப்பிலும் தொடர்ந்து வந்து வேலை செய்கின்றது.
இரண்டு நாய்கள் உள்ளன.
ஒன்று சொறி சிரங்குகளுடன், ஒருவேளை உணவுக்கு படாதபட்டு தெருவில் அலைகிறது; கல்லடிபடுகிறது.
இன்னொரு நாய் விலையுயர்ந்த பிஸ்கட்டுகளை சாப்பிட்டுக் காரில் எஜமானரின் மடியில் அமர்ந்து போகிறது. அதற்கு என்ன காரணம்?
ஓர் உயிர் செய்யும் செயல்களின் வினைத்தொகுதியே கர்மாவாக உருவெடுக்கிறது. அந்தச் செயல்களின் தொடர்ச்சியே நல்வினை, தீவினை என்ற இருவேறு நிலைகளில் அந்த உயிரை மட்டுமே தொடரும் கர்மாவின் பலன்களாகும்.
ஓர் உயிர் ஒரு செயலைச் செய்யும்போது அது கர்மாவாகிறது. ஒருசெயல் முடிந்த பின்புதான் அது கர்மாவிற்கான கர்மப்பலன்களாக உருவாகிறது.
ஓர் உயிர் எந்த செயல்களையுமே செய்யாமல், ஜடநிலையில் எந்த இயக்கமும் இன்றி இருக்கும்பொழுது, அந்த உயிருக்கு எந்தவிதமான கர்மாவும் இல்லை. கர்ம பலன்களும் இல்லை.
இதைப் புரிந்தவர்கள் தவயோகிகள். தங்கள் செயல்களை தாங்களே கட்டுப்படுத்தும் ஆற்றல் அவர்களுக்கு தவவலிமையால் ஏற்படுகிறது. அதனால் அவர்களை எந்த தர்மபந்தங்களும் தொடர்வதில்லை.
கர்மா என்பது தமிழில் ‘வினை’ அல்லது ‘வினைத்தொகுதி’ என்று பேசப்படுகிறது. அது எப்படி வேலை செய்யும் என்பதைப் புரிந்து கொள்ள இந்தக் கதை.
முன்னொரு காலத்தில் பத்மநாபர் என்ற பெயருடைய ஒரு செல்வந்தர் தன் மனைவியோடு வாழ்ந்து வந்தார். அவரும் அவருடைய மனைவியும் மிகவும் உயர்ந்த குணமுடையவர்கள். அவர்கள் சுற்றுப்புறத்தில் வாழும் துறவிகளுக்கும் தவசிகளுக்கும் தினமும் உணவளித்து பசியாற்றி வந்தனர்.
ஒருநாள் பத்மநாபரும் அவருடைய மனைவியும் வழக்கம்போல் உணவளித்துக் கொண்டிருந்தனர். அப்போது சற்று தூரத்தில் ஒரு வயதான துறவி பசியோடும் தாகத்தேடும் வருவதை பத்மநாபரின் மனைவி கண்டார்.
அந்த துறவி வெகுதூரத்தில் இருந்து மிகவும் களைப்போடும் பசியோடும் வருவதை அவள் அறிந்தாள். கோடைகாலம் என்பதால் சுட்டெரிக்கும் வெப்பம் மற்றும் நீர்ப்பற்றாக்குறையால் அந்த துறவி மிகவும் பலவீனமாகக் காணப்பட்டார்.
உடனே பத்மநாபரின் மனைவி ஒருபாத்திரத்தில் உணவையும் ஒருகோப்பையில் பசும்பாலையும் நிரப்பி அந்த துறவியிடம் விரைந்து சென்றார்.
“துறவிரே, நீங்கள் மிகவும் களைப்பாகவும் பசியொடும் காணப்படுகிறீர்கள். உங்களுக்காக நான் உணவு கொண்டு வந்திருக்கிறேன். அதோ அங்கே ஒருகுளம் உள்ளது. அங்கு சென்று உங்கள் கைகால்களை கழுவிக் கொள்ளலாம்” என அந்த துறவியாரிடம் பத்மநாபரின் மனைவி கூறினார்.
உணவு உண்பதற்கு முன் கண்டிப்பாக கைகால்களைக் கழுவ வேண்டியது ஆசாரமாகும்.
துறவியாரும் அந்த குளத்தருகே சென்று உணவை ஒரு ஆலமரத்தடியில் வைத்துவிட்டு கைகால்களைக் கழுவச் சென்றார்.
அப்போது அம்மரத்தின் மேல் ஒருகழுகு ஒரு கடும் விஷம் கொண்ட நாகத்தை வேட்டையாடிக் கொண்டு வந்து அம்மரத்தில் அமர்ந்து கொத்தித் தின்று கொண்டிருந்தது.
எதிர்பாராத விதமாக, அந்த நாகத்தின் வாயில் இருந்து கசிந்த கடும் விஷம் அத்துறவி வைத்துச் சென்ற பாலில் விழுந்து கலந்தது.
அந்த துறவியும் கைகால்களை நன்கு கழுவிய பின் மரத்தடிக்கு வந்து அந்த ஆகாரங்களையும் பாலையும் உண்ண ஆரம்பித்தார்.
அவர் இல்லாத வேளையில் அங்கு நிகழ்ந்த சம்பவத்தை அவர் அறியவில்லை. உடனே, அவரின் வயிற்றில் கடுமையான எரிச்சலும் தாங்கமுடியாத வலியும் ஏற்பட்டது.
அவர் உண்ட உணவில் நஞ்சு கலந்திருக்கலாம் என்பதை அவர் உடனே யூகித்தார். பத்மநாபரின் இல்லத்திற்கு விரைந்து சென்று “உதவி உதவி” என அலறினார்.
துறவியின் குரலைக் கேட்டு வெளியில் ஓடிவந்த பத்மநாபரின் மனைவி துறவியின் மேனியெல்லாம் நிறம் மாறியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள்.
தாம் அளித்த உணவை உண்ட பின்னர் தான் துறவி இந்நிலைக்கு ஆளாக்கினார் என்பதை துறவியிடம் இருந்து அறிந்து திடுக்கிட்டார்.
உடனே விஷமுறிவு மருத்துவரை அழைத்து வந்தார். ஆனால், மருத்துவர் சிகிச்சையைத் தொடங்கும் முன்னரே அத்துறவி மடிந்தார்.
இதை அறிந்த பத்மநாபர் மிகவும் மனம் நொந்து போனார். துறவியைக் கொலை செய்த மகாபாதகத்தை எண்ணி வருந்தினார். எந்தவொரு பாவமும் செய்யாவிடினும் அவரின் மனைவி மிகவும் மனம் உடைந்து போனாள்.
பாதகத்தை ஏற்றுக் கொண்டு கணவனைப் பிரிந்து வனவாசம் சென்றாள். அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்தின் பரிகாரமாக அவர் சந்நியாசத்தை எடுத்துக் கொண்டார்.
யமலோகத்தில் பாவ புண்ணியக் கணக்குகளை எழுதும் சித்ரகுப்தன் குழம்பினார். துறவியைக் கொன்ற பாவத்தை யார் கணக்கில் எழுதுவது என வியந்தார். அதை எமதர்மனிடம் வினவினார்.
“பிரபுவே! பாம்பின் விஷம் கலந்த பாலைப் பருகி கொலையுண்ட துறவியின் பாவத்தை யார் கணக்கில் எழுதுவது?
கண்டிப்பாக அந்தப் பாம்பு பாவியல்ல.
கழுகின் பிடியில் சிக்கி இரையாகிக் கொண்டிருந்த அப்பாம்பின் மீது எந்தவொரு குற்றமில்லை.
அந்த கழுகின் மீதும் எந்தவொரு பாதகமும் இல்லை.
ஐந்தறிவு ஜீவனாகிய அது தன்னுடைய பசிக்காக இரையை வேட்டையாடித் தின்றது.
புசித்தவருக்கு உணவளித்து உயர்வான புண்ணிய செயல்களைச் செய்த பத்மநாபரோ, அவருடைய மனைவியோகூட இந்த பாதகத்திருக்குப் பொறுப்பல்ல.
பிறகு யாருடைய கணக்கில் தான் இருந்த மகாபாதகத்தை எழுதுவது? தாங்களே அறிவிக்க வேண்டுகிறேன்” என சித்திரகுப்தன் எமனிடம் கேட்டான்.
சித்திர குப்தன் கூறியது போலவே அந்த நாகமோ, கழுகோ அல்லது பத்மநாபர் தம்பதியினரோ, இந்த பாதகத்திற்குப் பொறுப்பல்ல.
மாறாக, நடந்த உண்மை சம்பவத்தை அறியாமல், யாரெல்லாம் மற்றவர்கள் மீது வீண்பழி சுமத்தி சாடுகிறார்களோ, அவர்களுக்கே அந்த பாதகம் போய் சேரும் என எமதர்மன் விளக்கம் தந்தார்.
ஒருவர் தவறு செய்தார் என எந்தவொரு உறுதியான ஆதாரமும் இல்லாத பட்சத்தில் அவரை பாவி என சாடுவது, அப்படி சாடுபவர்க்கே தீய கர்ம வினையை ஏற்படுத்தும்.
அது எத்தகைய பாவத்துக்காக நாம் அவரை சாடுகிறோமோ, அதைப் பொறுத்தே நமக்கும் அந்த தீவினை ஏற்படும். இதையே இக்கதையின் மூலம் புராணம் எடுத்துரைக்கின்றது

கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக

 இல்லத்தரசிகள் கேஸ் சிலிண்டர் பற்றி கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்க வேண்டிய ஒன்று நேற்று இரவு நல்ல மழை டிபன் இட்லி சாம்பார். மாவை ஊத்தி அடுப...