Thursday, 2 April 2026

ஒரு மனிதன்.

 ஒரு மனிதன்....

எந்தக்குறையும் இல்லை அவனுக்கு... ஆனாலும் மனசில் நிம்மதி இல்லை. படுத்தால் தூக்கம் வரவில்லை. சிரமப்பட்டான்...
அவன் மனைவி பரிதாபப்பட்டு ஒரு யோசனை சொன்னாள்... "பக்கத்துலே உள்ள காட்டுலே ஒர் ஆசிரமம் இருக்கு... அங்கே ஒரு பெரியவர் இருக்கார்... போய்ப் பாருங்கள்".
ஆசிரமத்துக்குப் போனான். பெரியவரைப் பார்த்தான். "ஐயா... மனசுலே நிம்மதி இல்லே... படுத்தா தூங்க முடியலே".
அவர் நிமிர்ந்து பார்த்தார்...
"தம்பி... உன் நிலைமை எனக்குப்புரியுது. இப்படி வந்து உட்கார்".
பிறகு அவர் சொன்னார்:
"உன் மனசுக்கு சில ரகசியங்கள் தெரியக் கூடாது. தெரிந்தால் உன் நிம்மதி போயிடும்".
"அது எப்படிங்க?"
"சொல்றேன்... அது மட்டுமல்ல மனம் தேவையில்லாத சமயங்களிலே, தேவையில்லாத சுமைகளைச் சுமக்கறதும் இன்னொரு காரணம்"
"ஐயா... நீங்க சொல்றது..
எனக்கு புரியலே''
"புரியவைக்கிறேன்.... அதற்கு முன் ஆசரமத்தில் விருந்து சாப்பிடு.."
வயிறு நிறைய சாப்பிட்டான். பெரியவர் அவனுக்கு சுகமான படுக்கையைக் காட்டி, "இதில் படுத்துக்கொள்" என்றார். படுத்துக் கொண்டான்... பெரியவர் பக்கத்தில் உட்கார்ந்து கதை சொல்ல ஆரம்பித்தார்...
கதை இதுதான்:
ரயில் ஒன்று புறப்படப்போகிறது...
அவசர அவசரமாக ஒருவன் ஓடி வந்து ஏறுகிறான்.. அவன் தலையில் ஒரு மூட்டை.. ஒர் இடம் பிடித்து உட்கார்ந்தான். ரயில் புறப்பட்டது... தலையில் சுமந்த வந்த மூட்டையை மட்டும் அவன் கிழே இறக்கி வைக்கவில்லை..
எதிரே இருந்தவர் கேட்கிறார்:
"ஏம்ப்பா எதுக்கு அந்த மூட்டையைச் சுமந்துக்கிட்டு வர்ற.. இறக்கி வையேன்".
அதற்கு அவன் சொல்கிறான்... "வேணாங்க.. ரயில் என்னை மட்டும் சுமந்தா போதும் என் சுமையை நான் சுமந்துக்குவேன்.'
பெரியவர் கதையை முடித்தார். படுத்திருந்த நம்ம ஆசாமி சிரித்தான்.
"ஏன் சிரிக்கிறே?"
"பைத்தியக்காரனா இருக்கானே.. ரயிலை விட்டு இறங்கும் போது, மூட்டையை தூக்கிட்டு இறங்கினா போதாதா? அது அவனுக்கு தெரியவில்லையே.. யார் அவன்?" இயல்பாக கேட்டான் நிம்மதி தேடி வந்த ஆசாமி.
"நீதான்" என்றார் பெரியவர்..
"என்ன சொல்றீங்க?"
பெரியவர் சொன்னார்..
"வாழ்க்கை என்பதும் ஒரு
ரயில் பயணம் மாதிரிதான்... பயணம் பூராவும் சுமந்து கொண்டே போகிறவர்கள் நிம்மதியாக வாழமுடியாது. தேவைப்படுகிறதை மட்டும் மனசில் வைத்துக்கொள்".
அவனுக்கு தனது குறை மெல்லப் புரிய ஆரம்பித்தது... சுகமாக தூக்கம் வந்தது. தூங்க ஆரம்பித்து விட்டான்...
கண் விழித்த போது எதிரே பெரியவர் நின்று கொண்டிருந்தார். "எழுந்திரு" என்றார்
எழுந்தான்...
"அந்த தலையணையைத் தூக்கு" என்றார். தூக்கினான்... அடுத்த கணம் "ஆ"வென்று அலறினான்.
தலையணையின் அடியில் ஒரு நாகப் பாம்பு, சுருண்டுபடுத்திருந்தது.
"ஐயா என்ன இது?"
"உன் தலைக்கு வெகு அருகில் ஒரு பாம்பு.. அப்படி இருந்தும் நீ நிம்மதியாய் தூங்கி இருக்கிறாய்".
"அது ... அது எனக்குத் தெரியாது"...
"பாம்பு பக்கத்தில் இருந்த ரகசியம் உன் மனசுக்குத் தெரியாது... அதனால்
நிம்மதியாகத் தூங்கியிருக்கிறாய்".
அவன் புறப்பட்டான்,,
"நன்றி பெரியவரே...
நான் போய் வருகிறேன்".
"நிம்மதி எங்கே இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டாயா?
"புரிந்து கொண்டேன்..
என் மனசுக்குள்ளேயே ஒளிந்து கொண்டிருக்கிறது. அறிவின் வெளிச்சத்தால் அதைக்தேடிக்கண்டு பிடித்து விட்டேன்.. 

No comments:

Post a Comment